சென்னை,பிப்.2- தங்கத்தால் ஆன வளையலில் 48 ஆயிரத்து 975 வைரங்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு புதிய வளையல் நகை வடிவமைக்கும் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேடிஎம் ஜுவல்லரி நிறுவனத்தின் ஓசன் சபையர் பிராண்ட் சார்பில் மிடில் மிஸ்ட் என்ற பெயரில் இந்த கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர்களின் அளவில்லா கலைத்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படைப்பு இந்திய கைவினை கலைஞர்களின் திறனுக்கு மேலும் பெருமை சேர்க்க கூடியதாக அமைந்துள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினித் அம்மாசி சந்திரன் கூறினார். இந்த வளையலை துல்லியமாக செதுக்கி வடிவமைக்க 1860 மணி நேரம் ஆனதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தியாவின் கோஹினூர் வைரம் போல் இந்த வளையலும் பேசப்படும் என்று அவர் கூறினார். 935 கிராம் தங்கத்தில் பதிக்கப்பட்டுள்ள வைரங்களுடன் சேர்த்து இந்த வளையல் விலை 4.15 கோடி ரூபாய் ஆகும். இந்த வளையலை பொதுமக்கள் பார்வையிட்ட பின்னர் டெல்லியில் ஏலம் விடப்படவுள்ளது.