அம்பத்தூர், ஜன. 9- தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் குமார் (37), மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வியாழக்கிழமை (ஜன. 9) காலை காரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்து எரியும் போது, காரில் இருந்த கண்ணாடிகள், பேட்டரிகள் வெடித்துச் சிதறியது இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.