districts

img

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 5 பெண்கள் உட்பட 14பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி, மே 16 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வீர மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே தெலுங்கானாவிலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்த காரின் முன்பக்க டயர் வெடித்து தாறுமாறாக ஓடி எதிரில் வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை 5 பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். ஹைதராபாத்தில் நிஜாமாபாத் ஜில்லா வில் இருந்து 5 பேர் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்டனர். இவர்கள் பல்வேறு நகரங்களில் உள்ள ஆன்மிக தலங்களை பார்த்துவிட்டு வியாழன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்வதற்காக திரு வண்ணாமலையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தனர். இந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வீர மங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார்  எலவனா சூர்கோட்டையிலிருந்து 8 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி பின்பு சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.  இந்து விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் கார் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த எல வனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

;