நாமக்கல், டிச.26- பள்ளிபாளையம் அருகே சாலையில் பழுதாகி நின்ற பேருந்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலை, எஸ்பிபி காலனி பகுதியில் இருந்து ஈரோடு நோக்கி செல்வதற்காக வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஈரோடு மாவட்டம், சித்தோட்டைச் சேர்ந்த கௌதமன் என்பவர் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதனன்று ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பள்ளி பாளையம் ஆர்.எஸ் பிரிவு சாலை அருகே எதிர்பாராத விதமாக, அரசு பேருந்து வேகத்தடையில் ஏறும் பொழுது பழுது ஏற்பட்டு, இருசக்கர வாகனத்தின் மீது மோதி நின்றது. இதனையடுத்து நீண்ட நேரமாகியும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால், பேருந்து பயணிகள் மற்றும் பொது மக்கள் பேருந்தில் பின்பக்கத்தில் இருந்து தள்ளினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வேகத்தடையில் இருந்து மீண்ட அரசு பேருந்து ஸ்டார்ட் ஆகியது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.