திருநீர்மலை பேரூராட்சியில் குப்பை கிடங்காக மாறிய சுடுகாடு
பல்லாவரம், ஜூலை 29 - பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கான சுடுகாடு பல்லாவரம் - திருநீர்மலை பிரதான சாலையில், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது. மர்ம நபர்கள் சிலர் குப்பை, உணவு மற்றும் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை வாகனங்களில் கொண்டு வந்து இந்த சுடுகாட்டில் கொட்டுகின்றனர். இதனால் சுடுகாடு முழுவதும் குப்பை குவிந்துள்ளது. இவ்வாறு குப்பை கொட்டும் நபர்கள் மீது, பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், நாளுக்கு நாள் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் சுடுகாடு குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருநீர்மலை சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை புதைக்க சுடுகாட்டிற்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது இந்த குப்பை தீ வைத்து எரிக்கப்படுவதால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்படுகிறது. பொதுமக்கள் மூச்சுத் திணறலுக்கும், கண் எரிச்சலுக்கும் உள்ளாகின்றனர். எனவே, சுடுகாட்டில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், குவிந்து கிடக்கும் குப்பையைஅகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.
காலமானார்
சென்னை, ஜூலை 29 -சமூக செயற்பாட்டாளர் ‘ஸ்பிக்’ விஜயனின் தாயார் கே.எஸ். ராஜலட்சுமி ஞாயிறன்று (ஜூலை 28) காலமானார். அவருக்கு வயது 86. அன்னாரது உடல் எண், 7, வி.வி. காலனி, ஆதம்பாக்கம், சென்னை (கக்கன் பாலம், காவல் நிலையம் அருகில்) என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று நண்பகல் 12 மணியளவில் அன்னாரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு என்ஜிஓ காலனி பேருந்து நிலையம் அருகே உள்ள பாலகிருஷ்ணா புரம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.