கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து கோவையில் வரும் ஜூலை 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை கொடிசியா அரங்கில் புத்தக திருவிழாவை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதும் இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது:
கோவை புத்தக திருவிழா 5 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக புத்தக திருவிழா நடைபெறுவதில் சிரமம் இருந்தது. இந்தாண்டு புத்துணர்ச்சியுடன் 6வது ஆண்டாக புத்தக திருவிழா நடைபெறும். 10 நாள் நடைபெறும் விழாவில் 300க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். 2 லட்சம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
இந்த புத்தக விழாவை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைக்கிறார்.
இதில் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு லட்சம் மாணவ மாணவிகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி 5 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து திருக்குறள் வாசிக்க உள்ளனர். ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்த புத்தக திருவிழாவில் இளம் படைப்பாளர்களுக்கு விருதுகளும், வாழ் நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் வருகை தர உள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி புத்தக திருவிழா நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.