districts

img

தருமபுரி: ஏரியின் நடுவே 6 வழிச்சாலையா?

தருமபுரி, பிப். 17- ஏரியின் நடுவே 6 வழிச்சாலை அமைக்கும் முயற்சிக்கு தருமபுரி மாவட்டம், கொலசனஅள்ளி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொலசனஅள்ளி ஊராட்சியில் உள்ள தாசன் கவுண்டன் ஏரி உள்ளது. இந்த ஏரியின்  மூலம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற்று வருகிறது. இந்த விவ சாய நிலங்களில் கரும்பு, நெல், வாழை, காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த ஏரியின் பாசன வசதியால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, மழைப் பொழிவினால் இந்த ஏரியல் தண்ணீர் நிரம்பி உள்ளது.  இந்நிலையில், இந்த தாசன் கவுண்டன் ஏரியின் நடுவே  6 வழிச்சாலை பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைப்பெற்று வந்தது. ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் கடந்த சில மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏரியை மூடி பணியினை செய்ய திட்டமிட்டு, சில நாட்களாக ஏரியில் லாரி லாரியாக நொரம்பு மண்னை கொட்டி வருகின்றனர். இது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏரியின் நடுவே சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏரியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினரின் உதவியுடன் 6 வழிச்சாலை ஒப்பந்ததாரர்கள் ஏரியை நொரம்பு மண் கொட்டி அழித்து வருகின்றனர். இதனால், விவசாயிகளின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஏரியின் நடுவே சாலை அமைக்கும் பணியை கைவிட்டு வேறு வழியில் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, ஏரியையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும், என்றனர்.