சேலம், பிப்.17- நெகிழிப் பைகளை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 6900 சதுர அடி பரப்பளவில் துணிப்பையை கையால் தைத்து 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவி கௌசிகா, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும், நெகிழிப் பைகளை தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 1300 மீட்டர் நீளம் கொண்ட துணியை பயன்படுத்தி 6 ஆயிரத்து 900 சதுர அடியில் துணிப்பையை கைகளால் தைத்து உலக சாதனையை செய்துள்ளார். நெகிழிப் பைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் காலநிலை மாற்றமும் அவ்வப்போது மாறி வருகிறது. சுற்றுலாத் தலம் மற்றும் மலைப்பகுதிகளில் நெகிழிப் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால், நீர்நிலைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பழைய முறைகளில் துணிப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, 6900 சதுர அடியில் துணிப்பையை தயாரித்ததாக மாணவி கௌசிகா தெரிவித்தார். இவர் ஏற்கனவே ஜி20 மாநாடு லோகோவை 5200 சதுர அடி அளவில் கோலங்களால் வரைந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.