districts

img

தண்டவாளத்தில் இருந்த மூதாட்டியை மீட்ட ‘லோகோ பைலட்’

சேலம், ஜூன் 1- சேலம் சத்திரம் ரயில் தண்டவா ளத்தில் படுத்திருந்த மூதாட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த லோகோ பைலட், ரயிலை நிறுத்தி மூதாட்டியை மீட்டார். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் ஆத்தூர் மார்க்கமாக தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வழக்கம் போல எழும்பூரில் இருந்து புறப்பட்ட விரைவு ரயிலானது சேலம் டவுன் ரயில் நிலையத்திற்கு சனியன்று காலை 6 மணிக்கு வந்து கொண்டிருந்தது. ஜங்ஷன் மார்க்கமாக புறப்பட்ட ரயில் டவுன் ரயில் நிலையத்திற்கும், சத்திரத்துக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளப் பகுதியில் ஒரு மூதாட்டி படுத்திருப்பதை ரயில் லோகோ பைலட் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் மூதாட்டி படுத்திருந்த இடத்திலிருந்து 200 மீட்டர் முன்பாகவே ரயில் நின்றது. இதனைத்தொடர்ந்து ரயில்வே நிலையத்திற்கு லோகோ பைலட் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர், மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டி யார்? எங்கிருந்து வந்தார்? என்பது குறித்தும், மயங்கிய நிலையில் தண்டவா ளத்தில் படுத்தாரா? அல்லது தற்கொலை செய்யும் முயற்சியில் தண்டவாளத்தில் படுத்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;