கிருஷ்ணகிரி, மே 5- விதிமீறும் கிரானைட் தொழிற் சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே கிரானைட் கல் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். பீகார் மாநிலம் பகல்பூர் அடுத்த நவடாவை சேர்ந்தவர் சோனில் குமார். இவர் பர்கூர் அருகே ஜெகதேவியில் தங்கி சிட்டாண்ட ஹள்ளியில் உள்ள தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சோனில் குமார் கிரானைட் கல் அறுக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கிரானைட் கல் சரிந்து சோனில்குமார் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது: பர்கூர் ஜெகதேவி மற்றும் ஓசூர், சூளகிரி வட்டங்களில் கணக்கற்ற கிரானைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நிரந்தரப்படுத்தப்படாத வடமாநில தொழிலாளர்கள் மிகக்குறைந்த கூலி யில் பணிப் பாதுகாப்பு இல்லாமல், வேலை நேர வரையறை இன்றி வேலை வாங்கப்படுகிறார்கள். சோனில் குமார் போன்று பல தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலை களில் கிரானைட் கல் விழுந்து இறந்துள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் துறையும், தொழிற்சாலை ஆய்வாளர்களும் ஆய்வு செய்து தொழிலாளர் சட்டங்களை மதிக்காத கிரானைட் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதியம், பணி நேரம், பணிப் பாதுகாப்பு ஆகிய வற்றை உத்தரவாதப்படுத்த வேண்டும். பணிபுரியும் போது விபத்தில் மரணமடையும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சட்டப்படியான இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.