காஞ்சிபுரம், நவ.3- ரக ஒதுக்கீடு சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனத்தின் 13 ஆவது மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சங்கத்தின் மூத்த தலைவர் ஆர். சிங்காரவேலு கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகள் கே.எஸ். பார்த்தசாரதி, டி. லட்சுமணன், வி.கார் மேகம், கே.வைத்தியநாதன் ஆகி யோரின் நினைவாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சுடரை தலை வர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த மாநாட்டில் சிஐடியு மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் சிறப்புரையாற்றி னார்.
சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் இ.முத்துக்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே. ஜீவா வரவு-செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநில செயலாளர் கோபி குமார் வாழ்த்துரை வழங்கினார்.
நிர்வாகிகள்
தலைவராக இ.முத்துக்குமார், பொதுச் செயலாளராக என்.பி.நாகேந்திரன், பொருளாளராக கே.ஜீவா, துணைத் தலைவர்களாக பி.பழனியம்மாள், எஸ்.தட்சிணா மூர்த்தி, டி.ஆர்.ராமசாமி, சுந்தர மூர்த்தி, மாநில துணைச் செயலா ளர்களாக எஸ்.என்.துரைராஜ், கே.என்.சேகர், இ.என். ராஜகோபால், எம்.ஆர்.முரளி, சண்முகம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
டிச.13 போராட்டம்
கைத்தறி துணி உற்பத்தி மீதான ஜி.எஸ்.டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும், ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கை சீற்றங்களுக்கு நிவார ணம் மற்றும் ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
போனஸ் சட்டம் கொண்டு வர வேண்டும், கைத்தறி நெசவாளர் களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், வீட்டு மனையுடன் கூடிய வீடு கட்டும் திட்டங்களை கொண்டு வரவேண்டும்.
கைத்தறி நெசவாளர் நலச் சட்டங்களை விரைந்து அமல்படுத்த தமிழ்நாடு முன்வரவேண்டும், கைத்தறி தொழில் சார்ந்த உடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ காப்பீடுகள் கொண்டு வரவேண்டும், கூட்டுறவு சங்க தேர்தலில் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்குரிமை வழங்கும் சட்ட திருத்தம் தமிழ்நாடு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.13 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.