கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வியாழனன்று சந்தித்து ஆறுதல் கூறி; மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து நலம் விசாரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கள்ளக்குறிச்சியில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது,
கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சாவுகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. மணிக்கு மணி எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டே உள்ளது. இன்னும் பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை யில் உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து இறந்த மற்றும் சிகிச்சையில் உள்ள அந்த குடும்பங்கள் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும் போது வேதனையாகஉள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை யும், அவர்களின் துயரத்தில் பங்கேற் பையும் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அந்தக் குடும்பங்களை பாது காக்க தேவையான அனைத்து நடவடி க்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கைது செய்க!
மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தும், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரி களை சஸ்பெண்ட் செய்தும் அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்து வது என்னவென்றால், மாவட்ட ஆட்சி யரை இடமாற்றுவதோ, காவல் துறை அதி காரிகளை சஸ்பெண்ட் செய்வதோ மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது. மாவட்ட ஆட்சித் தலைவர், எஸ்.பி உள்ளிட்டோர்களை இந்தப் பிரச்சனைக்கு பொறுப்பாக்கி கைது செய்ய வேண்டும்.
30 ஆண்டுகளாக...
கள்ள சாராயம் விற்ற சாதாரண ஆட்கள் சிலரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரில் காவல் நிலை யத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிற போது எப்படி உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்கும்? மாவட்ட நிர்வாகத்திற்கு தெரி யாமலே நடப்பதற்கு வாய்ப்பில்லை.
பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும் போது 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் கள்ள சாராய வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கிறார். டாஸ்மாக் கடை மூடி இருக்கும்போது கூட இந்த கள்ளச்சாரய வியாபாரம் மட்டும் நடைபெற்றுக் கொண்டே இருந்துள்ளது.
எனவே, கள்ளச்சாராயத்திற்கு ஆதர வாக இருக்கின்ற காவல்துறை அதிகாரி கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய வியாபாரம், போதை பொருள் வியாபாரத்தை உறுதியாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
500 பேர் பலி
இந்த சம்பவம் இதோடு நிற்க வேண்டும். ஏற்கனவே மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராய சாவு நடைபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டு களில் 500 க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை குற்றவாளியாக்கி நீதி மன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும்.
முதலமைச்சர் இதனை ஒரு எச்சரிக்கைச் சம்பவமாக எடுத்துக் கொண்டு இனிமேல் போதைப் பொருள், கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வராயன் மலைப்பகுதியில்...
இது போன்று நடப்பதற்கு ஏதோ ஒரு அரசியல் பின்புலம் உள்ளது. பத்திரி கைகளில் வரும் செய்தியை பார்த்தால் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிற்சாலையே நடைபெறுகிறது என்று தெரிய வரு கிறது. அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதற்கான வழி இல்லை.
முதலமைச்சர் அதையும் சேர்த்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
அரசியல் பிரச்சனை அல்ல
ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா என்பதாக இந்த பிரச்சனையை பார்க்கத் தேவையில்லை. எல்லா ஆட்சிக் காலத்திலும் இந்த பிரச்சனைகள் நடை பெறுகிறது. எம்ஜிஆர், கலைஞர், ஜெய லலிதா, எடப்பாடி ஆகியோர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராயம் சாவுகள் நடைபெற்றுள்ளன. இப்பொழுதும் நடை பெறுகிறது. இதை அரசியல் பிரச்சினை யாக நாங்கள் பார்க்கவில்லை. ஆட்சி மாறினாலும் கள்ளச்சாராயம் மட்டும் மாறாத நிலையாக தொடர்கிறது என்பது தான் எதார்த்தமான உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் தார்மீகப் பொறுப் பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி யுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “எடப்பாடி ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் இறந்தார்கள். தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்களே அப்பொழுது அவர்கள் ராஜினாமா செய்தார்களா? இதை அரசியல் பிரச்சினையை ஆக்குவது சரியல்ல” என்று கே.பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.
சமூகச் சீரழிவு
இதை அரசியல் பிரச்சினையாகவும், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிப் பிரச்சனை யாகவும் பார்ப்பது தவறு. இதை சமூக சீரழிவுப் பிரச்சினையாக பார்க்க வேண்டும். சமூகத்தில் போதைப் பழக்க மும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனுடைய வெளிப்பாடு தான் இது. பொது மக்களுக்கு குடிப்பழக்கம் - போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை அடை வதற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
போதைக் கலாச்சாரத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும். அதற்கு அரசு பக்கபலமாக இருந்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.