கடலூர், ஏப். 28- நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 21 வயதுடைய இளம்பெண் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு வேலை முடிந்ததும், அந்த இளம்பெண் தனது காதலருடன், மோட்டார் பைக்கில் கம்மியம்பேட்டைக்கு சென்றார். அங்கு கட்டி முடிக்கப்படாத பழைய கட்டிடம் அருகே நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குப்பன்குளத்தை சேர்ந்த கிஷோர் (19), சதீஷ்குமார்(19), சையது ஆரிப் (19) ஆகியோர் காதலர்கள் இருவரையும் செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண்ணின் காதலன் வைத்திருந்த செல்போன் மற்றும் 200 ரூபாயை பறித்தனர். மேலும் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கிஷோர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கிஷோர், சதீஷ், ஆரீப் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.