கடலூர், ஏப். 28- சொத்து தகராறில் உறவினர்கள் இரண்டு பேரை கொலை செய்ததாக தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகிலுள்ள சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமியின் மகன்கள் கணேசன் (62), ராஜா (எ) விஜயன் (58). இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் பூர்வீக சொத்து பாகம் பிரிக்கப்படாமல் இருந்த இதனை, விஜயன் குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், மலேசியாவில் வேலைப்பார்த்து வந்த கணேசனின் மகன் குருசேவ் (30) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்ததால் அவர் ஊருக்கு திரும்பினராம். எனவே, பூர்வீக இடத்தில் அவருக்கு வீடு கட்டுவதற்கு இடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு, விஜயன் இடம் தர மறுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக 8.4.2018 அன்று கணேசன், குருசேவ் மற்றும் சீர்காழியைச் சேர்ந்த உறவினர் சவுந்தரராஜன் மகன் அபினாஷ் (24) ஆகியோர் விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் விஜயன் அவரது மகன் கோபிநாத் (24) ஆகியோர் சேர்ந்து மூன்று பேரையும் தாக்கியதோடு, கத்தியால் வெட்டியுள்ளனர். இதில், குருசேவ், அபினாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து புவனகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூரில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், நீதிபதி ஜி.செந்தில்குமார் தீர்ப்பு கூறினார். அதில், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயன், கோபிநாத் ஆகியோரின் குற்றங்கள் உறுதியானதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில், அரசு தரப்பு வழக்குரைஞர் எஸ்.பி.கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார்.