அரியலூர், மார்ச் 24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துச்சேர்வாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கவடங்கநல்லூர் பாண்டியன் ஏரி கரையில் குடியிருந்தவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டனர். இதே நடவடிக்கையை முத்துச்சேர்வாமடத்திலும் அதிகாரிகள் நடத்தினர். நீர்நிலை புறம்போக்குகளில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களை அப்புறப்படுத்துவதன் முன் அவர்களுக்கு பொருத்தமான மாற்று இடம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனொரு பகுதியாக வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக்குழு தொடர்ந்து போராடி வருகிறது. கங்கவடங்கநல்லூர், முத்துச்சேர்வாமடம் பகுதிகளை சேர்ந்த 60 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், 5 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி இரு கிராமங்களை சேர்ந்த மக்களும் முத்துசேர்வாமடம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த மீன்சுருட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாத காலத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.