court

img

வைகை அணையை தூர்வாரக் கோரும் வழக்கு... மதுரை, தேனி ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு....

மதுரை:
வைகை அணையை முழுமையாகத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திருட்டைத் தடுத்து அணையை முழுமையாக கண்காணிக்கக் கோரிய வழக்கில் மூன்று வாரங்களுக்குள்  தமிழக பொதுப்பணித்துறை செயலர்,  மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  “தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை கடந்த 1958-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதுநாள் வரை  அணை தூர்வாரப்படவில்லை. வைகை அணையில் அடித்து வரப்பட்ட மணல்கள் சுமார் 20 அடி வரை உள்ளது. இதனால் தண்ணீர் கொள்ளளவு குறைந்து வருகிறது.வைகை அணை தூர்வாரபடும் என்று அவ்வப்போது அரசு அறிவிப்பு செய்து இதுவரை 800 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடுசெய்யப்பட்டது. இவை அனைத்தும் அறிவிப்பாக வே உள்ளது. எந்த நடவடிக்கையும் இல்லை. வைகை அணையின் நீர் பிடிப்பை நம்பியே மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் உட்பட ஐந்து மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் ஆதாரம் உள்ளது. வைகை அணைக்கு வரும் நீர் வரத்துப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன ஆக்கிரமிப்பு மற்றும் மணல்கள் தூர்வாரப்படாததான் காரணமாக தண்ணீரின்  கொள்ளளவு குறைந்து கொண்டே வருகின்றது.  தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைகை அணையிலிருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு வரும் பகுதிகளில் சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் திருடப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைகை ஆற்றில் இருந்து நீர்  நகர்புறங்களில் வரும்போது அதிக அளவில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்து தொற்று பரவி வருகிறது. எனவே வைகை அணையை முழுமையாகத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திருட்டை தடுத்து முழுமையாக கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.  இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், மனுகுறித்து மூன்று வாரங்களுக்குள் தமிழக  பொதுப்பணித்துறை செயலர், தேனி, மதுரை மாவட்டஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு  விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

;