குழந்தைகளுக்கான சினிமாவாக வந்திருக்கிறது தி ஸீ பீஸ்ட் (The Sea Beast) ஆங்கிலப்படம். அனிமேஷன் படமான இதன் கதைப்படி ஒரு கற்பனைத் தீவு தேசம். அதில் அரசாளும் ராஜ குடும்பத்தினர் கடலில் ராட்சத விலங்குகள் பல இருப்பதாகவும், அவை கரைக்கு வந்து மனிதர்களை விழுங்குவதாகவும் சொல்லி, அவற்றைக் கொல்வோருக்குப் பரிசுகளையும் அறிவிக்கிறது. மக்கள் அந்த விலங்குகளின்மீது அச்சமும் வெறுப்பும் கொள்கிறார்கள். இந்த வேட்டையில் பலரும் இறக்க நேரிடுகிறது. அப்படியானதொரு வேட்டைக் குழுவின் தலைவன் குரோ என்ற இளைஞனைச் சுற்றி கதை போகிறது.
அந்த இளைஞனுக்கு சாரா என்ற மாலுமியும் ஜேகோப் என்ற வீரனும் உடன் உதவுகிறார்கள். வேட்டையாடுவோரை அரச குடும்பமும் மகாராணியும் எப்படி வஞ்சிக்கிறார்கள் என்பது அடுத்தகட்டத் திருப்பமாக உள்ளது. ஹாலிவுட் என்றாலே பிரம்மாண்டத்திற்குப் பஞ்சமிருக்காது என்றாலும் இந்தப் படம் உண்மையிலேயே பிரம்மாண்டத்தைக் கோருவதாக அதன் கதையமைப்பைக் கொண்டிருக்கிறது. இயற்கையோடும் பிற உயிரினங்களோடும் மனிதர்களின் உறவும் முரணும் எப்படியெல்லாம் வாழ்க்கையை நகர்த்துகின்றன என்பதை மிக அழகாகச் சொல்லுகிற கதை. பிற உயிரினங்களின் வாழ்வியலை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லோருக்கும் உணர்த்துகிற படம் இந்த தி ஸீ பீஸ்ட்.