இளம் விதவைகளின் அவலங்களைத் தமிழ் நாடகமும் சினிமாவும் பேசிய காலம் அது. பழைய வழக்கங்களான குழந்தைத் திருமணம், வயது முதிர்ந்த ஆணுக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் முறை, அதனால் பெருகும் விதவைகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கின அந்நாளைய கலை வடிவங்களான மேடை நாடகங்கள். அதன் தொடர்ச்சியாக சினிமாவும் அந்தச் சமூக விசயத்தைக் கையிலெடுத்தது. அப்படி நாற்பது களின் துவக்கத்தில் வெளிவந்த ஒரு படம்தான் “குமாஸ்தாவின் பெண்” (1941). வங்கமொழியின் பிரபல நாவலாசிரியர் நிருபமா தேவியின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று தான் அன்னபூர்னிகா மந்திர். அது ஆங்கிலத்திலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பட்டிருந்தது. அந்தக் கதையை மலையாளத்தில் நாடக மாக நடத்தினார்கள். டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான சண்முகம் அந்த நாடகத்தைப் பார்த்தார். தன் மனதைப் பறிகொடுத்தார்.
அவரது சகோதரர் களில் ஒருவரான டி.கே.முத்துசாமி அதனைத் தமிழில் எழுத, குமாஸ்தாவின் மகள் என்ற பெயரில் தமிழுக்கு வந்த அந்தக் கதை நாடகமாக மேடையேறியது. தமிழ் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த நாடகத்தைப் பார்த்த அறிஞர் அண்ணா அதனைப் புகழ்ந்து பெரியாரின் ‘குடிஅரசு’வில் ஒரு அருமையான விமர்சனத்தை எழுதினார். தனது ஜெமினி பிக்சர்ஸ் பதாகையின்கீழ் எஸ்.எஸ்.வாசன் முதலீடு செய்ய, அந்த நாடகத்தின் வெற்றிக் களிப்பில் மிதந்த டி.கே.எஸ். சகோதரர்கள் மூர்த்தி ஃபிலிம்ஸ் உடன் இணைந்து அதனைத் திரைப்பட மாக எடுக்கும் முயற்சியிலிறங்கினார்கள். நாடகத்தை ரசித்துப் பார்த்த எஸ்.எஸ்.வாசன் அதில் நாயகியாக நடித்தவரையே சினிமாவிலும் நாயகியாக நடிக்க வைக்கலாம் என்று யோசனை கூறினார். காரணம், அந்த பாத்திரத்தில் நடித்தவர் அந்தளவுக்குத் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அப்படி யோசனை சொன்ன வாசனை அதிர்ச்சியடையச் செய்தது அந்தப் பெண் பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்தவர் ஒரு பெண்ணல்ல... ஆண்தான் என்கிற தகவல். அந்த ஆண் வேறுயாருமில்லை. பின்னாளின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.பி.நாகராஜன்தான் அந்தப் பெண் பாத்திரத்தில் திறம்பட நடித்தவர். நாடகமாக மேடையேறியபோது குமாஸ்தாவின் மகள் என்றிருந்த பெயர் திரைப்படமானபோது “குமாஸ்தாவின் பெண்” - என்றானது.
அந்தநாள் வழக்கப்படி ஆங்கிலத்தில் “Clerk’s daughter” - என்றும் போட்டார்கள். டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, எம்.வி.ராஜம்மா, கே.ஆர்.ராமசாமி, எம்.எஸ்.திரௌபதி, ஃபிரண்ட் ராமசாமி, பி.ஜி.வெங்கடேசன், கே.என்.குளத்து மணி, ஏ.ஆர்.சகுந்தலா போன்றோர் நடித்தார்கள். பி.என்.ராவ் மற்றும் கே.வி.எஸ்.வாஸ் இருவரும் இயக்கினார்கள். இந்தப் படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிய பஞ்சாபிதான் பின்னாளில் கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரில் ஒருவரான பஞ்சு. ரஸ்டம் எம். இரானியின் ஒளிப்பதி வில் காட்சிகள் சிறப்பாக அமைந்தன. நாராயணன் மற்றும் பத்மநாபன் குழுவினரின் இசையில் பி.ஜி.வெங்கடேசன் பாடிய பாராய் மனிதா... மூடா... பாராய்... என்று பிச்சைக்காரன் பாடும் பாடல் புகழடைந்தது. இந்திப் படவுலகின் புகழ்மிக்க துவக்ககாலப் பின்னணிப் பாடகர் குண்டன் லால் சைகல். இந்த வெங்கடேசனை தென்னிந்தியாவின் சைகல் என்றழைத்தார்கள். படத்தின் கதை ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பற்றியதாக இருந்தது. ஒருவர் சீதா (எம்.வி.ராஜம்மா). மற்றொருவர் சரசா (எம்.எஸ்.திரௌபதி). அவர்களின் தந்தை சுப்பையா பிள்ளை ஒரு பணக்காரனிடம் குமாஸ்தாவாகப் பணி யாற்றுகிறார். அந்தப் பணக்காரன் பெண்ணாசை கொண்டவன். அந்தத் தகப்பனுக்கோ தனது மகள்களைத் திருமணம் செய்துகொடுக்கக்கூட வசதியற்ற வறுமைநிலை. இலட்சிய மனப்பான்மையும், சீர்திருத்தச் சிந்தனையும் கொண்ட ராமு அந்த ஊரில் வசிக்கும் இன்னொரு பணக்கார இளைஞன். திருமணம் போன்ற வழக்கங்களுக்கு எதிரான கருத்துக் கொண்டவன் அவன்.
தன் மகனுக்கு சீதாவைத் திருமணம் செய்துவைக்க ராமுவின் தாயாருக்கு விருப்பம். ராமு தன் தாயாரின் விருப்பத்தை மறுத்துவிடுகிறான். வறுமையிலிருந்து விடுபட வேறு வழியற்ற சீதாவின் தந்தை அவளை கைகால் நடுங்கும் வயோதிகன் ஒருவனுக்கு மணமுடித்து வைக்கிறார். திருமண நிகழ்வுகள் முழுவதும் நிறைவடையுமுன்பே அவள் விதவையாகிறாள். பெண் பித்தனான முதலாளி மணி ஒருநாள் சீதாவைப் பாலியல்ரீதியிலான துன் பத்திற்கு ஆளாக்க முயல்கிறான். எதிர்பாராவிதமாக ராமு அவளைக் காப்பாற்றுகிறான்.
ஆனாலும் அவமானத்தால் சீதா தற்கொலை செய்துகொள் கிறாள். சீதாவின் சாவுக்குத் தானும் ஒரு காரணம் என்று வருந்தும் ராமு அவளது சகோதரி சரசாவின் திருமணத்திற்கு முயற்சி எடுக்கிறான். வரதட்சணை குறித்த கருத்து வேறுபாட்டால் மாப்பிள்ளை வீட்டார் கோபித்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக ராமுவே சரசாவைத் திருமணம் செய்துகொள்கிறான். இப்படியானதொரு கதையமைப்பைக் கொண்ட இந்த குமாஸ்தாவின் பெண் வசூலில் பெருவெற்றி பெற்றது. 1941 ஆம் ஆண்டு வெளிவந்த 29 தமிழ்ப் படங்களுடனும் போட்டியிட்டு முதல்தரமான படமென்று பெயரெடுத்தது. அதுமட்டுமல்ல... இளம் பெண்களை வயது முதிர்ந்த கிழவர்களுக்கு இரண்டாம், மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்துகொடுக்கும் வழக்கத்திற்கு எதிராக இளைஞர்கள் குரலெழுப்பத் தொடங்கினார்கள். இப்படியாக இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வையும் தோற்றுவித்தாள் இந்த குமாஸ்தாவின் பெண்!