cinema

img

பாசவலை விஸ்வநாதனைத் தூக்கம் தொலைக்கச்செய்த சம்பவம்...

நவாப் ஒருவரைப் பற்றியும், ஊதாரித் தனமான அவரது சகோதரனால் அவரது குடும்பம் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியும் 20 ஆம் நூற்றா ண்டின் முற்பகுதியில் ஒரு கதை பிரபலமாக இருந்ததைப் பலரும் மறந்திருப்பார்கள். அது 1930 களில் திரைப்படமாகக்கூட வந்ததாகச் செய்திகள் இருக்கின்றன. அதுதான் அலிபாதுஷா எனும் கதை. பழைய அலிபாபா  அல்ல. அந்தக் கதையைச் சில பல மாற்றங்களுக்கு உள்ளாக்கித் தமிழில் ஒரு திரைப்படமாக்கத் திட்டமிட்டார் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம். அதுதான் 1956இல்  வெளிவந்த பாசவலை என்ற தமிழ்ப்படம். எடிட்டராக இருந்து திரைப்பட கர்த்தாவாக மாறிய ஏ.எஸ். நாகராஜன் இந்தப் பாச வலையை இயக்கினார்.  பாசவலையின் கதை இப்படிப்போனது. ஒரு மன்னன் இருக்கிறான். அவன் தனது  இளைய சகோதரனின் காமக் களியாட்டங் களுக்கு ஆதரவாக அவனைப் பாதுகாப்ப தாக மக்கள் மன்னனைக் குற்றம்சாட்டு கிறார்கள். அதனால் மனம் உடைந்த மன்னன் தனது சாம்ராஜியத்தை விட்டுவிட்டு ராணியை யும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான். அமைதியைத் தேடி காடுகளில் அலைந்து திரிகிறார்கள். குடும்பம் சிதறிப் பிரிகிறது. மன்னன் மனநலம் பாதிக்கப் படுகிறான். குழந்தைகளைத் தவற விடுகிற ராணி ஒரு வீட்டில் வேலைக்காரியாகிறாள். வழிப்பறி ஆசாமிகள் அந்தக் குழந்தைகளை மீட்கிறார்கள். அதற்குள் மனம் வருந்திய மன்னனின் சகோதரன் அண்ணனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கிறான். அவரை குணப்படுத்த முடிவு செய்கிறான். அவரை குணப்படுத்தத் தேவையான மூலிகையை எடுக்க ஒரு குகை க்குப் போகிறான். அதைக் காவல்காக்கும் இளம் பெண்ணின் ஆசைக்கு இணங்காததால் அவள் அவனை நாயாக மாற்றிவிடுகிறாள். இப்படியாக பல திருப்பங்களோடு நகரும் படத்தின் முடிவில் அந்த மன்னன் நலம் பெற்றானா, ராணியும் குழந்தைகளும் ஒன்று  சேர்ந்தார்களா என்பன போன்ற கேள்வி களுக்கு விடை கிடைக்கிறது. 

இயக்குநர் நாகராஜன் சிறப்பாக இந்தப்  பாசவலையை இயக்கியிருந்தார். டபிள்யூ.ஆர். சுப்பாராவ் என்ற அற்புதமான ஒளிப்பதி வாளர் அருமையாக படப்பிடிப்பு நடத்தி யிருந்தார். டி.ஆர்.சுந்தரத்தின் தயாரிப்பு பேசப்பட்டது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் அற்புதமான இசையில் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. பாடல் களை மருதகாசி மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியிருந்தார்கள். பாசவலை படம்தான் பட்டுக்கோட்டையாரின் முதல் படம். இந்தப் படத்தில் அவர் பாடல்  இடம்பெற்றதற்குப் பின்னால் சுவாரஸ்யமான, உணர்ச்சிமயமான சம்பவம் நடந்தது.  ஒரு குறிப்பிட்ட காட்சிச் சூழலுக்கு ஏற்ற  பாடல் ஒன்று தேவைப்பட்டபோது மருத காசியால் விஸ்வநாதனின் திருப்திக்குப் பாடல் எழுதித்தர இயலவில்லை. என்ன எழுதினாலும் எம்.எஸ்.வி. அதை ஏற்க மறுக்கிற நிலை. அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ்  நிறுவனத்தின் மேலாளர் சுலைமான் சேட் ஒரு இளைஞனை அவரிடம் அழைத்துச் சென்று இவர் நன்றாகப் பாடல் எழுதக்கூடியவர் என்றும் இவரிடமிருக்கும் பாடல் நீங்கள் விரும்பும்படியாக அந்தக் காட்சிக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா பாருங்கள் என்றார். விஸ்வநாதன் கோபப்பட்டார். பெரிய பாடலாசிரியராலேயே இயலாதபோது இந்தச்  சின்னப் பையனாவது எழுதுவதாவது என்று விரட்டிவிட்டார். மாதக்கணக்காக அந்த ஒரு பாடலுக்காக காத்திருந்தும் சரியான பாடல் அமையா மலேயே நாட்கள் நகர்ந்தன. மறுபடியும் சுலைமான் சேட் விஸ்வநாதனிடம் வந்தார். அந்த இளைஞன் பாடல் எனக்கென்னவோ சரியாகப் பொருந்தும் என்றுதான் தோன்று கிறது. எனக்காக ஒருமுறை அதைப் படித்துப்  பாருங்களேன் என்றார். அவரது நச்சரிப்பு  பொறுக்காமல் அந்தப் பாடலை வேண்டா வெறுப்பாக வாங்கி வாசித்தார் எம்.எஸ்.வி.  வாசிக்க வாசிக்க அவரது முகம் பிரகாச மடைந்தது. ஆகா, நான் எதிர்பார்த்த பாடல் இது இது இதுவேதான் என்று மனமெங்கும் மகிழ்ச்சி.

அந்தப் பாடல்தான்,
“குட்டிஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதன் கண்ணில் பட்ட தெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்...”

- என்ற தொகையறாவுடன் தொடங்கும் “உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா...” - என்ற  பாடல். அதை எழுதிய அந்தப் புதிய இளை ஞன்தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு அன்றைய  இரவு முழுவதும் விஸ்வநாதன் உறங்கவே  இல்லையாம். தனது வீட்டின் பூசையறைக்குள் போய் கதவைத் தாழிட்டுக்கொண்டார். கண்களில் கண்ணீர் பெருகியது. எத்தனை பெரிய பிழை செய்துவிட்டோம். எப்படிப்பட்ட திறமையான அந்த இளைஞனை இத்தனை நாள் உதாசீனப்படுத்தியிருக்கிறேன். ஆண்டவா... இனி வாழ்நாளில் எவர் வாய்ப்பு வேண்டி வந்தாலும் அவருக்காகச் சிறிது நேரத்தை ஒதுக்கி அவரது படைப்பை வாசிப்பேன். எவரையும் இனி அலட்சியம் செய்யமாட்டேன் என்று அந்த இரவில் சபதம் எடுத்துக்கொண்டாராம் எம்.எஸ்.வி. பாசவலையில் மன்னராக எம்.கே.ராதா அற்புதமாக நடித்தார். ராணியாக வரலட்சுமி நடித்தார். மன்னரின் சகோதரனாக கோபால கிருஷ்ணன், இளவரசியாக எம்.என். ராஜம். நகைச்சுவைக்கு ஏ.கருணாநிதி - டி.பி. முத்து லட்சுமி ஜோடி. பட்டுக்கோட்டையாரின் முதல்  சினிமா நுழைவு இப்படியானதொரு நெகிழ்ச்சி யான நிகழ்வைக் கொண்டிருந்தது என்பது தான் பாசவலை திரைப்படத்தைவிடக் காலம்  தாண்டியும் சுவையானதாகத் தோன்றுகிறது அல்லவா?