டி.எஸ். துரைராஜ் என்ற பழம்பெரும் தமிழ் நடிகரின் பெயரைப் பலரும் மறந்திருக்க முடியாது. மலைக்கள்ளன், கப்பலோட்டிய தமிழன், எல்லிஸ் ஆர்.டங்கனின் சகுந்தலா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவையும் குணச்சித்திரமும் கலந்த கதாபாத்திரங்களில் மிளிர்ந்த நடிகர் அவர். கலைவாணர் காலத்தின் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர் துரைராஜ். அவரது திறமைக்கேற்ப அவரைத் தமிழ் சினிமா அங்கீகரித்ததா - பயன்படுத்திக்கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆம், துரைராஜ் எனும் அந்த அற்புதக் கலைஞன் தன் திறனுக்கேற்ப வாய்ப்புகளைப் பெறவில்லை. கலைவாணர் சிறை செல்ல நேரிட்டபோது தமிழ்த் திரையுலகு துரைராஜைக் கொஞ்சம் ஏறெடுத்துப் பார்த்தது. துரைராஜ் மிகச் சிறந்த குதிரை வீரர். அவரே இரண்டு குதிரைகளை வளர்த்தார். விலையுயர்ந்த ரகக் குதிரைகளான அவற்றின் பெயர்கள் ‘கிங் மாஸ்டர்’ மற்றும் ‘வின்னர் மாஸ்டர்’. அவை இரண்டும் அன்றைய கிண்டி மற்றும் தென்னிந்திய குதிரைப் பந்தய உலகில் மிகவும் பிரபலமான பெயர்களாகும்.
அவர் சொந்தமாகவும் படங்கள் எடுத்தார். அவை வெற்றி, தோல்வி எனும் கலவையான அனுபவங்களை அவருக்குத் தந்தன. அவரது சொந்தப்பட முயற்சிகளில் முதல் முயற்சிதான் 1948இல் வெளிவந்த இந்தப் “பிழைக்கும் வழி”. ஓரளவு வசூலில் அவருக்குக் கைகொடுத்த படம் இது. படத்தின் நாயகனும் துரைராஜ்தான். ஒரு ஊதாரிப் பேர்வழிப் பாத்திரத்தைத்தான் அவர் ஏற்று நடித்தார். போதைக்கு அடிமையான, விழிப்புணர்வற்ற, ஏமாறக்கூடிய மக்களை ஏய்த்துப் பிழைப்பதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்டவன் படத்தின் நாயகன். அதனாலேயே படத்தின் பெயரும் பிழைக்கும் வழி என்றானது. படத்தில் அவர் ஒரு போலிச் சாமியாரின் (எம்.ஆர். சுவாமிநாதன்) போலிச் சீடனாக வந்து ஏமாறும் மக்களிடம் பணத்தைப் பறிக்கிறார். படத்தில் அவர் பெண் வேடமும் போட்டார். தன்னுடைய ஊர்சுற்றி நண்பர்களோடு சீட்டாட்டத்தில் ஈடுபடும் நாயகன் ஒரு பாடலைப் பாடுகிறான். இதுதான் படத்தின் துவக்கக் காட்சி. சீட்டுக்கட்டின் மொழியிலேயே பாடல் இப்படிச் செல்கிறது: “ஏஸ் மேலே ஜாக்கியா... துருப்பு இல்லாமே பருப்பு வேகுமா..?” - குழுவினரோடு துரைராஜ் பாடும் இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி, ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தில் பங்கேற்ற திறமை மிக்க பல்வேறு கலைஞர்களும் காரணமானார்கள். டி.எஸ். பாலையா, காளி என். ரத்தினம், எம்.ஆர். சுவாமிநாதன், குளத்து மணி, கே.கே. பெருமாள், பி.ஜி. வெங்கடேசன், சி.டி. ராஜகாந்தம், பி.எஸ். ஞானம், பி.ஆர். மங்களம், சி.கே. நாகரத்தினம், ஆர். சரஸ்வதி, பாக்யலட்சுமி, எ.எஸ். நாராயண பிள்ளை, பி. சுந்தர ராவ் போன்றோர் நடித்தார்கள்.
படத்தின் நாயகன் டி.எஸ். துரைராஜுக்கு இணை டி.ஏ.ஜெயலட்சுமி. நல்ல கலைத்திறன் கொண்ட ஜெயலட்சுமி டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்தவர். 1947இல் வெளிவந்த ஏ.வி.எம்.மின் நாம் இருவர் படத்தின் நாயகி. துரைராஜைப்போலவே இவருக்கும் அதிக வாய்ப்புகளைத் தரவில்லை தமிழ் சினிமா உலகம். அஸ்வத்தாமாவின் இசையமைப்பில் படத்தில் மூன்று அருமையான பாடல்களை அந்நாளைய முன்னணி செவ்விசைப் பாடகி டி.கே. பட்டம்மாள் பாடினார். பாடல்களை டி.கே. சுந்தர வாத்தியார் எழுதியிருந்தார். பட்டம்மாளின் தேன் குரலில்,\”எங்க நாட்டுக்கு எந்த நாடு ஈடு...”, “கோட்டை கட்டாதேடா...”, “முதலை வாயில்...” - ஆகிய அந்த மூன்று பாடல்கள் படத்திற்கு மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தின. துரைராஜ், காளி என்.ரத்தினம், எம்.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஏ.பி.கோமளம் ஆகியோரும் பாடல்களைப் பாடினார்கள். டி.எஸ். துரைராஜ் கே.என். பழனிவேலுவுடன் இணைந்து தயாரித்தார். மரகதா பிக்சர்சுக்காக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான இந்தப் படத்தை மித்ரதாஸ் இயக்கினார். டி.கே.பட்டம்மாளின் குரலில் மயக்கிய பாடல்களுக்காகவும், நடிகர் பட்டாளத்தின் நல்ல நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் இந்தப் பிழைக்கும் வழி ரசிகர்களின் நினைவுகளில் கொஞ்சகாலம் பிழைத்து நின்றது!