cinema

img

பெயர்தான் சின்னப்பா... மனசு பெரிசப்பா...

திரைக்கலைஞர்களில் பலரும் தாமுண்டு தம் வேலையுண்டு என்று  நடந்துகொள்பவர்களா கத்தான் இருப்பார்கள். தங்கள் வேலை களைத்தாண்டி மற்றவற்றில் மூக்கை நுழைத்தால் அதற் குரிய எதிர்வினைகள் தங்களைத் தாக்கும் என்கிற அச்சமே பொதுவான காரண மாக இருக்கும். அபூர்வமாக, வெகுசிலரே இதற்கு விதிவிலக்கு. அவர் களுள் துவக்க காலத்திலேயே தன்ன லத்தை மட்டுமே கருதாத கலைஞனாகத் திகழ்ந்தவர் பி.யூ.சின்னப்பா எனும் பழம்பெரும் தமிழ்த்திரை நட்சத்திரம்.  ஒரு படத்தில் நடிக்கிறபோது சின்னப்பா தனது பாட்டை மட்டும் பார்த்துக் கொண்டு போகிறவர் அல்லர். நடித்தோம், நமக்குரிய ஊதியத்தைப் பெற்றுக்கொண்டோம் என்று கதையை  முடித்துக்கொள்கிற வழக்கம் சின்னப்பா விடம் இருக்கவே இருக்காது. தான் நடிக்கிற படத்தின் படக்குழுவினருள் தன்னுடன் உழைக்கிற மற்ற எல்லாக் கலைஞர்களின்மீதும் மிகுந்த கவனம் கொள்பவராக அவர் இருந்தார். தன்னுடன் பணியாற்றிய சக கலை ஞர்கள், தொழில்நுட்பம் சார்ந்த உழைப்பாளிகள் என்று எல்லாருக்கும் அவரவருக்குரிய சம்பளப்பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதா என்பதை படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் கவனமாக அறிந்துகொள்வது அவரது வழக்கம். அவ்வாறு அறிந்துகொள்வதே அவர்களுக்கு எவ்வழியிலாவது உதவும் பொருட்டுதான். ஒரு எளிய கடை நிலைத் தொழிலாளிக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்திருக் கிறார் என்று அறிந்தால்கூட உடனடியாக அதில் தலையிடக்கூடியவர் சின்னப்பா.  அவர் நடிக்கிற படங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின்போது அந்தப் படக்குழுவிலிருக்கும் எல்லோருக்கும் உரிய சம்பளம் முறையாகக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே பி.யூ.சின்னப்பா அந்த இறுதிக் கட்டப் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபாடு காட்டு வார்.

ஒருவேளை எவருக்கேனும் ஊதிய பாக்கி இருப்பதாக அறிந்தால் அந்தப் படத்தின் இறுதிக்கட்டத்தில் அவரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது. ஊழியர் களின் சம்பளம் முழுவதும் கொடுக்கப் பட்டால்தான் அவர் மேற்கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்பார்.  இப்படியும் ஒரு கலைஞனா என்று அப்போதே அவரை வியந்து பார்த்தார்கள். இத்தனைக்கும் அவர் அந்நாளில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.  தனிப்பட்ட வகையில் சகல வசதி களும் மரியாதையும் அவருக்கு எப்போதும் கிடைக்கிற சூழலில்தான் அவர் எளிய உழைப்பாளிகளின் குறைகளைக் களைகிற குணத்தை விடாப்பிடியாகக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கும் தயாரிப்புத் தரப்பிற்கும் இடையே கசப்புகள் தோன்றியபோதிலும் அதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை.  பி.யூ.சின்னப்பாவின் இந்த அருங் குணத்தைப் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். தனது வழக்கமாக்கிக்கொண்டாராம். அவரது ஒவ்வொரு படத்தின் உச்ச கட்டக் காட்சியின் படப்பிடிப்பையும் இறுதியாகவே வைத்துக்கொள்ளச் செய்வாராம் எம்.ஜி.ஆர். அந்த சமயத்தில் அந்தப் படம் தொடர்பான செலவுக் கணக்குகளை வாங்கிப் பார்ப்பாராம். அதில் ஒரேயொரு தொழிலாளிக்குச் சிறு சம்பள பாக்கி இருப்பதாக அறிந்தாலும் அதனை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்துவிட்டுத்தான் படப்பிடிப்பில் பங்கேற்பாராம் எம்.ஜி.ஆர்.