பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கத் திற்குச் சொந்தப் படம் எடுக்கும் ஆசை வந்தது. 1950 களில் அவர் ஒருசில படங்களை எடுத்து கையைக் கடித்துக்கொண்டார் என்பது பலரும் அறிந்ததுதான். தனது இணையற்ற தனித்துவமான குரல்வளத்தால் தமிழ் சினிமா வில் மிக உச்சம் தொட்டவர் அவர். தமிழ் சினிமா வின் நடிகர்களில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நாயகர் டி.ஆர்.மகாலிங்கம். ஒரு கட்டத்தில் நிற்க, உறங்க நேரமில்லா மல் படப்பிடிப்புகளுக்கு ஓடிக்கொண்டிருந்த வருக்குத்தான் சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க விருப்பம் உண்டானது. அவர் தொடங்கிய பட நிறுவனத்திற்கு அவரின் மகனின் பெயரில் ஸ்ரீசுகுமார் புரொடக்ஷன்ஸ் என்று பெயரிடப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் டி.ஆர்.மகாலிங்கம் எடுத்த படம்தான் மச்சரேகை. பல தமிழ் படங்களையும் இயக்கிய பிரபல தெலுங்குப்பட இயக்குநர் பி. புல்லையா மச்சரேகையை இயக்கினார்.
இதே பெயரில் தஞ்சை ராமையா தாஸ் எழுதி, நடத்திவந்த நாடகம்தான் இந்த மச்சரேகை. இதன் திரைக் கதை, வசனத்தையும் தஞ்சை ராமையா தாஸ்தான் எழுதியிருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம் நாயகன் மச்சராஜூவாக நடித்தார். அவருக்கு இணையாக எஸ்.வரலட்சுமி நாயகி. பி. சாந்தகுமாரி, பி.ஆர்.பந்துலு, குமாரி கமலா, சி.டி.ராஜகாந்தம் மற்றும் சிறுமி விஜய நிர்மலா ஆகியோர் நடித்தனர். இதில் நடித்த பி.சாந்தகுமாரியை இப்படத்தின் இயக்குநர் புல்லையா மணம் செய்துகொண்டார். மகாலிங்கத்தின் சிறுவயது வேடத்தில் நடித்த இந்த விஜய நிர்மலாவுக்கு மச்சரேகை தான் முதல் படம். அப்போது அவருக்கு 11 வயது. பின்னாளில் இதனை இப்படி நினைவு கூர்ந்தார் நிர்மலா: “நான் மச்சரேகையில் கதாநாயகனாக நடித்தேன்!” அவர்தான் பின்னாளில் தமிழ், தெலுங்கு, மலை யாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த முன்னணி நடிகை அலேக் விஜய நிர்மலா. அதுமட்டுமல்லாமல் 1971இல் மீனா என்ற தெலுங்குப்படம் தொடங்கி, 44 படங்களைத் தெலுங்கில் இயக்கியவர்
இந்த விஜய நிர்மலாதான். உலகிலேயே அதிக சினிமாக் களை இயக்கிய ஒரே பெண் இயக்குநர் என்ற சாதனைக்காக 2000 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் அவர் பெயர் இடம்பெற்றது வரலாறு. மச்சரேகையின் நாயகியாக முதலில் அஞ்சலிதேவிதான் ஒப்பந்தமானார். சில காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ஏதோவொரு காரணத்திற்காக விலகிட நேர்ந்தது. எனவே எஸ்.வரலட்சுமிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. வங்கத்தின் ஜித்தன் பேனர்ஜியும் ஜி.விட்டல் ராவும் மிகச் சிறந்த முறையில் ஒளிப்பதிவைச் செய்திருந்தார்கள். டி.எம்.லால் படத்தொகுப்பை மேற்கொண்டார். திரைக்கதை, வசனத்தை எழுதிய தஞ்சை ராமையா தாஸ் இந்தப் படத்தின் பாடல்களை யும் எழுதினார். படத்தில் மொத்தம் 15 பாடல்கள். பெரும்பாலான பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருந்தார். அவருடன் வரலட்சுமியும், பி.லீலாவும் சில பாடல்களைப் பாடினார்கள். மேலும் ஏ.ஜி.ரத்னமாலாவும், ஏ.பி.கோமளாவும் தலா ஒரு பாடலைப் பாடி னார்கள். படத்திற்குப் பிரபல இசையமைப்பா ளர் சி.ஆர்.சுப்புராமன் இசையமைத் திருந்தார். பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்குப்பின் தமிழ்ப்பட வுலகின் மூன்றாவது சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்தவர் டி.ஆர்.மகாலிங்கம். அவர் தயாரித்து, நடித்த இந்த மச்சரேகை 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் வெளியானது. அந்த ஆண்டு தமிழில் 15 படங்கள் வெளியாகியிருந்தன. இந்த மச்சரேகை ஓரளவே வசூலில் வெற்றிகண்டது. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களைத் தயாரித்த மகாலிங்கத்தை தோல்வி எனும் பள்ளத்தில் தள்ளின அந்த அவரது தொடர் முயற்சிகள். ஒரு காலத்தில் திரையுலகில் உச்சத்தை அடைந்து ஜொலித்தவர் சொந்தப் படம் எடுத்ததனால் கடனாளியானது, பலருக்கும் பாடம் ஆனது.