லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என்பது தமிழகத்தையே உலுக்கிய ஒன்று. அந்த வழக்கு நடந்துகொண்டிருந்த சமயத்தில் தமிழ்கூறும் நல்லுலகமே அதில் தனது கவனத்தை வைத்திருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் தமது பேரார்வத்தையும் பெரும் கவனிப்பையும் அதன்மீது வைத்திருந்தார்கள் தமிழர்கள். அன்றைக்குப் பிரபலமாக இருந்த மோசடிப் பத்திரிகையாளன் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட, அந்தப் பழி தமிழின் அந்நாளைய உச்ச நட்சத்திரம் எம்.கே.தியாகராஜ பாகவதர்மீதும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்மீதும் விழுந்தது. நீண்ட வழக்காடலுக்குப்பின் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் கழித்தார்கள். அதுவுமொரு நீண்ட கதை. முப்பது மாதங்கள் சிறைவாசத்திற்குப்பின்னர் இருவரும் விடுதலையானார்கள். கலைவாணர் தனது பெயரையும் புகழையும் மிகவிரைவிலேயே மீட்டெடுக்கிற பணிகளில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டார். அப்படியானதொரு அற்புத முயற்சிதான் அவரே தயாரித்து, இயக்கிய வெற்றிப்படமான மணமகள் (1951). மணமகளின் வெற்றிக்குப் பல காரணங்கள். கலைவாணரே தனது படநிறுவனமான எனெஸ்கே பிலிம்ஸ் சார்பில் தயாரித்தார். அவரே படத்தை இயக்கினார். அவற்றைவிட இரண்டு முக்கிய காரணங்கள் அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. மணமகள் கதை பிரபல மலையாள நாடக ஆசிரியர் முன்ஷி பரமுபிள்ளையின் சுப்ரபா நாடகக் கதையை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் அதன் திரைக்கதையையும் வசனத்தையும் கலைஞர் மு. கருணாநிதி எழுதினார்.
மணமகளில் சமூக சீர்திருத்தவாதியாக வலம்வந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் நடத்தும் அநாதை ஆசிரமத்தில் அடைக்கலமாக வந்து, அந்த ஆசிரமத்தின் வளர்ச்சியில் பங்குகொண்டு அங்கிருக்கும் பிள்ளைகளுக்குக் கலைகளை ஊட்டுகிறார் இளம் விதவையாக வரும் டி.ஏ.மதுரம். ஆசிரமத்தின் புரவலரின் மகளாக பத்மினியும் அவரது லண்டன் காதலராக சகஸ்ரநாமமும் பத்மினிக்கு சங்கீதம் கற்றுத்தரும் பாகவதராக - மதுரத்தை வஞ்சித்தவராக டி.எஸ். பாலையாவும் பத்மினியின் அப்பாவிடம் கணக்குப் பிள்ளையாகப் பணியிலிருக்கும் வயது முதிர்ந்தவரின் இரண்டாவது மனைவியாக லலிதாவும் என்று ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளமே உண்டு. பத்மினி கதாநாயகியாக நடித்த முதல் படம் இந்த மணமகள். கதையின் போக்கு படம் முழுக்க பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராகவே அமைந்திருந்தது. கலைவாணர் ஒருபுறம் ஆயிரத்துத் தொளாயிரத்து அம்பது அறுபது நாடகம் போட்டு, 50 களில் இருந்த பிற்போக்குத்தனங்கள், மனிதர்களிடையே நிலவிய ஏமாற்று எல்லாம் 60 களில் மாறப்போகிறது என்று சமூக மாற்றத்தைக் கனவுகளாக விதைத்தார் என்றால், மறுபுறம் இளம் பெண்ணை மணந்த முதியவரிடம் அந்த இளம் மனைவி, “பூனை எங்கே வீணை வாசிக்கப்போகிறது, அதுக்குப் பானையை உருட்டத்தானே தெரியும்..?” என்று பொடிவைத்து அதிரடி வசனம் பேசுவதானது கலைஞரின் பேனாவின் சமுதாய சீர்திருத்தப் பார்வையோடான ரசவித்தைகளென வெளிப்பட்டன.
உடுமலை நாராயண கவி படத்திற்குத் தேவையான கருத்துச்செறிவுள்ள பாடல்களை இயற்றித்தந்தார். அன்பே கடவுள் என்றது எதனாலே... என்று கலைவாணர் படத்தின் திறப்புப் பாடலைப் பாடி, சின்னஞ்சிறுவர்களுக்கு விழிப்பை விதைக்கிறார். நல்ல பெண்மணி என பெண்பிள்ளைகளுக்கு நெறியூட்டுகிறார் மதுரம். ஆனாவிலாசம்தானப்பா என்று அதிர்ஷ்டத்தைக்குறித்துப் பாடுகிறார் நகைச்சுவைக் கலைஞர் டி.எஸ். துரைராஜ். தூய செவ்விசையில் அமைந்த எல்லாம் இன்ப மயம் என்று தொடங்கும் பாடல் மிகவும் பிரபலமடைந்தது. மகாகவி பாரதியின் சின்னஞ்சிறு கிளியே பாடல் இந்தப் படத்தின் இசையின்பத்துக்கு மேலும் அழகூட்டியது. மணமகள் படத்திற்கு மிகவும் நேர்த்தியோடு இசையமைத்திருந்தார் அந்நாளின் பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன். திரைக்கதை, வசனம் எழுதிய கலைஞர் முதல் இசையமைப்பாளர், பாடலாசிரியர், படத்தொகுப்பு மேற்கொண்டவர் அவர்களின் உதவியாளர்களாகப் பணியாற்றியவர்கள் எல்லோரையும் திரையில் காட்டி புதுமையாக அறிமுகம் செய்துவைத்தார் கலைவாணர். படத்தின் கதையும் வசனங்களும்கூட அந்நாளில் ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்ததாகவே உணரப்பட்டது. எடிட்டிங் பஞ்சாபி என்று அறிமுகமானார் கிருஷ்ணன் - பஞ்சு இணையில் ஒருவரான பஞ்சு. படம் தெலுங்கிலும் பெல்லி கூத்துரு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழைப்போல மாற்றங்களைச் செய்யாமல் முன்ஷி பரமுபிள்ளையின் மூலக்கதையை அப்படியே இந்தியில் துனியா நா மானே என்றாக்கினார் பிரபல இயக்குநர் வி.சாந்தாராம்.