இயக்குநர் மணிரத்னத்தின் நாயகன் வெளிவந்து 35 ஆண்டுகள் ஓடிவிட்டன. அது 1987இன் திரைப்படம். இன்றுவரையில் நினைவுகூரப்படுவதாகவும் அது உள்ளது. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 500 கோடி ரூபாய் ஈட்டி, வசூலில் வெற்றிபெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். அண்மையில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் 450 கோடி வசூலித்துவிட்டதாம். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஒரு அறிவிப்பை ட்வீட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிக்கப்போவதாகக் கூறியுள்ளார்கள். அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்கிறார்கள். 35 ஆண்டுகளுக்குப்பின் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றப்போகிற அந்த இருவரையும் குறித்து பலரும் பேசத்தொடங்கியுள்ளனர். ரெட் ஜெயன்ட்டுடன் கமலின் ராஜ்கமல் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்தே இந்தப் படத்தை உருவாக்கப்போகிறார்களாம். அது 2024இல் திரைக்கு வருமாம். கமலின் விக்ரம் படத்திற்கு அடுத்து அவர் இந்தியன் - 2 படத்தில் நடித்து வருகிறார். அவரின் அடுத்த படமொன்றை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குகிறாராம். மணிரத்னத்தின் படம் கமலுக்கு 234ஆவது படமாம். அதற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பரவாயில்லை... உலகநாயகன் திரைப்படங்களில் பிசி ஆகிவிட்டார். நாமும் அவரை ரசிக்கிறவர்கள்தானே. எப்படியோ அதன் பக்க விளைவாக அரசியல் களம் பிழைத்தால் மகிழ்ச்சி.