நடிகர்திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். இவரின் இரண்டாவது மகன் தர்ஷன் கணேசன். இவர் ஒரு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கிறார். இப்போது களமிறங்கவுள்ள தர்ஷன் புனேயில் நடிப்புப் பயிற்சி பெற்றவராம். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வீதி நாடகங்களை நடத்தியிருக்கிறாராம். தர்ஷனை பல பட நிறுவனங்கள் அழைப்பு விடுக்கின்றனவாம். விரைவில் தனது சினிமா நுழைவு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் செய்வார் என்கிறார்கள். சினிமா வாரிசுகளுக்கான களமாக மாறிவருகிறதோ? இதுபற்றி ராம்குமார் கூறியதாவது:- ஏற்கனவே எனது மூத்த மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அவருக்கு அடுத்ததாக தர்ஷன் கணேசனும் நடிக்க வருகிறார். புனேவில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தெருக்கூத்து நாடகங்களை அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு பல பட நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விரைவில் இது குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளிவரும் என்று அவர் கூறினார்.