ஓடிடி தளத்திற்காகவென்று படங்களை உருவாக்கும் முறையால் சினிமா அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ள தாக பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பத்திரிகைப் பேட்டியொன்றின்போதுதான் கூறியுள்ளார். செல்போன் மற்றும் லேப்டாப்பில் பார்ப்பதற்காக எனது படங்களை வெளியிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஓடிடியில் நான் படங்களைப் பார்ப்பதில்லை. திரையரங்குகளின் காட்சி அனுபவத்திற்காகத் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அதை எப்படி சுருக்கி சிறிய திரையில் காட்ட முடியும்? இருண்ட திரையரங்கில் இணைந்து பார்க்கக்கூடிய ஒரு சமூக அனுபவம்தான் சினிமா. தொலைக்காட்சியேகூட ஒரு சமரசம்தான். உண்மையில் திரைப்படங்களுக்கான நோக்கம் இதுவல்ல. சினிமா உயிர்ப்பித்திருக்க வேண்டுமென்றால் அது சின்னத்திரையை நம்பி இருக்கக்கூடாது. இன்று ஹாலிவுட்டும்கூட இந்தச் சூழல் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார் அவர் மிகவும் ஆதங்கத்துடன்.