தூக்குத் தூக்கி (1954) படத்தின் பெரும் வெற்றிக்குப்பின் அதன் இயக்குநர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி உருவாக்கிய படம்தான் அபலை அஞ்சுகம். அது 1959-இல் வெளிவந்தது. டி.ஆர்.மகாலிங்கம், சௌகார் ஜானகி, குலதெய்வம் ராஜகோபால், எம்.என்.ராஜம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சி.எஸ்.பாண்டியன், ஸ்டண்ட் சோமு, மனோரமா உள்ளிட்ட பலரும் இந்த அபலை அஞ்சுகத்தில் நடித்திருந்தார்கள். குத்துச்சண்டை வீரர் கோவிந்தன் என்பவரின் மகள்தான் நாயகி அஞ்சுகம். இளம் பெண்ணான அவள் ஒரு திருட்டுக் குற்றச்சாட்டில் ஒரு மாதம் சிறை செல்ல நேர்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஜமீன்தாரினி பார்வதி அம்மாளைச் சந்திக்கிறாள்.
வேலைக்காக ஒரு பரிந்துரைக் கடிதத்தை ஜமீந்தாரினியிடமிருந்து பெற்றுக்கொள்கிறாள். அங்கிருந்து செல்கிற வழியில் சொக்கன் என்ற ரௌடி அவளைக் கடத்தி ஒரு பாழடைந்த வீட்டில் அடைக்கிறான். அங்கே மர்மப் பெண் ஒருத்தி அவளிடமிருந்து அந்தப் பரிந்துரைக் கடிதத்தைப் பறித்துக்கொள்கிறாள். அதை மறுபடியும் அவளிடமிருந்து மீட்கும் அஞ்சுகம் அங்கிருந்து தப்பும் அஞ்சுகத்தின்மீது மீண்டுமொரு திருட்டுப்பழி விழுகிறது. இந்தநிலையில் ஜமீந்தாரினியின் மருமகன் விஜயன் என்பவர் காணாமல் போகிறார். இப்படியான சம்பவங்களால் உருவாகும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு அஞ்சுகம் தன்னையொரு குற்றமற்றவள் என மெய்ப்பிப்பதும், வில்லன்கள் அம்பலப்படுவதும் மீதிக் கதை. ஏ.எல்.நாராயணனின் திரைக்கதை, வசனத்தில் உருவான இந்த அபலை அஞ்சுகம் படத்தின் கதை அந்நாளின் பிரபலமான சிறுகதை எழுத்தாளர் கி.ரா.கோபாலன் எழுதியது. கி.ரா.கோபாலன் காட்டூர் கண்ணன் என்ற புனைபெயரிலும் எழுதிவந்தார்.
திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், சினிமாடோகிராஃபர் மற்றும் படப்பிடிப்பு நிலைய உரிமையாளர் என்று பன்முகங்களைக் கொண்ட திறமைவாய்ந்த, இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களை உருவாக்கி இயக்கினார். அவர் இயக்கிய தூக்குத் தூக்கி அவருக்கு ஒரு சிறந்த அடையாளத்தைத் தந்தது. பொருளாதாரத்திலும் அவருக்கு ஒரு ஏற்றத்தைத் தந்த படம் அது. பிரபலமாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், ஆர்.பிரகாஷ் போன்றவர்களிடம் சினிமா பயின்றவர் கிருஷ்ணமூர்த்தி. அருணா ஃபிலிம்ஸ் எனும் சொந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கி ராஜாம்பாள் என்ற படத்தை முதன்முதலில் எடுத்தார் கிருஷ்ணமூர்த்தி. ஆர்.எஸ்.மனோகர் என்ற அமெச்சூர் மேடை நாடக நடிகரை இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக அவர்தான் அறிமுகப்படுத்தினார். படத்தின் வெற்றியால் மனோகர் அசைக்கமுடியாத நடிகரானார்.
டி.ஆர்.மகாலிங்கத்திற்கு இரட்டை வேடம். அவர் நடிப்பதால் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பாடல்களை உடுமலை நாராயணகவி, மருதகாசி, சுரதா, தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன், தஞ்சை மாரிமுத்து, ஏ.எல்.நாராயணன் ஆகியோர் எழுதியிருந்தார்கள். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் பிரபலமாயின. படத்தில் இடம்பெற்ற வெண்ணிலா குடை பிடிக்க என்று தொடங்கும் பாடலை உடுமலையார் எழுதினார். பல்லவியை எழுதி முடித்தபோது அவருக்கும் இசையமைப்பாளருக்கும் கருத்து முரண்பாடு தோன்றியது. தொடர்ந்து பாடலை எழுத மறுத்தார் அவர். அதற்காக எவ்வளவு தொகையும் தரத் தயாராக இருந்தபோதும் உடுமலையார் மசியவில்லை. பாடலின் சரணங்களை சுரதாவை வைத்து எழுத வைத்தார்கள். பின்னர் சமாதானமாகி அந்தப் பாடலுக்கு இறுதி வடிவம் தந்தார் உடுமலை நாராயணகவி. எனவே, அந்தப் பாடலை இயற்றியவர்களாக இருவர் பெயரும் போடப்பட்டது. இதுவொரு விசித்திரமான நிகழ்வாகவே அன்று பேசப்பட்டது.
கே.வி.மகாதேவனுக்கு உதவியாக புகழேந்தி செயல்பட்டார். படத்தில் மொத்தம் 10 பாடல்கள். அவற்றில் 7 பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் ஒருவரே பாடியிருந்தார். எஸ்.சி.கிருஷ்ணன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, பி.லீலா, ராஜலட்சுமி, ரத்தினமாலா ஆகியோரும் பாடியிருந்தார்கள். பிரபல நடன ஆசிரியர்கள் தண்டாயுதபாணி பிள்ளை மற்றும் பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் நடன நட்சத்திரம் எல்.விஜயலட்சுமி ஆடும் நடனம் ரசிகர்களைக் கவர்ந்தது. பாரமௌண்ட் ஸ்டூடியோசில் படப்பிடிப்பு நடந்தது. பி.மதுசூதன் ராவ் ஒளிப்பதிவு செய்தார். தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர்.எம்.கிருஷ்ணசாமியின் சகோதரர் ஆர்.எம்.வேணுகோபால் படத்தொகுப்பை மேற்கொண்டார். சிறந்த இயக்கத்தின் காரணமாகவும், சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், டி.ஏ.மதுரம் (அப்போது என்.எஸ்.கே.மதுரம் என்றே அழைக்கப்பட்டார்) ஆகியோரின் சிறந்த நடிப்புக்காகவும், கிட்டப்பாவின் குரலுக்கு வாரிசு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் அமைந்த மதுர கானங்களுக்காகவும் இந்த அபலை அஞ்சுகம் ஒரு வெற்றிச் சித்திரமாக வலம் வந்தது.