என்னுடன் நடிக்க சிலர் பயப்படும் காரணம் இதுதான் என நடிகர் பிரகாஷ் ராஜ் மனம் திறந்துள்ளார்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து தான் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்களை பொது வெளியில் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பெரும்பாலான நடிகர் நடிகைகள் அவருடன் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்:-
“என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது என்னுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.
அவரோடு நடிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. ஆனால், நான் அரசியல் பேசுவது அவர்களுக்கு ஒரு வித பயத்தை உண்டாக்குகிறது. இதனால் என்னுடன் சேர்ந்து நடிக்க சிலர் மறுக்கின்றனர். அதில் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் எந்த விளைவுகளையும் சந்திக்க நான் தயாராகதான் இருக்கிறேன். சில நடிகர்கள், அரசியல் மற்றும் சமூகம் குறித்து பேசாமல் அமைதி காக்கிறார்கள். அவர்களை நான் குறைக்கூற விரும்பவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.