சிலேடைப் புலவர் என்றறியப்பட்ட திருவரங்கம் கவி காளமேகப் புலவரின் வாழ்க்கைக் கதையைப் பல புதுமைகளோடு திரைப்படமாக்கினார் தமிழ் சினிமாவின் புதுமை இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன். அவருடன் வில்லியம் ஜே.மாயிலன் இணைந்துகொண்டார். துணை இயக்குநராக பண்டிட் பி.எஸ்.செட்டியார் பணியாற்றினார். டங்கன், அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து தமிழ் சினிமாவில் பலவித சாதனைகள் புரிந்த இயக்குநர். அந்தப் படத்திற்குக் கதை, வசனம், பாடல்களை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். அவர் பெயரை புதுவை பாரதிதாசன் என்றே போட்டிருந்தார்கள். பாவேந்தருக்கு இது இரண்டாவது படம். படத்தில் மொத்தம் 28 பாடல்கள். அத்தனை பாடல்களையும் பாவேந்தரே எழுதினார். அந்த நாளில் தமிழ் சினிமாவில் 28 பாடல்கள் என்பது மிகவும் குறைவுதான்.
படத்தின் நாயகன் காளமேகமாக நடித்தவர் ஒரு தேர்ந்த தொழில்முறை நடிகர் அல்லர். அந்நாளின் நாதசுர மேதை திருவாவடுதுறை என்.ராஜரத்தினம் பிள்ளையையே காளமேகமாக நடிக்க வைத்தார்கள். அது அப்போதே ஒரு புதுமையாகவும் வியப்புக்குரியதாகவும் பார்க்கப்பட்டது. தனது சொந்தக் குரலில் பாடல்களைப் பாடினார் ராஜரத்தினம். அவரின் ரசிகர்களை மகிழ்விக்க படத்தில் அவர் நாதசுரமும் வாசித்தார். இத்தனைக்கும் கவி காளமேகம் நாதசுரம் வாசிக்கும் வழக்கமுள்ளவர் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. என்றாலும் படத்தில் அவர் நாதசுரம் வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார். அவருக்கு இணையாக, திருவானைக்காவல் கோவில் தேவதாசியாக எஸ்.பி.எல். தனலட்சுமி நடித்தார். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கவி காளமேகத்தின் திரைக்கதை இதுதான். ஸ்ரீரங்கத்தில் பிறந்த வரதன் பெருமாள் கோவிலின் மடப்பள்ளியில் சமையல்காரராக வேலை பார்க்கிறார். அவருக்குத் திருவானைக்காவல் ஆலயத்தின் பெண் இறைப் பணியாளர் - தேவதாசி மோகனாங்கியின் மீது காதல் ஏற்பட, வைணவரான வரதன் சைவ மதத்திற்கு மாறுகிறார். ‘‘சிவனின் அருளால்’’ கவிபாடும் ஆற்றல் பெற்று தமிழில் ஏராளமான பாடல்களைப் புனைகிறார். அவரது சிலேடைக் கவிதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறது.
திருமலைராயன்பட்டினத்தின் அரசனின் அவைக்குப் பரிசில் பெற முத்துப்புலவர் என்பவர் வருகிறார். அங்கே அரசவைக் கவிஞர் அதிமதுரகவியால் அவமானப்படுகிறார். அதனைக் காளமேகத்திடம் கூறி, அதிமதுரகவியின் ஆணவத்தை அடக்குமாறு வேண்டுகிறார். காளமேகம் அரசவையில் நெருப்புக் குண்டத்தின் மேல் கட்டப்பட்ட உறியில் நின்றபடி எமண்டம் பாடி வெல்கிறார். அரசனும் அதிமதுரகவியும் காளமேகத்தை அவமதிக்கிறார்கள். அதனால் கோபங்கொண்ட காளமேகம் திருமலைராயன்பட்டினம் மண்மாரி பெய்து அழிந்து போக ஒரு பாடல் பாடுகிறார். படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்குச் செவ்விசையில் மெட்டுக்கள் போட்டு இசையமைத்தவர் ஆர்.என்.சின்னையா குழுவினர். டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், சி.வி.வி.பந்துலு, காளி என்.ரத்தினம், எம்.வி.மணி, எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன், எஸ். முருகேசன், மாஸ்டர் டி.வி.நமசிவாயம், ஜோக்கர் ராமுடு, குஞ்சிதபாதம் பிள்ளை, கே.ஆர்.வேணுகோபால சர்மா, கே.எஸ்.முத்தையா பாகவதர், எஸ்.பி.எல். தனலட்சுமி, டி.ஏ.மதுரம், பி.ஆர்.மங்களம் உள்ளிட்ட பலர் நடித்தார்கள்.
ராஜரத்தினம் பிள்ளை நாதசுரம் வாசிக்கிற காட்சியில் அவருக்குக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒத்து ஊதினார். அதைக் கண்டு வியந்த ராஜரத்தினம் இப்படிக் கூறினார்: ‘‘ஒருவேளை கிருஷ்ணனுக்கு சினிமாவில் வேலை இல்லாமல் போனால் வாழ்நாளெல்லாம் எனக்கு ஒத்து ஊதும் வேலையைத் தந்து என்னுடனேயே வைத்துக்கொள்வேன்!’’ திருமலைராயன்பட்டினத்தின் அரண்மனையும் மற்ற கட்டிடங்களும் மண்மாரி பெய்வதால் மூழ்கிப்போகும் காட்சியை மிகவும் பிரம்மாண்டமாகவும் தத்ரூபமாகவும் படமாக்கியிருந்தார் இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன்.
திருவான்மியூர் கடற்கரையில் மினியேச்சர் வடிவில் அரண்மனையையும் கட்டிடங்களையும் உருவாக்கி, மிகப்பெரிய ராட்சத மின்விசிறிகளைக் கொண்டு கடற்கரை மணலைப் பறக்கவிட்டு இதன் படப்பிடிப்பை மிகவும் நுட்பமாக மேற்கொண்டார். அதுவரையில் அப்படியொரு முயற்சி தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்படாததால் ரசிகர்களை இந்தக் காட்சி பெரும் வியப்புக்குள்ளாக்கியது. இவ்வளவு சிறப்புகள் இருந்தும், 1940-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி வெளிவந்த இந்தக் காளமேகம் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை என்பதுவும், சில காட்சிப் புகைப்படங்கள், பாடல்களின் சில இசைத்தட்டுக்கள் தவிர படத்தின் பிரதி ஒன்றுகூட இப்போது நம்மிடம் கையிருப்பில்லை என்பதுவும் நமக்கான துயரமில்லாமல் வேறென்ன?