articles

img

காலத்தை வென்றவர்கள் சாதனை சபாநாயகர்!

மேற்குவங்க சட்டமன்ற சபா நாயகராக பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ஹசீம் அப்துல் ஹலீம் 1935 ஜூன் 5 அன்று பிறந்தார். 

1954 இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்த இவர், 1977 இல் ஜோதிபாசு தலைமையில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்த போது, ஹலீம் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982 வரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 1982 முதல் 2011 வரை 29 ஆண்டுகள் மேற்குவங்க சபாநாயகராக பணியாற்றி, ஒரு மாநிலத்தின் சட்டமன்ற சபாநாயகராக அதிக காலம் பணியாற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார் ஹலீம். சட்டங்கள், நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாக இருந்தார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அவருக்கு இருந்த நற்பெயர், 2005 இல் அவரை காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவராக உயர்த்தியது. 2008 வரை அவர் இந்தப் பதவியை வகித்தார். மாநிலத்தில் மதநல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அயராது போராடியவர்களில் இவரும் ஒருவர். ஹலீமின் சமகாலத்தவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டிய ஒரு தனித்துவ அம்சம், அவர் அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து உலக அளவில் சிந்தித்ததுதான். எளிமையும் அர்ப்பணிப்பும் கொண்ட தோழர் ஹலீம் 2015 நவம்பர் 2 அன்று காலமானார்.