articles

img

பாலின சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் மாநாடு - பி.சுகந்தி

எத்தகைய சமூகத்தில் பெண்கள் விடுதலை சாத்தியம்? 
பொருளாதார சுதந்திரம் மட்டும் பெண்களுக்கு விடுதலை தருமா? 
வர்க்க முரண்பாடு உள்ள சமூகத்தில் பெண் விடுதலை சாத்தியமானதா? 
நிச்சயமாக வர்க்கச் சுரண்டலைத் தகர்க்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் விடுதலையும் மானுட விடுதலையும் ஒன்றோடொன்று பின்ணிப் பிணைந்தது.

உலகப் பொருளாதார மன்றம் 2022 ஆம் ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்து அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. உலகில் ஆண் - பெண் சமத்துவத்தில் இந்தியா 135 ஆவது இடத்தில் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவிற்கு கீழ் 11 நாடுகள் மட்டுமே உள்ளன. ஆண்_ பெண் சமத்துவத்தில் மிக மிகப் பின்தங்கிய நாடாக இந்தியா இருக்கிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண் ணடிமைத்தனத்தை போற்றிப் பாதுகாக்கும் பிற்போக்கு சக்திகளின் வளர்ச்சியே இத்தகைய பாலின பாகுபாட்டிற்குக் காரணம். பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் மனுதர்மத்தை சட்டமாக்கத்துடிக்கும் பிற்போக்கு சக்தி மத்தியிலே ஆட்சியில் அமர்ந்திருக்கும் இச்சூழல் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் சவாலான காலம் ஆகும்.

பெண்கள் மீதான வன்முறை பெண் அடிமைச் சமூகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை வன்முறை பெண்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. பொதுவுடமைச் சமூகம் மாறி வர்க்க சமூகம் ஏற்பட்ட போதே, குடும்பம் என்ற அமைப்பு ஆணாதிக்க கட்டமைப்பாக மாறியது.   பெண்கள் சந்திக்கும் ஒடுக்கு முறைகளை ஆண் பெண் பிரச்சனையாக மட்டுமே பார்க்கின்ற சூழலில் பெண்ணாக, உழைப்பாளியாக, குடிமகளாகப் பெண் சந்திக்கும் ஒடுக்கு முறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் தாக்குதல்கள் பெண்களை பாதிப்பது குறித்தும், குடும்பம் ஜனநாயகத்தோடு இயங்க வேண்டும், வீட்டுப் பணிகளிலும் குழந்தை வளர்ப்பிலும் பொருத்தமான ஆதரவு நடவடிக்கைகள் வேண்டும் என்பது குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிடுகிறது. எனவே குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாத்திட, சமத்துவ சமூகம் படைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 19ஆம் தேதி சென்னையில் ஒரு சிறப்பு மாநாட்டை நடத்துகிறது. 

குடும்ப வன்முறைகள்

பிற வன்முறைகளைப் போல் அல்லாமல் இந்த சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் குடும்ப வன்முறைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இச்சமூகம் குடும்ப வன்முறைகளை கண்டு கொள்வதில்லை. அந்த வன்முறைகள் பெரிதாக வெளியில் கொண்டுவரப்படுவதும் இல்லை. குடும்ப வன்முறையை தனிப்பட்ட ஒரு நபரின் பிரச்சனையாக பார்ப்பதும், மனைவி அல்லது ஒரு பெண் ஆண்களின் உடமை என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டமும் தான் இத்தகைய நிலைமைக்கு காரணம். ஒரு பெண்ணை ஒரு நபர் தாக்கினால் அது ஒரு கிரிமினல் குற்றம். ஆனால் அந்தப் பெண்ணை அவரது கணவன் தாக்கினால் அது அவனது உரிமையின் வெளிப்பாடு என்று பார்க்கும் பார்வையே இச்சமூகத்தில் நிலவுகிறது. எல்லோருக்கும் மனித உரிமை உண்டு. எல்லா இடங்களிலும் ஜனநாயக உரிமை வேண்டும். எல்லோருக்கும் தனிநபர் கௌரவம் உண்டு. ஆனால் மனைவிக்கு மட்டும் குடும்பத்தில் தனிமனித உரிமையோ, கௌரவமோ இல்லை. குடும்பம் என்ற அமைப்பு மனித உரிமைகள் மறுக்கப்படும் ஓர் இருட்டறையாக இருக்க வேண்டும் என்ற மனநிலை உள்ளது.

2015- 16இல் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 15 வயது முதல் 39 வயது வரை உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 30 சதவீதம் பெண்கள் குடும்ப வன்முறையைச் சந்திப்பதாகக் கூறுகின்றது. தேசிய குடும்ப நல ஆய்வு 2019 -20-இல் இந்தியாவில் குடும்ப வன்முறைகள் அதிகம் நிலவும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருப்பதாகவும் இதில் 80 பெண்கள் தங்கள் கணவன் தங்களை அடித்தால் தவறு இல்லை என்று நினைக்கின்ற பெண்களாக இருக்கின்றனர் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. சமீபத்தில் திரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 80 ஆவது திருமண நாள் விழாவில் என் மனைவியை பலமுறை நான் அடித்திருக்கிறேன். ஆனால் அவள் ஒருபோதும் என்னை விட்டு செல்ல முடிவு எடுத்ததில்லை என்று பெருமையாகக் கூறுகின்றார். சமூக சிந்தனை மிக்க திரைப்படங்களை உருவாக்கி இச்சமூகத்திற்கு தர வேண்டிய திரை இயக்குனர் தன் மனைவியை தாக்கியதை பகிரங்கமாகவும், பெருமையாகவும் பேசுகிறார் என்றால் எப்படிப்பட்ட சமூக நலன் சார்ந்த படங்களை அவரால் தயாரித்து இச்சமூகத்திற்கு தர முடியும் என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது.

கடந்த காலத்தில் பல்வேறு சினிமாக்களும் கூட பெண்கள் மீதான குடும்ப வன்முறையை நியாயப்படுத்தியிருக்கிறது. சேதுபதி என்ற திரைப்படத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி தனது அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனையால் கடும் மன உளைச்சலோடு வீட்டுக்கு வந்து அதே கோபத்தில் தன் மனைவியின் கன்னத்தில் அறைகிறார். அவனது மனைவியோ கன்னத்தில் அறைந்தவர் மீண்டும் வந்து கொஞ்சுவார். அதற்காக காத்திருக்கிறேன் என்ற வசனம் பேசுவது வேடிக்கையானது. அடிக்கிற கைதான் அணைக்கும் இதுபோன்ற திரைப்படப் பாடல்கள், திரை வசனங்கள் பெண்களின் மீது நடக்கும் வன்முறையை நியாயப்படுத்துகிறது. இது போன்று குடும்ப வன்முறைகளை நியாயப்படுத்தும் பல்வேறு கருத்துக்கள் சினிமாக்களில் பெண்கள் மீதான குடும்ப வன்முறையை ஊக்கப்படுத்துகிறது. இப்படி எண்ணற்ற சம்பவங்களை சினிமாவில் தொடர்ந்து காட்டிக் கொண்டிருப்பது ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் ஒரு செயலாகும்.

ஊரடங்கு காலத்தில்  குடும்ப வன்முறைகள்

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் பல மடங்கு அதிகமாயின. மக்கள் தங்களது வேலையை இழந்து வருமானத்தை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்ட அக்கால கட்டத்தில் வீட்டிலேயே கணவன், மனைவி, குழந்தைகள் இருக்கும்போது பல்வேறு கருத்து வேறுபாடுகளின் காரணமாக பல குடும்பங்களில் வன்முறைகள் வெடித்தன. ஊரடங்கு அறிவித்து பத்து நாட்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்தது.  தமிழகத்திலும் அதே நிலை தான் .அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாத்திட ஒரு ஹெல்ப்லைன் துவங்கியது. ஒரு மாத காலத்தில் 52க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகளை சந்திக்க நேரிட்டது .ஊரடங்கு காலத்தில் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் லுடோ விளையாடிக் கொண்டிருந்தபோது தொடர்ந்து இரண்டு முறை மனைவி விளையாட்டில் வெற்றி பெற்றதால் அதை தாங்க முடியாத கணவன் மனைவியை அடித்து அவளது விலா எலும்புகளை உடைத்த சம்பவம்,விளையாட்டில் கூட தனக்கு கட்டுப்பட்டவளாக தனக்கு கீழானவளாக, மனைவி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனையை,  நடவடிக்கையைக் காட்டுகிறது.  மேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு காலத்தில் ஏழு லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் உருவாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாகும். இதனால் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே சாதாரண காலங்களை விட பேரிடர் காலங்கள் பெண்களின் மீதான குடும்ப வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

இன்றைய சூழலில் பெண் கரு அழிக்கப்படுவது ஒரு முக்கிய வன்முறையாகவும், மனித உரிமை மீறலாகவும் முன்னுக்கு வந்துள்ளது .ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் பெண் குழந்தைகளின் விகிதம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கவலைக்குரியதாகவே நீடிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதாச்சாரம் 2015 16-இல் 1000த்துக்கு 954 ஆக இருந்தது இப்போது 878 ஆக சரிந்து இருப்பதன் மூலம் பெண் கருக்கொலை, சிசுக்கொலை அதிகமாகி இருப்பதை அறிய முடிகிறது தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தேசிய சராசரியை விட குறைவான பிறப்பு பாலின விகிதம் நிலவுகிறது. பெண் கருக் கொலை, சிசுக்கொலை, குழந்தை திருமணங்கள், சாதிய ஆணவக் கொலைகள் என அனைத்து வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்து வருகின்றன. கடந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் ஏழாயிரம் குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதாக ஆய்வு அறிக்கையை சொல்லுகின்றது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட காலகட்டத்தில், பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியாத சூழலில் திருமணம் செய்து வைக்கும் நிலை அதிகரித்துள்ளது. மேலும் ஊரடங்கால் வேலை இழந்த குடும்பங்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டு தங்கள் குழந்தைகளை வயது முதிர்ந்த ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் அவல நிலையும் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இத்தனை வன்முறைகளுக்கு மத்தியில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து தொடர்ந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கான இயக்கங்களை நடத்தி வருகிறது.

சோசலிசமே மாற்று

தனக்கென்று எந்த நலனையும் எதிர்பாராது நச்சுபிடித்த வீட்டு வேலையில் மூழ்கிபெண்கள் வலுவிழந்து, வாடுவதைக் கண்டும் காணாமலும் நகரும் குடும்ப வாழ்க்கையின் மீது முதல் முறையாக பெரும் தாக்குதலை தொடுத்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் தோழர் அலெக்ஸாண்ட்ரா கொலந்தாய். எத்தகைய சமூகத்தில் பெண்கள் விடுதலை சாத்தியம்? பொருளாதார சுதந்திரம் மட்டும் பெண்களுக்கு விடுதலை தருமா? வர்க்க முரண்பாடு உள்ள ஒரு சமூகத்தில் பெண் விடுதலை சாத்தியமானதா? இத்தகைய கேள்விகளை முன்வைத்தவர் . அவர் நிச்சயமாக வர்க்கச் சுரண்டலைத் தகர்க்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.

பெண் விடுதலையும், மானுட விடுதலையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது என்கிறார் அவர்.சோவியத் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து உலகுக்கே முன்மாதிரியான சட்டங்களை இயற்றி பெண் விடுதலைக்கான வலுவான சமூக அடித்தளத்தை உருவாக்கியவர். பழைய அமைப்புகள் எல்லாவற்றையும் தகர்த்து புதிய சமுதாயம் படைக்கத் தயாரானால், குடும்ப அமைப்பை மட்டும் தொடக்கூடாது என்று பதறுகின்றவர்களை கடுமையாக விமர்சித்தவர் இவர். பெண்களின் பணிகள் புதிய சோசலிச சமூகத்தில் சமூகமயமாக்கப்படுவதை உறுதிப்படுத்தினார். அங்கு கல்வி நிறுவனங்கள் பெண்களின் திறனை வளர்க்க உதவுவதாக மாற்றப்பட்டன. கற்பதற்கான நேரம் பெண்களுக்கு கிடைக்கும் இடத்தில், பொது அடுக்களை, பொது சாப்பாட்டறை, பொது சலவையகம், பராமரிப்பு வசதி பொது குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றை உருவாக்குவதை சட்டம் ஆக்கினார்.எதெல்லாம் பெண்களின் வேலை என்று குடும்ப அமைப்பு திணித்து வைத்ததோ அதையெல்லாம் அரசின் வேலையாக மாற்றினார். மாமேதை லெனின் வார்த்தைகளில் சொன்னால் நச்சரிக்கும் வீட்டு வேலையில் இருந்து பெண்களை விடுதலை செய்ய சட்டபூர்வமான ஏற்பாடுகளை செய்தார் அவர்.

உலகில் சோசலிச சமூகத்தின் மூலம் பெண்கள் அடைந்த பயன்கள் சோவியத் ரஷ்யா, மக்கள் சீனம், வியட்நாம், கியூபா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளில் காண முடிகிறது. சோசலிச அமைப்பில் பெண்கள், குழந்தைகளின் விடுதலை சாத்தியமாயிற்று. புரட்சி நடந்த அனைத்து நாடுகளிலும் புரட்சிக்கு முன் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்ட பெண்கள் புரட்சிக்குப் பின் சோசலிச சமூகத்தின் மூலம் பெண்களும், குழந்தைகளும் சாதித்த சாதனைகளை எளிதில் மறந்து விட முடியாது. சம வேலைக்கு சம கூலிப் பணியிடத்தில் பாதுகாப்புச் சட்டம், மகப்பேறு வசதி,தொழிற்சங்கங்களில் பெண்களின் பிரச்சனைகளை விவாதிப்பது, விவாகரத்து, விரும்புகிற நபரை திருமணம் செய்ய உரிமை போன்றவை அந்நாடுகளில் உறுதி செய்யப்பட்டன. அந்நாளில் முதலாளித்துவ நாடுகளில் பெண் சமத்துவத்திற்கான குரல் சோவியத் ரஷ்யாவை முன் வைத்தே எழுந்தது. கல்வி, அறிவியல் மருத்துவம் போன்ற துறைகளிலும் விண்வெளி ஆய்விலும் அந் நாட்டுப் பெண்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டது. முதன் முதலில் பெண்ணை விண்ணுக்கு அனுப்பியது சோவியத் ரஷ்யா. வியட்நாமில் குழந்தைப் பருவம் முதல் பெண்கள், தங்கள் விரும்பிய துறைகளை தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்பட்டது.

இத்தகைய சாதனைகள் சோசலிச கட்டுமானத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். கம்யூனிச எதிர்ப்பாளர்கள் கூட பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான நாடு சோவியத் ரஷ்யா என புகழ்ந்தனர். புரட்சிக்குப் பின் அங்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அதனால் உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பெண்கள் மேலோங்கி வந்தனர். உழைக்கும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, குழந்தை பராமரிப்பு ஏற்பாடுகள், குடும்பச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டன. குடும்பச் சட்டத்தின் மூலம் வீட்டு வேலைகளை கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குடும்பத்தில் வீட்டு வேலையை கணவனும் மனைவியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதன்முதலில் சட்டம் கொண்டு வந்த நாடு கியூபா. அங்கு சொத்துக்கள் இருவர் பெயரிலும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. விவாகரத்து பெறுவதில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டது .ஒரு மாத கால அவகாசத்தில் விவாகரத்து கொடுக்கப்பட்டது. அரசியலில் பெண்களின் பங்கும் அதிகரித்தது. அதேபோல் வியட்நாமின் புரட்சிக்குப் பின்னர் அனைத்துத் துறையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே அங்கு நிர்வாகத்துறையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததற்கு காரணம் சோசலிசக் கட்டுமானமே. குடும்பச் சட்டம் பெண்களின் உரிமையை பாதுகாத்தது.

மக்கள் சீனம்

மாவோ தலைமையிலான அரசு அங்கு அமைந்தவுடன் பாலின சமத்துவ கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டன. விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை, கட்டாயத் திருமணம் தடுப்பு, வயது வந்த இரு பாலரும் சம்மதித்தால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை, திருமணத்திற்கு பின்பு தாங்கள் சேர்க்கும் சொத்துக்களில் இருவருக்கும் பங்கு, குடும்ப வன்முறையை குற்றமாக்கச் சட்டம், பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் ஆகியவை மக்கள் சீனத்தில் கொண்டுவரப்பட்டது. சோசலிசம் என்பது பொருளாதார சமத்துவத்தை மட்டும் நிலை நிறுத்துவது அல்ல .அது சமூக சமத்துவத்தையும் முன்னிறுத்துவதாகும். சமூக சமத்துவத்தின் வழியாக பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதை குறிக்கோளாகக் கொண்டது. சோசலிலிசக் கோட்பாடுகளை உருவாக்கிய மாமேதைகள் இதை விரிவாக விளக்கி உள்ளனர். கடந்த காலத்தில் பெண்ணுரிமையை சாத்தியமாக்கிய கியூபா, சோவியத் ரஷ்யா, வியட்நாம், கொரியா போன்ற சோசலிச நாடுகளில் பெண் விடுதலை சாத்தியப்பட்டது.

சுரண்டல் இல்லாத ஒரு அமைப்பில் மட்டுமே மனிதன் சுதந்திரமாக வாழ இயலும். பெண் விடுதலை மானுட விடுதலையோடு இணைந்தது .எனவே மானுட விடுதலையும், பெண் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. தமிழகத்தில் சமத்துவ சமுதாயம் படைத்திட போர்க்களத்தில் நிற்கும் செங்கொடி இயக்கம் பாலின சமத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது. தமிழகப் பெண்களுக்கு சமநீதியும் சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் போராட்டத்தில் போர்ப் படைத் தளபதியாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறுகிறது. இத்தகைய போராட்டத்தில் அனைவரும் இணைவோம். குடும்ப வன்முறை ஒழிப்போம் - சமத்துவம் பாதுகாப்போம்.