உச்சநீதிமன்றம், தில்லி மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் அதன் அதிகாரவரம்பெல்லைக்குள், நிர்வாக அலுவலர்களையும் கொண்டுவந்து பிறப்பித்த முத்திரைபதித்திடும் தீர்ப்பை, செல்லாததாக்கும் விதத்தில், மோடி அரசாங்கம் மிகவும் வெட்கக்கேடான எதேச்சாதிகார நடவடிக்கை எடுத்து, ஓர் அவசரச்சட்டத்தைப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்த அவசரச் சட்டமானது, தில்லி அரசாங்க அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் மாற்றல்களுக்கான அதிகாரத்தை, மீறவும் துணை ஆளுநரிடமே அளிப்பதற்கு வகை செய்திருக்கிறது. துணை ஆளுநரிடமே அளிப்பது என்பது ஒன்றிய அரசாங்கத்திடமே அளிப்பது என்றே பொருளாகும்.
இதனை, தேசியத் தலைநகர் சிவில் சர்வீஸ் அத்தாரிட்டி என ஒன்றை அமைப்பதன் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. இது தில்லியில் அதிகாரிகளை மாற்றுவதற்கும், நியமனம் செய்வதற்கும் பரிந்துரைத்திடும். இந்த அமைப்பின்கீழ் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் (chief secretary) மற்றும் பிரதான செயலாளர் (principal secretary) ஆகியோர் இடம்பெறுவார்கள். எந்தவொரு முடிவும் பெரும்பான்மையின்மூலமே தீர்மானிக்கப்படும் என்பதால், ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் இரு அதிகாரிகளும் சேர்ந்துகொண்டார்கள் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எடுக்கும் முடிவை மாற்றிட முடியும்.
மேலும், துணை ஆளுநருக்கும், இந்த தேசியத் தலைநகர் சிவில் சர்வீஸ் அத்தாரிட்டிக்கும் இடையே கருத்து வேற்றுமை வருமானால், துணை ஆளுநர் முடிவே இறுதியானது. இந்த அவசரச் சட்டத்தின்மூலம், ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளது, அரசமைப்புச்சட்டத்தினை வியாக்கியானம் செய்திட உச்சநீதிமன்றத்திற்கு இருக்கும் உரிமைக்கு சவால் விடுத்திருக்கிறது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச்சட்ட அமர்வாயம், தில்லியில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து, ஒருமனதான மற்றும் நன்கு பொருள்பொதிந்த தீர்ப்பினை அளித்திருந்தது. தீர்ப்பில் சந்தேகத்திற்கிடமின்றி கூறப்பட்டிருந்ததாவது: “ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் என்னும் கொள்கைகள், நம் அரசமைப்புச்சட்டத்தின் அத்தியாவசியமான அம்சங்களாகும் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கமாகும்.” அதில் மேலும் கூறப்பட்டிருந்ததாவது: “ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அதன் எல்லைக்குள் பதவியில் இருக்கும் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாவிட்டால், கூட்டுப் பொறுப்பின் மூன்று சங்கிலிகளுக்கிடையிலான கோட்பாடு தேவையற்றதாகிவிடும்.”
தில்லி, நாட்டின் தலைநகராக இருப்பதால், அதன் நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்திடும் அதிகாரவரம்பெல்லையும், தங்களிடமே இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்து அது மேலும் குறிப்பிட்டிருந்ததாவது: “தில்லி தேசியத் தலைநகர் எல்லை சட்டத்தின் (Government of National Capital Territory of Delhi Act) கீழான அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட பொது ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் தவிர சட்டமன்ற பேரவையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமே அளிக்கப்பட வேண்டும்.”
உச்சநீதிமன்றம், ஜனநாயகப் பிரதிநிதித்துவ அரசாங்கம் என்னும் கோட்பாட்டையும், நிர்வாக அதிகாரிகள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே பதில்சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதையும், அவர்களும் கூட்டாட்சித் தத்துவத்தை ஒழுகி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்தத் தீர்ப்புரையில் உயர்த்திப்பிடித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இவ்வாறு மோடி அரசாங்கம் வேண்டுமென்றே மீறியிருப்பதன் மூலம் அது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தையே அவமதித்திருக்கிறது. மோடி அரசாங்கம், தான் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின், கடந்த ஒன்பது ஆண்டு காலத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதையும், கூட்டாட்சிக் கோட்பாட்டை மீறுவதற்கு ஆளுநர்களைப் பயன்படுத்துவதையும் மேற்கொண்டு வந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கலைத்து அதனை இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியபோதே அரசமைப்புச்சட்டத்தின் மீதான தாக்குதல் கடுமையான அளவை எட்டிவிட்டது. இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச்சட்டத்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பறிப்பதை சட்டபூர்வமாக்கியிருப்பதன் மூலம், ஜனநாயகக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் புதியதொரு மட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இந்தக் கொடுங்கோன்மைமிக்க நடவடிக்கையை செல்லாததாக்கிட, அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில், உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்திட வேண்டியிருக்கிறது. அரசியல்ரீதியாக, இந்த அவசரச் சட்டம், நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்காகக் கொண்டுவரப்படும்போது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தற்போது கடைப்பிடித்துவரும் ஊசலாட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தொடர்பான தன் பகைமை உணர்வை, இதுதொடர்பாக தன் நிலைப்பாட்டினை தீர்மானித்திட விட்டுவிடக் கூடாது. இது ஒன்றும் எந்தவொரு தனிப்பட்ட தலைவர் அல்லது தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அடிப்படைத் தாக்குதல் ஆகும். அவசரச்சட்டத்தை எதிர்ப்பதில் எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றனவோ அந்த அளவுக்கு வரவிருக்கும் காலங்களில் பாஜக-விற்கு எதிரான மிகப்பெரிய போர்க்களத்திற்கு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கட்டமைக்கப்படுவது இட்டுச் செல்லும்.
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
(மே 24, 2023)
(தமிழில்: ச.வீரமணி)