ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் மோடி தலைமை யிலான பாஜக 2019 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இரண்டா வது தடவையாக ஒன்றிய ஆட்சியில் தொடர்ந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ். மதவெறி அரசியல் மிகவும் வேகத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இவர்களது நவீன தாரா ளமயக் கொள்கையால் வறுமையும், வேலையின்மை யும் பெருகுவதோடு பொருளாதாரம் நலிந்து வருகிற சூழலில் மக்களின் அதிருப்தியை மறைத்து, மக்களை மதவெறி எனும் மயக்கத்தில் ஆழ்த்த முயல்கிறது பா.ஜ.க. அரசு. முந்தைய ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் பசு வதை, மதமாற்றம், லவ் ஜிகாத் உட்பட பல பிரச்சனைகளை எழுப்பியும், அதை வைத்து தனது வெறியூட்டப்பட்ட குண்டர்கள் மூலம் சிறுபான்மை மக்களின் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களை அச்சத்திற்குள்ளாக்கியும் செயல்பட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க. தன்னுடைய இரண்டாவது ஆட்சி காலத்தில் மேலும் குரூரமான தாக்குதல்களைத் தொடுத்து வரு கிறது.
சிறுபான்மையினரைக் குறிவைத்து சட்டங்கள்
மோடி தலைமையிலான அரசு இரண்டாவது ஆட்சி காலத்தில் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியது. முத்தலாக் என்பது இஸ்லாமிய மார்க்க நெறிப்படி சட்டப்பூர்வமானதல்ல என்பதையும், இந்திய சமூகத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் முத்தலாக் எனும் வகையிலான விவாக ரத்துக்கள் அதிக அளவில் நடைபெறவில்லை என்பதை தரவுகள் அடிப்படையில் தெளிவுபடுத்தியும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முத்தலாக் அடிப்படையில் செய்யப்படும் விவாகரத்து சட்டப்படி செல்லத்தக்கதல்ல எனத் தீர்ப்பளித்தி ருந்தும் முத்தலாக் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றி யது. பிற சமூகத்தினரால் செய்யப்படும் விவாக ரத்து வழக்குகள் சிவில் சட்டப்படி விசாரிக்கப்படும் நிலையில் முஸ்லீம்களின் விவாகரத்து வழக்கை கிரிமினல் குற்றமாக மாற்றியும், அப்படி விவாக ரத்து செய்யும் முஸ்லீம் ஆண்களை சிறையில் அடைக்க வகை செய்யும் தன்மையுடன் முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசியல் சட்டம் மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவதையோ அல்லது மறுப்பதையோ அனுமதிக்காத நிலையில் முஸ்லீம்களுக்கு மட்டும் குடியுரிமையை மறுக்கும் வகையில் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப் பட்டது. அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் அமைதியான போராட்டங்கள் நடைபெற்றன. தில்லி ஷாகின்பாக்கில் நடைபெற்ற அமைதியான தொடர் போராட்டம் நாட்டு மக்கள் அனைவரையும் ஈர்த்தது. அதற்கு எதிராக தங்களது ஆதரவாளர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் களமிறக்கி கடுமையான தாக்குதல்களை நடத்தின. இதற்கு பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் பகிரங்க மாகவே களமிறங்கினர். அமைதியான போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டன. பலர் மரணமடைந்தனர். அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் சட்டங்கள் அடிப்படையில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிறுபான்மை மக்களிடையே கோபத்தை யும், எதிர்ப்பையும் ஏற்படுத்தும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக ஆட்சி செய்யும் மாநில அரசுகள் தயாரிப்புகளைச் செய்து வருகின்றன. ஒன்றிய அரசு, பாஜக ஆளும் மாநில அரசுகள் மூலம் இதற்கான ஒரு வெள்ளோட்டம் பார்க்கும் முயற்சியாகவே இத்தகைய செயல்கள் அமைந்துள்ளன.
காஷ்மீரின் கதி!
இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரே மாநிலம் காஷ்மீர். அம்மாநில மக்கள் சுய விருப்பத்தின் பேரில் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தவர்கள். இருந்தும் அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்ட 370 ஆவது பிரிவை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்து, பாஜக அரசு தாக்குதல் தொடுத்தது. அம்மாநிலத்தின் மாநில அந்தஸ்தை பறித்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர். அம்மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை உருவாக்குவதற்கு பதிலாக அம்மாநிலம் கவர்னர் ஆட்சிலேயே தொடர்கிறது. இந்நிலையில் தான் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் மூலமாக அம்மாநில தொகுதிகள் மறுசீமைப்பு செய்யப்பட்டு, எக்காலத்திலும் அங்குள்ள பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசு வராத வகையில் தொகுதி சீரழிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவு அங்கு தீவிரவாதிகளின் வன்செயல்கள் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. தீவிரவாதி களின் இச்செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கி றோம். வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் கொள்கைகளோ, வழிமுறைகளோ ஒன்றிய மோடி அரசுக்கு இல்லை என்பதையே இந்நிலைமை காட்டு கின்றது.
துணை போகும் நீதிமன்றங்கள்
கர்நாடக மாநிலத்தில் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து கல்விக்கூடத்திற்குச் சென்ற முஸ்லீம் மாணவிகள் கல்விக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. இதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றால் கர்நாடக நீதிமன்றம் மாநிலம் முழுவதும் ஹிஜாப் அணிந்து கல்விக் கூடங்களுக்குச் செல்ல தடை விதிக்கிறது உயர்நீதிமன்றம். உச்சநீதிமன்றமோ தலையிட மறுக்கிறது. ஏற்கனவே முத்தலாக் சட்டம், சிஏஏ சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு பிரிவு ரத்து போன்றவைகளுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அவற்றை உடனடியாக விசாரித்து, நீதி வழங்கவும் தயாராகவில்லை. பாபர் மசூதி விவ காரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய நீதிக்கு புறம்பான தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது. தற்போது வாரணாசி கியான்வாபி மசூதியை கையிலெடுத்து சங் பரிவாரத்தினர் நீதி மன்றம் சென்றுள்ளதும், அம்மசூதிக்குள் நீரூற்று இருப்பதைப் பார்த்து லிங்கம் இருப்பதாகக் கூறி நீதி மன்ற கமிஷன் ஆய்வுக்குப் பின்னர் சங் பரிவாரத்தினர் கசிய விட்டு, மசூதியை உரிமை கொண்டாடுவதும் அயோத்தி விவகாரம் போன்ற ஒரு சதியின் துவக்கமோ என சந்தேகிக்க காரணமாகிறது. அதிலும் கூட விசா ரணை நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் மாற்றினாலும், 1991 சட்டத்தின்படி தலையிட மறுக்கிறது. மேலும் மதுரா மசூதி, குதுப் மினார், தாஜ்மகால் உள்ளிட்ட பல முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட வழிபாட்டிடங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை உரிமை கொண்டாடி சங் பரிவாரத்தினர் நீதிமன்றங்களை நாடி செல்வதும் மீண்டும் இந்நாட்டில் பதற்றத்தையும், அச்சத்தையும்ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தான் இரு தினங்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் மத்தியில் பேசிய ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மசூதிகளில் லிங்கத்தை தேட வேண்டாம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம் என்று பேசியது பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் நய வஞ்சகச் செயல் என்பதில் எள்ளளவும் சந்தேக மும் இல்லை.
சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பாயும் புல்டோசர்கள்
சமீபகாலமாக சிறுபான்மை மக்கள் தங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவோ, அல்லது பார பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராகவோ எதிர்வினையாற்றினால் பாஜக அரசு நிர்வாகங்கள் அவர்களை இருப்பிடத்தை விட்டே அகற்றிடும் வகையில் அவர்கள் வாழ்விடத்தையும், வாழ்வுரிமை யையும் பறிக்கும் நோக்கத்தில் புல்டோசர்கள் மூலம் வீடுகளையும், கடைகளையும் தரைமட்டமாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தில்லி ஜகாங்கீர்பூர், ஷாகின்பாக் உட்பட பல இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதையும், ஜகாங்கீர்புரியில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை புல்டோசர் கொண்டு தகர்த்த போது மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தாகராத் துணிச்சலுடன் புல்டோசர் முன்னின்று இடிப்பதைத் தடுத்ததையும் நாடே கண்டது.சமீபத்தில் அசாம் மாநிலத்தில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரகுமான் எனும் இளைஞன் காவல் நிலைய சித்திரவதைகளால் மரணமடைந்தார். ஆத்திர மடைந்த அவரது உறவினர்கள் காவல்நிலையத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கல்லெறிந்ததாகக் கூறி புல்டோசர் மூலம் அவர்களது வீடுகளை அசாம் பாஜக அரசின் தூண்டுதல் பேரில் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். சிறுபான்மை யினருக்கு எதிராக இத்தகைய சட்டவிரோத செயல்கள் செய்ய அரசு அதிகாரிகள் பயன்படுவது அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவி உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.
பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களும்; அரசும், அரசு நிறுவனங்களும் கூட இத்தகைய செயல்களில் ஈடுபடுவதும் அரசியல் சட்டத்தின் அடிப்படையான மதசார்பின்மையைத் தகர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. நீதிமன்றங்கள் கூட உதவிக்கு வர மறுக்கின்றன. சில நேர்வுகளில் துணை போகின்றன. பாஜக அரசு தன்னுடைய தோல்விகளை மறைக்கவும், தனது மக்கள் விரோத செயல்களால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தி களை மடைமாற்றம் செய்து மக்களை மத அடிப்படை யில் பிரிப்பதற்கும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பரசியலை வளர்த்து அதன் மூலம் தங்களது ஆட்சியைத் தக்க வைக்கவும் முயல்கிறது.
2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் இத்தகைய வெறுப்பரசியலை பாஜக அதிகப்படுத்தும் என்றே கருத இடமளிக்கிறது.
எனவே தான் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு 2022 ஜூன் 6 (இன்று) பிற்பகல் 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் கண்டன முழக்கத்தை நடத்துகிறது. அதில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக உணர்வு கொண்ட மக்களும் இணைந்து குரல் எழுப்பவேண்டும்.