articles

img

சுங்கக் கட்டணம் எனும் பகற் கொள்ளைக்கு முடிவு கட்டுங்கள்! - டாக்டர் என்.ஜெகதீசன்

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் முக்கியப் பணி அனைத்து மாநிலங்களையும் சாலை கள் மூலம் இணைப்பது மற்றும் அதனை மேம்படுத்துவது; பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமல்லாமல் சரக்குப் போக்குவரத்திற்கும் அத்தி யாவசியமான தரமான சாலைகளை உருவாக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. இதுபோன்ற சந்தர்ப் பங்களில், ஒன்றிய அரசு நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை ஏற்படுத்தி, சுங்கச்சாவடிகளை அமைத்து, அவற்றை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு குத்தகைக்கு கொடுத்து வருகிறது.

தினமும் ரூ.135 கோடி வசூல்

நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தின் கட்டுப்பாட்டில் 1,51,019 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன; இந்த நெடுஞ் சாலைக ளில் 566 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 5134 கி.மீ. நீளமுள்ள நெடுஞ் சாலைகளில் 48 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வரு கின்றன.  இந்தச் சுங்கச் சாவடிகள் வழியாக தினசரி சராசரியாக 64.50 லட்சம் வாகனங்கள் பயணித்து ரூ.135 கோடி வாகன உபயோகிப்பாளர் கட்டணம் அன்றாடம் வசூலிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளில் வாகன உபயோகிப்பாளர் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன் பிரகாரம், ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 என  இரண்டு கட்டங்களாக டோல் கட்டணம் ஆண்டுதோ றும் உயர்த்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம் பர் 1-ஆம் தேதி முதல் வாகன உபயோகிப்பாளர் கட்டணம் உயரப்போகிறது.

15 சதவீதம் உயர்வு

கார், வேன், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்க ளுக்கு ஒரு நாளில் ஒரு முறை பயணிக்க ஏற்கனவே செலுத்தப்படும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.10-உம், பஸ்சுக்கான டோல் கட்டணம் ரூ.20-உம், லாரிகளுக்கான கட்டணம் ரூ.35-உம் மற்றும் பல அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு கட்டணம் ரூ.150-உம் கூடுதலாக வசூலிக்கப்படவுள்ளது.  இந்த கட்டண உயர்வு தற்போதைய கட்டணத்தை விட 15 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, தற்போதுள்ள அதிகப்படியான சுங்கக் கட்டணம் குறித்து பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் கட்டண அறிவிப்பு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் அபரிமிதமான விலையேற்றத்தால் தொழில் வணிகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உபயோகிப்பாளர் வாகன சுங்கக் கட்டணம் கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பது, தொழில் வணிகத் துறையினர் மட்டுமல்லாது, லாரி/பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

விலைகள் மேலும் உயரும்

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், நெல், சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அனைத்து வகையான பிற பொ ருட்களையும் லாரிகள் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால், சுங்கக் கட்டண உயர்வு / பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்க ளின் விலைகள் மேலும் அதிகரிப்பதோடு, பண வீக்கத்தையும் அதிகப்படுத்தும்.

60. கி.மீ இடைவெளியில்...

60 கி.மீ இடைவெளியில் டோல்கேட் எதுவும் அமைக்கக் கூடாது என தேசிய நெடுஞ்சாலைத் துறை  விதிகளில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 60 கி.மீ இடைவெளி தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள 22 சுங்கச் சாவடிகள் ஒன்றிய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டு 3 மாத கால அவகாசத்தில் இவைகள் அகற்றப்படும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்து சுமார் 5 மாதங்களுக்கு மேலாகி யும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மதுரையைச் சுற்றி சிட்டம்பட்டி - எலியார் பத்தி, கொடைரோடு-கப்பலூர், கப்பலூர்-எட்டூர் வட்டம்(சாத்தூர்), எட்டூர்வட்டம்-சாலைப்புதூர் (கயத்தார்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டோல் கேட்டுகள் 60 கி.மீ தொலைவுக்குள்தான் அமைந்துள்ளன. அதேபோல் தமிழகத்தில் சுமார் 16 சுங்கச் சாவடிகள் மாநில அரசின் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் சார்பில் கூடுதலாக அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. ஒன்றிய அமைச்சரின் அறிவிப்பின்படி சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், சுங்கச் சாவடி கூடுதல் கட்டண உயர்வு மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பகற்கொள்ளை

நெடுஞ்சாலைகளில் பயணத்தை மேற்கொள்ளும் போது வாகன உபயோகிப்பாளர்களுக்குத் தேவை யான கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கள், சாலைகளை முறையாக பராமரித்தல், சாலை யின் நடுவில் வெள்ளை மற்றும் மஞ்சள் பெயிண்ட்  மற்றும் ஒளிரும் பட்டை பதித்தல், பாலங்கள் மற்றும்  சாலை சந்திப்புகளில் போதிய விளக்குகள் அமைத்தல் போன்ற எந்த கட்டமைப்புகளும் முறையாகச் செய்யா மல், வாகன உபயோகிப்பாளர்கள்  கட்டணத்தை மட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோ றும் மேலும் உயர்த்திக் கொண்டிருப்பது பகற் கொள்ளைபோல் உள்ளது.    ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் ஆயுட்கால சாலை வரி அரசுக்கு செலுத்தப்படுகிறது. எனவே, சுங்கச்சாவடிகளில், வாகனத்திற்கு ஒவ்வொரு முறை யும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது. தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் பயணப் போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான செலவைக் கொண்டு வருகிறது.

எனவே சாலைகள் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட கால வரம்பிற்குப் பின், சுங்கச் சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அத்துடன் செயல்பட்டு வரும் ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும், சுங்கச்சாவடி ஆரம்பிக்கப்பட்ட வருடம், எத்தனை ஆண்டுகளாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்றும் இந்த வழித்தடத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சுங்கங்கட்டணம் வசூலிக்கப்படும் போன்ற விபரங்களை பொது மக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக சுங்கச்சாவடி களில் போர்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருடாந்திர வாகன உபயோ கிப்பாளர் கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும்.

கட்டுரையாளர்: தலைவர், 
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்.