“அவசரக் குடுக்கை... அப்புறம் அழுகை” என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். இந்தியாவின் முதன்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள தனது பங்குகளின் ஒரு பகுதியை விற்பனை செய்திட மோடி அரசு காட்டுகிற அவசரத்திற்கு இந்தப் பழமொழி மிகப் பொருத்தமானதாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீட்டை மோடி அரசு கையாளும் விதமானது, பெரும் தள்ளுபடி விலையில் பங்குகளைப் பெற கடுமையாகப் பேரம் பேசிய உலகளாவிய ஊக வணிகர்களின் விருப்பங்களுக்கும், ஆசைகளுக்கும் இணங்குகிற அதே நேரத்தில், பொதுமக்களின் நலனை முற்றிலுமாக புறக்கணிப்பதையே காட்டுகிறது. எல்ஐசி நிறுவனத்தை பேணிப் பாதுகாத்து வளர்த்ததில் மட்டுமின்றி, இந்தியாவில் ஆயுள் காப்பீடு செய்வதற்கான கலாச்சாரத்தை ஊட்டி வளர்த்தவர்கள் பல லட்சக்கணக்கான பாலிசிதாரர்கள் ஆவர். அத்தகைய பாலிசிதாரர்களின் நலன்களை அரசு அலட்சியத்தோடு புறக்கணிக்கிறது. அதே நேரத்தில், விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளின் சர்வதேச ஊக நலன்களுக்கு ஆதரவாக உள்ளது. இது, எல்ஐசி பங்கு வெளியீடானது ஒரு மெகா மோசடிக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது என்ற ஐயத்தையே உறுதி செய்கிறது. சொல்லப்போனால், இந்தியாவின் தனியார்மயமாக்கல், வரலாற்றில் இது மிகப் பெரிய மோசடியாகும்.
ஒன்றிய நிதி அமைச்சகத்தின் அழுத்தத்தின் கீழ் ஏப்ரல் 23 சனிக்கிழமையன்று எல்ஐசி நிர்வாகம் (Board), திட்டமிட்ட பங்கு விற்பனையின் அளவை 5 சதவீதத்திலிருந்து 3.55 சதவீதமாகக் குறைக்க முடிவெடுத்தது. பங்கு வெளியீட்டிற்கான தேதிகள் மற்றும் வெளியீட்டு விலையின் மீது பாலிசிதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் அளிக்கும் தள்ளுபடிகள், இன்னபிற விவரங்களை முறையாக இறுதி செய்திட எல்ஐசி நிர்வாகத்தின் கூட்டம் ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது. தனது முறையான வரைவு அறிக்கையை இந்தியப் பங்குச்சந்தை முறையீட்டு வாரியத்திடம் (செபி) ஏப்ரல் 27ம் தேதியன்று எல்ஐசி தாக்கல் செய்துவிட்டது. எல்ஐசியின் பங்கு விற்பனைக்கான அரசின் முயற்சிகள் விதிவிலக்கான சூழ்நிலைகளால் முறியடிக்கப்பட்டன. குறிப்பாக உக்ரைன் போர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் அது ஏற்படுத்திய பாதிப்பு ஆகியவற்றால் இந்நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழலில், மே 12க்குள் முடிவடையும் இறுக்கமானதொரு காலக்கெடுவிற்கு எதிராக அரசு செயல்படுகிறது. செபியிடம் வரைவு அறிக்கையை (DHRP)தாக்கல் செய்வதன் மூலம் எல்ஐசி நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கான முதலாவது முறையான நடவடிக்கையை ஒன்றிய அரசு துவக்கியது. இத்தகைய நடவடிக்கையை துவக்கும் வரை, சர்ச்சைக்குரிய பங்கு விற்பனையை முன்னெடுத்துச் செல்ல அரசுக்கு அவகாசம் இருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பங்கு விற்பனை நடவடிக்கையை செய்து முடிக்கவில்லை என்றால், எல்ஐசி நிறுவனத்தின் செயல்திறன் குறித்த புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுகளை தாக்கல் செய்ய வேண்டி வரும். இது பங்கு விற்பனையை செயல்படுத்துவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்திவிடும். எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதில் காணப்படும் முரட்டுத்தனமான வேகத்தை இந்த நிர்ப்பந்தம் நியாயப்படுத்த இயலுமா என்பது நம் முன் எழும் கேள்வியாகும்.
மிகுதியான தள்ளுபடியில் எல்ஐசி பங்கின் விலை
எல்ஐசி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் அளவை 70-75,000 கோடி ரூபாய்களிலிருந்து 21,000 கோடி ரூபாய்களாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது என பெயர் வெளியிட விரும்பாத நிதியமைச்சக அதிகாரிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு கடந்த சில நாட்களாக ஊடகங்கள் அறிக்கைகளை வெளியிட்டு வந்தன. வெளியீட்டின் அளவைக் குறைக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒரு சிறிய எண்ணிக்கையிலான பங்குகளை வெளியிடுவது அல்லது வருங்கால பங்குதாரர்களுக்கு அளிக்கப்படவுள்ள ஒவ்வொரு பங்கின் விலையையும் குறைப்பது என்பதே அந்த வழிமுறைகள் ஆகும். அரசு வெளியிடவுள்ள பங்குகளின் எண்ணிக்கையை 30% குறைப்பது என்பதிலிருந்து “எண்ணிக்கை” தாக்கம் ஏற்படுகிறது. செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையின்படி, 632.50 கோடி என்ற எண்ணிக்கையிலான எல்ஐசியின் பங்குகளில் 5% என்ற அளவில் – அதாவது 31.625 கோடி பங்குகளை வெளியிட அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது இது 22.1375 கோடி பங்குகளாக (அதாவது எல்ஐசியின் மொத்த பங்குகளில் 3.5%) வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக வெற்றிகரமான காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கான வாதத்திற்கு எதிராக, இக்கட்டுரையாளரைப் போன்று ஒருவர் வாதிடாதவரை, அரசின் இத்தகைய நடவடிக்கையில் இதுவரை எந்த முறைகேடும் இருப்பதாகத் தோன்றவில்லை. “விலை விளைவு” என்பதில் நிதியமைச்சரின் மோசமான உள்நோக்கம், அதன் அனைத்து விதமான தீங்கான போக்கு வெளிப்படுகிறது. இது எப்படி என்பதை நான் விளக்குகிறேன் மில்லிமேன் ஆலோசகர்களின் மதிப்பீட்டின் படியும், செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையின்படியும். எல்ஐசி நிறுவனத்தின் சமீபத்திய உட்செறிவு மதிப்புகள் (embedded value-EV), 5.40 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். அப்படியானால், ஒவ்வொரு பங்கின் அடிப்படை மதிப்பு 853 ரூபாய் ஆகும். உட்செறிவு மதிப்பு என்ற கருத்தின் போதாமைகளை இப்போதைக்கு நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
முதலீட்டாளர்களுக்கு லாபம், பாலிசிதாரர்களுக்கு இழப்பு
துவக்கத்தில், அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்புதான், ஒவ்வொரு எல்ஐசி பங்கின் உண்மையான மதிப்பும் 2.5 மற்றும் 3க்கு இடையேயான பெருக்கல் காரணியைக் கொண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த கணக்கீட்டின்படி ஒரு பங்கின் மதிப்பு 2,133 ரூபாய்களிலிருந்து 2,559 ரூபாய்கள் வரை இருக்கும். இதில் 5% பங்குகளை – அதாவது 31.625 கோடி பங்குகளை - விற்பனை செய்தால் அரசுக்கு சற்றேறக்குறைய 67,456 கோடி ரூபாய்களுக்கும் 80,928 கோடி ரூபாய்களுக்கும் இடையே கிடைத்திருக்கும். “பாதகமான சந்தை நிலைமைகளை” காரணம் காட்டி சர்வதேச முதலீட்டாளர்கள் அளித்த இடைவிடாத தொல்லைகளின் கீழ், எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட உட்செறிவு மதிப்பின் 1.1 மடங்கு என்ற பெருக்கல் விகிதத்தைப் பயன்படுத்தி அதன் மதிப்பீட்டை வியத்தகு முறையில் குறைக்கத் தற்போது தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டாளரான (உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றும் கூட) எல்ஐசியின் உட்செறிவு மதிப்பீட்டை எட்டிட பின்பற்றப்பட்ட கணக்கீட்டு முறையானது அதன் உண்மையான மதிப்பை வெளிப்படுத்துவதாக இல்லை என்பது வேறு விஷயம். மிகக் குறைவான பெருக்கல் காரணியைப் பயன்படுத்துவதற்கு எந்த நியாயத்தையும் கற்பிக்க இயலாது. ஏனெனில், மிகச்சிறிய தனியார் ஆயுள் காப்பீட்டாளர்களும் கூட தங்களது உட்செறிவு மதிப்பில் 2.5 முதல் 3 மடங்கு வரையிலான காரணியைப் பயன்படுத்தியுள்ளனர். மிக நீண்ட சாதனைப் பதிவையும், மிகப்பெரிய சந்தைப் பங்கையும் கொண்டுள்ள எல்ஐசி நிறுவனம், இன்னமும் கூடுதலான பெருக்கல் காரணிக்குத் தகுதியானது ஆகும்.
மிகக் குறைவானதொரு பெருக்கல் காரணியாகிய 1.1 என்பதைப் பயன்படுத்துவது என்பதன் பொருள், பட்டியலிடப்படும் ஒவ்வொரு பங்கின் மதிப்பும் சுமார் 938 ரூபாய்களாக இருக்கும் என்பதாகும். இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் குறைவான வரம்பின் தொகையோடு பார்த்தால், இது 44% மலிவானதாகும். அதிகபட்ச வரம்பின் தொகையோடு பார்த்தால், 63% தள்ளுபடி தரப்படுகிறது. இன்னமும் சரியான ஒப்பீட்டை செய்வது என்றால், 3.5% பங்கு விற்பனையின் மூலம் அரசுக்கு எவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்பதை நாம் மதிப்பிடுவோம். பிப்ரவரி மாதத்தில் நியாயப்படுத்தப்பட்ட பெருக்கல் காரணியை – அதாவது 2.5 முதல் 3 வரை – பயன்படுத்தியிருந்தால், 47,219 கோடி ரூபாய்களிலிருந்து 56,650 கோடி ரூபாய்கள் வரை அரசுக்கு கிடைத்திருக்கும். குறைக்கப்பட்ட காரணியாகிய 1.1 பெருக்கல் விகிதத்தில், ஒரு பங்கு 938 ரூபாய்கள் என்ற விலையில் 3.5% பங்குகள் விற்பனை செய்யப்படும் என ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்படியானால், 20,765 கோடி ரூபாய்கள் அரசுக்கு கிடைக்கும். தனியார்மயமாக்கலுக்கான நடவடிக்கை அப்பட்டமான முட்டாள்தனம் என்பதை இப்போதைக்கு ஒருவர் மறந்தாலும் கூட, அரசின் கருவூலத்திற்கு ஏற்படும் இழப்பானது 26,443 கோடி ரூபாய்களிலிருந்து 35,885 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்.
இது முறைகேடு இல்லையென்றால் வேறென்ன?
கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சந்தைப் பங்கைக் கொண்டுள்ள, ஒட்டுமொத்த பரஸ்பர நிதித்துறையின் முதலீடுகளை விட அதிகமாக முதலீடு செய்து , 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் களங்கமும் இல்லாமல் இருக்கும், இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் முன்னோடியாக உள்ள ஒரு நிறுவனம், பல லட்சக் கணக்கான பாலிசிதாரர்களின் நலனை காவு கொடுத்து, வேகமாக லாபம் சம்பாதிக்க ஏறுமாறாகச் செயல்படும் முதலீட்டாளர்களால் “மதிப்பீடு” செய்யப்பட ஒருபோதும் அனுமதிக்க இயலாது. இந்த காரணத்திற்காகத்தான், எல்ஐசியின் பங்கு வெளியீடு என்பதை மிகப் பெரியதொரு முறைகேடாகவே கருத வேண்டும்.
மதிப்பீடு எனும் சித்து விளையாட்டு
எல்ஐசியின் உட்செறிவு மதிப்பின்படி அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மதிப்பு என்பதும் கூட அந்நிறுவனத்தின் உண்மையான மதிப்பை பெருமளவிற்குக் குறைத்து செய்யப்பட்ட மதிப்பீடே ஆகும். இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனுமதிக்கப்பட்ட உட்செறிவு, மதிப்பீடு பற்றிய கருத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறையே, எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு குறைவாக எட்டப்பட்டதற்குக் காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்துவது முக்கியமானதாகும். அதாவது, ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அடிப்படை மதிப்பை மதிப்பீடு செய்யும் உட்செறிவு மதிப்பீட்டு முறையே கூட, எல்ஐசி போன்ற பிரத்யேகமான நிதி நிறுவனத்தின் மதிப்பை உண்மையாகக் கணக்கிடப் போதுமானதல்ல என்பதாகும். ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மதிப்பை கணக்கிட உட்செறிவு மதிப்பை கணக்கிடுவது என்ற நடைமுறையின் பரிணாம வளர்ச்சியானது சமீபகாலத்தில் – குறிப்பாக பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு உலகளாவிய ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் பெருமளவில் இணைப்புகளையும், கையகப்படுத்தல்களையும் ஏற்படுத்திய உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகான காலத்தில் ஏற்பட்டதாகும் என்பதை வலியுறுத்துவது முக்கியமாகும்.
சுருங்கச் சொன்னால், உட்செறிவு மதிப்பானது, ஒரு ஆயுள் காப்பீட்டாளரின் சாத்தியமான வருமானம் அந்த வணிகத்தை வாங்குபவருக்கு எவ்வளவு மதிப்புள்ளது என்ற கேள்விக்கு சுருக்கமான பதிலை அளிக்க முயல்கிறது. இத்தகையதொரு குறுகிய அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதுதான் உட்செறிவு மதிப்பு என்பதாகும். உண்மையில், கனடா நாட்டு இன்சூரன்ஸ் பாதுகாப்பு நிதி சம்பந்தப்பட்ட கணக்குகளில் நிபுணரான ஃபிரடெரிக் ட்ரெம்ப்ளேயின் அறிக்கை ஒன்று, உட்செறிவு மதிப்பு என்ற கருத்து கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. மதிப்பீட்டிற்காக செய்யப்படும் அடிப்படை அனுமானங்கள் விமர்சனப்பூர்வமானவை என்பதை இதற்குக் காரணமாக சொல்கிறார். உண்மையில், “மதிப்பீட்டு குரு” என பரவலாகக் கருதப்படுபவரும், நியூயார்க்கின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நிதித்துறையின் பேராசிரியருமான அஸ்வத் தாமோதரன் மற்றொரு சூழலில் மதிப்பீட்டைப் பற்றி பேசுகையில், எந்தவொரு மதிப்பீடும் மதிப்பீட்டாளரின் சார்புகளை பெரும்பாலும் பிரபலித்து, மேற்கொள்ளப்படும் அடிப்படை அனுமானங்களைப் பொறுத்தது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். மேலும், மதிப்பீடுகளைத் தீர்மானிக்க உட்செறிவு மதிப்பை அதிகமாக நம்புவது ஆபத்தானது என செக் நாட்டின் இரண்டு அறிஞர்களின் சமீபத்திய ஆய்வறிக்கை முடிவு செய்துள்ளது. அதற்குப் பதிலாக, உட்செறிவு மதிப்போடு, காப்பீட்டு வணிகத்தின் மதிப்பின் சிறந்த தோராயத்தை அடைய கூடுதலாக மற்றொரு முறை பயன்படுத்தப்படும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எல்ஐசியின் வசம் உள்ள அதன் சொத்துக்களின் மதிப்பை ‘மில்லிமேன்’ முற்றிலுமாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது எல்ஐசியின் உட்செறிவு மதிப்பை கணக்கிடும்போது விடுபட்ட மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களிலும் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான சொத்துக்களுடன் அநேகமாக இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது என்ற உண்மையைக் கருத்தில் கொள்கிறபோது, இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதன் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் நம்பகமான மதிப்பீடுகள் எதுவும் இல்லை என்றாலும், அதன் மதிப்பை பல லட்சம் கோடி ரூபாய்கள் என சிலர் மதிப்பிட்டுள்ளனர். இது மில்லிமேன் செய்த உட்செறிவு மதிப்பை விட கூடுதலாக உள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பை எல்ஐசி நிறுவனமே கூட ஒருபோதும் மதிப்பீடு செய்ததில்லை. ஏனெனில், அதற்கான தேவை இருந்ததில்லை. ஆனால், எல்ஐசியின் பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு அதன் புதிய உரிமையாளர்களாக இருக்கும் தனியார் நிறுவனங்கள், எல்ஐசி வசம் உள்ள சொத்துக்களை உருவாக்குவதில் எந்த பங்கையும் ஆற்றாத இந்நிறுவனங்கள், இந்த சொத்துக்களில் உரிமை கோருவார்கள் என்பதையே தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசின் பங்குகளை நீர்த்துப் போகச் செய்வது குறிக்கிறது.
... தொடரும் ...