articles

img

மத மாற்றம் அல்ல, மதவெறியே தேசிய அபாயம் - அருணன்

கல்வி நிறுவனங்கள் மூலமாக கிறிஸ்தவத்தைப் பரப்புகிறார்கள் என்றால் ஏன் சங்கரமடமும், ஜீயர் மடமும், சைவ மடமும் பிற மதத்தவருக்கு என்றே கல்வி நிறுவனங்களைத் துவக்கி அவர்களை இந்து மதத்திற்கு மாற்றக் கூடாது? விசயம் என்னவென்றால், சொந்த மதத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கே கல்வி தரக்கூடாது எனும் வர்ணாசிரம சிந்தனை கொண்டோர் பிற மதத்தவருக்கு அதை வழங்கமாட்டார்கள்.

“மதமாற்றம் தேசிய அபாயம்” என்று சங் பரிவாரத்தைச் சேர்ந்த  தருண் விஜய் “தினமணி”யில் (2.2.22) கட்டுரை எழுதியிருக்கிறார். உண்மையில் சொத்து மாற்றம் தான் தேசிய அபாயம். ஆமாம். அரசு சொத்துக்கள் எல்லாம் தனியார் சொத்துக்களாக அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. நம் முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய பொதுத்துறை நிறுவ னங்கள் எல்லாம் சில பெரு முதலாளிகளுக்கு கைமாற் றப்படுகின்றன. இதனால் நமது பொருளாதாரமே பேராபத்துக்கு ஆளாகியுள்ளது. அது பற்றி மக்கள் பேசக்கூடாது என்றுதான் சங்கிகள் மதமாற்றம் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

கட்டுரையாளரே நமது அரசியல் சாசனத்தின் சரத்து 25- ஐ சுட்டியிருக்கிறார். அது “அனைவருக்கும் சமமான மனசாட்சி சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக மதத்தை நம்புகிற, பின்பற்றுகிற, பரப்புகிற உரிமை உண்டு” என்கிறது. “பரப்புகிற உரிமை” என்றால் அப்படியாக அதற்கு ஆட்படுகிற, மதம் மாறுகிற உரிமையும் உண்டு என்பதாகும். வேடிக்கை என்ன வென்றால் “இந்த உரிமையை லாவண்யாவிடமிருந்து தட்டிப் பறித்துள்ளது அவர் படித்த கிறிஸ்தவக் கல்வி நிறுவனம்” என்று அடுத்துச் சொல்கிறார்! விஷம் குடித்த அந்த மாணவியைக் காப்பாற்ற முயலாமல் சங்கி ஒருவர் பேட்டி எடுத்திருக்கிறார். வம்பாக “குங்குமம் வைப்பதை ஆட்சேபித்தார்களா?” எனக் கேட்டிருக்கிறார். அதற்கு மாணவி “அப்படி எல்லாம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார். அந்த முழு வீடியோவை உடனடியாக வெளியிடாமல் அதில் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து மாணவியின் மரணத்திற்குப் பிறகு வெளியிட்டிருக்கிறார். இதில் எங்கே மாணவியின் மத உரிமை பறிபோயிருக்கிறது?

அது மட்டுமல்ல, காவல்துறை பதிவு செய்த மரண வாக்குமூலத்தில் மதம் மாறச் சொல்லி கட்டாயப் படுத்தியதால்தான் விஷம் குடித்ததாக அந்த மாணவி சொல்லவில்லை. மதமாற்ற வற்புறுத்தல் இருந்ததாகப் பிற மாணவிகள் சொல்லவில்லை. ஊர்க் காரர்களும் சொல்லவில்லை. பாஜகதான் மதம் மாற்ற வற்புறுத்தலே காரணம் என்று இட்டுக்கட்டக் கிளம்பியுள்ளது. அதற்காக விஜயசாந்தி குழுவினரை களமிறக்கியது. தருண்விஜயை கட்டுரை எழுத வைத்திருக்கிறது.  இதன்பின்னால் சங்கிகளுக்கு இருக்கும் நோக் கங்கள் இரண்டு ஒன்று மதநல்லிணக்க மரபைக் கொண்ட தமிழ்நாட்டிலும் மதப்பகைமையை உரு வாக்குவது, இரண்டு- அடித்தட்டு இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தவருக்கும் கல்விச்சேவை செய்து வரும் கிறிஸ்தவ நிறுவனங்களை முடக்கு வது, ஏழைகளுக்கும், விளிம்புநிலை மாந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்பது தான் மனுவாதிகளின் தீய எண்ணம். அதற்குத்தான் இப்படிக் கிளம்பியிருக்கிறார்கள்.

வர்ணாசிரம நோக்கிலிருந்து சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் காலங்காலமாகக் கல்வி மறுக்கப் பட்டு வந்தது. அதில் ஓர் உடைப்பைக் கொண்டு வந்தது கிறிஸ்தவ மிஷனரிகளே. அவர்கள்தான் முதன்முதலாக பரந்த அளவில் சாதி வித்யாசமின்றி கல்வி கொடுக்க முன்வந்தார்கள். அதுவும் நவீன பெண் கல்வியைத் துவக்கி வைத்தது அவர்களே. உதாரணமாக, மதுரையில் மிகவும் பிற்காலத்தில்தான் மகளிர்க்கு என்று அரசுக் கல்லூரி வந்தது. அதற்கு முன்பே இங்கே இரண்டு மகளிர் கல்லூரிகளைத் துவக்கி நடத்தி வந்தது கிறிஸ்தவ மிஷனரிகளே. அவர்கள் மட்டும் இல்லையென்றால் மதுரை மாதர்க ளுக்கு கல்லூரிக் கல்வி அன்று கிடைத்திருக்காது. தமது கல்வி நிறுவனங்கள் மூலம் மதமாற்ற முயற்சியில் இறங்குகிறார்கள் கிறிஸ்தவ பாதிரியார் கள் என்கிறார் தினமணி கட்டுரையாளர். உண்மை என்னவென்றால் மதுரையின் அந்தக் கல்லூரிகளில் படித்த ஆயிரக்கணக்கான பெண்கள் அப்படியொரு புகாரைத் தந்ததும் இல்லை, மதம் மாறியதும் இல்லை.

மதுரையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா விலும் இந்த நிலைதான். “பிரிட்டிஷார் மதமாற்றத்தை ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்தினர்” என்கிறார் தருண் விஜய். ஆனால் அவர்களது 200 ஆண்டுகால ஆட்சிக்குப்பிறகும் இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 2.3 சதவீதம்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை பொருளாதார ரீதியா கக் கொள்ளையடித்தது உண்மை. ஆனால் அவர்கள் மதம் மாற்றத்தை அதற்கான அரசியல் கருவியாக கொண்டிருந்தார்கள் என்று கூறமுடியாது என்பதைத் தான் இந்த புள்ளிவிபரம் காட்டுகிறது. 1925ல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரிட்டிஷாரை எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கவேயில்லை. அதைச் சார்ந்தவர்கள் இன்று திடீரென்று பிரிட்டிஷா ருக்கு எதிராக கச்சை கட்டுவது கேலிக்கூத்து. “தாமாக விரும்பி மதம் மாறுவது இங்கு பிரச்ச னையே இல்லை. வற்புறுத்தி மதம் மாற்றுவது கடவுளுக்கே எதிரானது” என்று பொங்குகிறார் இந்தச் சங்கி. கட்டாய மதமாற்றம் என்பது சாத்தியமேமில்லை. இன்று கட்டாயப்படுத்தி மாற்றினால் நாளை அவர்கள் மீண்டும் மதம் மாறிவிடுவார்கள். காலம் முழுக்க அவர்களை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது. சங்கிகள் ஓலமிடும் “கட்டாய மதம் மாற்றம்” என்பது உண்மையில் நமது அரசியல் சாசனம் தந்துள்ள மதம் மாறும் உரிமையையே பறிக்கும் சதித்திட்டம். ஒருவர் மேஜரான பிறகும் தனது தாய் தந்தையர் பின்பற்றுகிற மதத்தையே பின்பற்ற வேண்டும் என்பதுதான் ஒரு வகைக் கட்டாயப்படுத்தல் வேலை, அவரது கருத்துரிமையை- மனசாட்சி சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். அதனால்தான் நமது அரசியல் சாசனத்தில் ஷரத்து 25 சேர்க்கப்பட்டது. அதை எழுத்தில் மட்டும் வைத்துக் கொண்டு நடைமுறை யில் இல்லாமல் செய்வதுதான் இந்த “கட்டாய மதம் மாற்றம்” எனும் கூப்பாடு. 

ஒரு மதத்தை பரப்புகிற உரிமையை அனைவ ருக்கும் தந்துள்ளது நமது அரசியல் சாசனம். அதை உபயோகிக்கும் உரிமை கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தவருக்கும் உண்டு; இந்து மதத்த வருக்கும் உண்டு. கல்வி நிறுவனங்கள் மூலமாக கிறிஸ்தவத்தைப் பரப்புகிறார்கள் என்றால் ஏன் சங்கரமடமும், ஜீயர் மடமும், சைவ மடமும் பிற மதத்தவருக்கு என்றே கல்வி நிறுவனங்களைத் துவக்கி அவர்களை இந்து மதத்திற்கு மாற்றக் கூடாது? அப்படியாகக் கல்விக் கண்ணை வழங்கலாம் அல்லவா? போட்டி நடக்கட்டுமே. மதம் பரவுகிறதோ இல்லையோ கல்வி பரவுமே! ஏன் செய்யவில்லை கடந்த காலத்தில்? ஏன் செய்யக்கூடாது நிகழ் காலத்தில்? விசயம் என்னவென்றால், சொந்த மதத்தில் உள்ள  அடித்தட்டு மக்களுக்கே கல்வி தரக்கூடாது எனும் வர்ணாசிரம சிந்தனை கொண்டோர் பிற மதத்தவருக்கு அதை வழங்கமாட்டார்கள். கேட்டால் இந்து மதம் இப்படி மதம் மாற்றும் வேலையில் இறங்குவது இல்லை என்கிறார்கள். காஞ்சி சங்கரமடத்தின் பர மாச்சாரியார் வெளிநாட்டு கிறிஸ்தவர்களை மதம் மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார் இந்தச் சங்கி! ஏன் ஒப்புக் கொள்ளவில்லையென்றால், அவர்களை இந்து மதத்திற்கு மாற்றினால் எந்த ஜாதியில் சேர்ப்பது எனும் கேள்வி எழுந்துவிடும். ஜாதிகள் இல்லாத இந்து மதத்தை சனாதனங்களால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. இதுதான் சத்தியம். இதை மறைத்து யோக்கியர்கள் போல பேசுகிறார்கள் சங்கிகள். 

“இந்துக்களால் நடத்தப்படும் பள்ளியில் கிறிஸ்தவ மாணவி ஒருவர் மரணித்திருந்தால்..?” என்று விஷமத்தனமாக கேட்கிறார் இந்தச் சங்கி. சென்னை ஐஐடியில் முஸ்லிம் மாணவி ஒருவர் அங்குள்ள இந்து பேராசிரியரால் அவர் முஸ்லிம் என்பதாலேயே கொடுமைப்படுத்தப்பட்டார். அதை கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தில் கள்ள மவுனம் காத்தவர்கள் இந்த சங்கிகள். அது மட்டுமா? இந்தப் பள்ளிகளில் இந்து மாணவிகளுக்கு பாலியல் துன்பங்கள் நடந்த போது அந்த பள்ளிகளது நிர்வாகங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள்தான் இந்தச் சங்கிகள்! இவரெல்லாம் பேசலாமோ?

இந்த தருண் விஜய்யை நினைவிருக்கிறதா? வடக்கே வள்ளுவருக்கு சிலை வைக்கிறேன் என்று கிளம்பி அங்கே சனாதனிகள் எதிர்ப்புத் தெரிவித்த தும் அதை கடாசிவிட்டு கம்பி நீட்டிய நபர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவப் பெருந்தகையை இந்த பிற மத வெறுப்பாளர்களால் உளப்பூர்வமாக நேசிக்கவே முடியாது. அவர்கள் தமிழை, வள்ளுவரை புகழ்வது எல்லாம் வேஷம்... வேஷம். அப்படியாகத் தமிழ்நாட்டுக்குள் புகுந்து மதவெறி விஷத்தை ஊட்டுவதுதான் அவர்களது இலக்கு. அதையே அவரின் தினமணிக் கட்டுரை உணர்த்துகிறது. தமிழர்கள் புரிந்து கொள்வார்கள். மதம் மாற்றம் அல்ல, மதவெறியே தேசிய அபாயம்.