articles

img

ஏக்நாத் ஷிண்டேக்களும் பாஜகவின் சூழ்ச்சிகளும்! - ஜி.சுகுமாறன்

வலுவான எதிர்கட்சிகள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே பாஜக மற்றும் பிரதமர் மோடியின் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்ற விசாரணை அமைப்புகளையும், பண மூட்டைகளையும் பயன் படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை கவிழ்ப்பதே அவர்களின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. அருணாச்ச லப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களிலும் இதுவே அரங்கேற்றப் பட்டது.  அண்மையில், மகாராஷ்டிராவிலும் இதே ஜன நாயக விரோத நாடகம் அரங்கேற்றப்பட்டது. சிவசேனா வை பிளவுபடுத்தி உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி அரசை பாஜக வீழ்த்தியது. கவர்னர் உத்தரவிட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு காலத் தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து உத்தவ் தாக்கரே பதவி விலகும் நிலை உருவானது. தாக்கரே ஜூன் 29 இரவு தனது பதவி விலகலை பேஸ்புக் லைவ் மூலம் அறிவித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த இரண்டரை ஆண்டுக ளாக சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.   வணிகத் தலைநகரான மும்பையை உள்ளடக்கிய  மாநிலமாக இருப்பதால், மகாராஷ்டிரா வின் அதிகாரத்தை மத்தியில் ஆளும் கட்சியின் அதி காரத்திற்குள் கொண்டு வர கார்ப்பரேட் நிறுவனங் கள் அதிக ஆர்வத்துடன் களமிறங்கின.  எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கும் வணிக அரசியலை தடுத்து நிறுத்த நீதித்துறையும் தவறிவிட்டது. இதனால், உத்தவ் தாக்கரே நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்ய வேண்டி யதாயிற்று. 

முதல்வர் பதவி யாருக்கு?

2019ல் முதல்வர் பதவிக்கான சர்ச்சையில் இருந்து மகாராஷ்டிராவில் தற்போதைய அரசியல் நாடகங்கள் தொடங்கின. 2019 அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவும் பாஜகவும் இணைந்து போட்டி போட்டன. ஆனால் முதல்வர் பதவியைப் பங்கிடுவ தில் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்தன. தலா இரண்டரை ஆண்டுகள் பதவியைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தை பாஜக நிராகரித்ததால் சிவசேனா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேர்தலுக்கு முன்பு சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை அமித் ஷா உறுதியளித்ததாகவும், ஆனால் தேர்தலுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் ஷா தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்றும் உத்தவ் குற்றம் சாட்டினார். கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  2019 நவம்பர் 23,  அன்று காலை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார், அஜித் பவார் மற்றும் எதிர்க்கட்சியான என்சிபியின் சில எம்எல்ஏக்க ளை இணைத்துக் கொண்டார். பின்னர், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தை அணுகியது. பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நீதிமன்றம் கூறி யதை அடுத்து, பட்னாவிஸும், அஜித் பவாரும் ராஜி னாமா செய்தனர். இந்த அரசின் ஆயுட்காலம் நான்கு நாட்கள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து சிவசேனா,  என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தன. இரண்டு ஆண்டுகள் 213 நாட்களுக்குப் பிறகு அந்த அரசும் கவிழ்ந்துள்ளது. 

இரண்டாவது நாடகம்

சிவசேனா தலைவர்களில் ஒருவரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சில சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத் தின் சூரத்திலும், அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டதும் மகாராஷ்டிரா அரசியல் நாடகத் திற்கான திரைசீலை உயர்ந்தது. இதுபோன்ற அரசிய லில் கைதேர்ந்த பாஜக மிகவும் சூழ்ச்சிகரமாக மகா ராஷ்டிரா அரசியல் நாடகத்தை  அரங்கேற்றியது.    எம்எல்சி தேர்தலில் ஆளும்கூட்டணி உறுப்பினர்கள் மாறி மாறி வாக்களித்ததையடுத்து பாஜக தனது நாசகர நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. முதலில் 32 எம்எல்ஏக்கள் கவுகாத்திக்கு வந்த நிலையில், பின்னர் அது 39 ஆக உயர்ந்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தில் சிவசேனாவுக்கு 55 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் பக்கம் சேர்ந்தனர்.  இந்நிலையில், முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.   பாஜக தனது கோரிக்கையை முன் வைத்த உடனேயே முறையான ஆய்வு இல்லாமல் ஜூன் 30 ஆம் தேதி சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறும் உத்தவ் தாக்கரே அரசாங்கத்தை ஆளுநர் கேட்டுக் கொண்டார். ஆனால் ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது,  கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 16 எம்எல்ஏக்களுக்கு துணை சபாநாய கர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க ஜூலை 12-ம் தேதி (இன்று)வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இந் நிலையில், ஜூன் 30-ம் தேதியே எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்று சிவசேனா கேள்வி எழுப்பியது.  இருப்பினும் உச்ச நீதிமன்றமும் காலநீட்டி ப்புக்கு மறுத்தது.

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி...

எம்எல்ஏ க்கள் எந்த கட்சியில் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை,  அவர்களை   வளைத்துப்போட்டு  ஆட்சி அமைப்பதுதான் பாஜகவின் கொள்கை. அதற்காக எந்த கீழ்த்தரமான செயலிலும் ஈடுபட பாஜக தயங்கு வதில்லை. பல கட்சி ஜனநாயகத்தை உடைத்து ஒரு கட்சி ஆட்சியை அமைக்கும் நோக்கில் பாஜக நகர்கி றது. இந்துத்துவா தேசத்தில் பாஜக மட்டும் போதும் என்பது அவர்களின் அணுகுமுறை. இந்தக் கொள் கையை ஊடகங்கள் அதிகளவில் ஆதரிக்கின்றன. அரங்கேறிய ஜனநாயக படுகொலையை, ‘மகாராஷ்டி ராவில் பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று ஊட கங்கள் கூச்சமில்லாமல் வர்ணிக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகமான நாக்பூரை உள்ள டக்கிய மாநிலத்தில் இந்துத்துவாவாத அரசியல் கட்சி ஒன்றே போதும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. 

பால்தாக்கரேயும்  உத்தவ் தாக்கரேயும்

1966 இல் மகாராஷ்டிரா உருவானதுமுதல் ‘இந்துத் துவ தேசியவாதம்’ என்பதை வலுவாக உயர்த்திப் பிடித்தது சிவசேனா தான். ‘மண்ணின் மக்கள்’ எனும் வாதத்தை உயர்த்தி (மராத்தி மானூஸ்) இந்தி பேசுபவர்கள் மீதும் தென்னிந்திய மொழி பேசுபவர் கள் மீதும் கலவரம் நடத்திய கட்சிதான் பால் தாக்கரே யின் சிவசேனா. 1980  முதல் முஸ்லீம் எதிர்ப்பு என்பதே சிவசேனையின் முக்கிய திட்டமாக மாறியது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதில் சிவசேனாவும் பங்கேற்றதாக பால் தாக்கரே பிரகடனப்படுத்தினார்.  பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது  என்று தீவிர இந்துத்துவ வாதத் தை மகாராஷ்டிராவில் பேசி வந்த இயக்கம் சிவ சேனா. பால் தாக்கரே மறைவிற்கு பின், உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவரானார். பின் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு மகாவிகாஸ் அகாதியை உருவாக்கியதும், சிவசேனா இந்த தீவிர இந்துத்துவா முகத்தை இழந்ததாக கருதப்பட்டது. காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதால் சிவசேனா சில சமரசங்க ளைச் செய்ய வேண்டியிருக்கலாம். இந்துத்துவா அரசியலை கைவிடாமல் மகாராஷ்டிர நலன்களை வலியுறுத்தும் அணுகுமுறையை நோக்கி உத்தவ் தாக்கரே நகர்ந்தார் என்பதும் உண்மை.  உத்தவ் தாக்கரேவின் பாஜக எதிர்ப்பு நிலைப் பாடுதான், பாஜகவுக்கு மிகவும் எரிச்சலூட்டியது. ரிபப்ளிக் டிவியின் அர்ணாப் கோஸ்வாமி மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கு எதி ராக உத்தவ் தாக்கரே அரசு எடுத்துள்ள நடவடிக்கை கள் பாஜகவை கலக்கம் அடையச் செய்தது. இருவரும் பாஜகவுக்காக கடுமையாக செயல்பட்டு வருகின்ற னர். பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்ப டையில் டிஆர்பி ரேட்டைக் கையாடல் செய்ததற் காக அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பையில் கங்கனா ரனாவத்தின் சட்டவிரோத கட்டி டம் இடிக்கப்பட்டது. மேலும், மகாராஷ்டிரா காவல் துறை, பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மீதும், மத நிந்தனையின் அடிப்படையில் கருத்து தெரி வித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது. பால்கரில் சாமியாரை அடித்துக் கொன்றது பாஜக தான் என்ற உண்மையை அம்பலப்படுத்த உத்தவ் தாக்கரே அரசு தயங்கவில்லை. இவை அனைத்தும் பாஜகவிற்கு  எரிச்சலை ஊட்டியது. 

அதுமட்டுமல்ல; ஜனாதிபதித் தேர்தலில் பாஜக வாக்கு பலத்தை அதிகரிக்க வேண்டியதும் தற் போதைய தேவையாக மோடி அரசுக்கு உள்ளது.  எனவே உத்தவ் அரசை கவிழ்க்க மோடியும் அவரது கூட்டாளிகளும் தீட்டிய  சதி திட்டத்தின் அரங்கேற் றமே மகாராஷ்டிர அரசியல் நாடக அரங்கேற்றம். பாஜகவின் துணை அமைப்பாகவும் ஊதுகுழ லாகவும் மாற்றப்பட்டுள்ள புலனாய்வு அமைப்பான அமலாக்கப் பிரிவு உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க் கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது எம்.எல்.ஏ.க்களை பாஜக பக்கம் கொண்டு வந்ததில் அமலாக்கப் பிரிவு பெரும் பங்கு வகித்தது. கவுகாத்தி ஹோட்டலில் தங்கியிருக்கும் எம்எல்ஏ ஒருவர், ஷிண்டேவின் பக்கம் சேர்ந்த பிறகு, அமலாக்கப்பிரிவின் அச்சுறுத்தல் இல்லாமல் நிம்மதி யாக தூங்க முடியும் என்று கூறினார். ஊழல், மோசடி செய்தவர்களின் புகலிடமாக பாஜக மாறி வருகிறது. மகாராஷ்டிரா ஆட்சிக்கவிழ்ப்புக்கு களம் அமைக்க பாஜக இத்தகைய நெருக்கடி தந்திரங்களைப் பயன் படுத்தியது. 

இந்திய தேசம் மிகப் பெரிய ஜனநாயக நாடு என உலக மக்களால் போற்றப்படுகிறது,  ஆனால் நடந்தே றிய மகாராஷ்டிர அரசு கவிழ்ப்பு நாடகத்தைக் கண்டு இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனை வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்,  இங்கே  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ தமிழகத் தில் ஒரு ஏக்நாத் ஷிண்டே வரத்தான் போகிறார் என கனவு காண்கிறார்.  அதிலிருந்தே அவர்,  மக்கள் வாக்க ளித்து தமிழகத்தில் பஜக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது,  என்கிற உண்மையை ஒப்புக் கொள்கி றார், தமிழ் மண்ணில் ஏக் நாத் ஷிண்டேவும் வரப்போவ தில்லை, அண்ணாமலையின் பகல் கனவும் பலிக்காது.

கட்டுரையாளர்:  சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர்