தேசம் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராட்டம் நடைபெற்ற வேளைகளிலெல்லாம் கண்ணூர் அதனுடன் இணைந்து நின்றுள்ளது. அடிமைச் சங்கிலி அடித்து நொறுக்கப்பட்டு சுதந்திரத்தின் புது விடியலை நோக்கி நாம் பீடுநடைபோட்ட போது புரட்சி பூமியின் (கண்ணூர்) மண்ணும் சிவந்திருந்தது. நிலப் பிரபுத்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக சமர் புரிந்துதான் அநீதிக்கு எதிராக தீப்பந்மேந்தி கண்ணூர் ஜொலித்து நின்றது. மறுமலர்ச்சி நாயகர்களின் சிந்தனைகளையும் கம்யூனிஸ்ட் கருத்துக்களையும் முதலில் ஏற்றுக் கொண்ட மண்ணில் இரத்தமும் கண்ணீரும் தியாகமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த வரலாறு என்றும் துடித்து நிற்கிறது. இதிகாசங்களுக்கு இணையான அந்த வரலாற்றின் மக்கள் தேடலாகவும் கட்சி காங்கிரஸின் ஒரு பகுதியாக நடைபெற்ற செயல்பாடுகளையும் நாம் நிர்வகித்தோம். வரலாற்றைத் திருத்தி எழுதும் இந்தக் காலத்தில் இந்தத் தேடலுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.
இத்துடன் காலத்திற்கேற்ற விசயங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்தரங்கம், மாநாடு, வரலாற்றுக் கண்காட்சி என அகில இந்திய மாநாட்டு நிகழ்வுகள் கண்ணூ ரின் கம்யூனிஸ்ட் திருவிழாவாக விளங்குகிறது. 23வது கட்சி காங்கிரஸின் முன்னோடியாக நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வும் கண்ணூ ரின் புரட்சிகர இயக்கத்தின் வலிமையையும் மக்களின் பேராதரவையும் பறைசாற்றுவதாக அமைந்தன. கிராமம் நகரம் என்ற பேதமில்லாமல் அனைத்துப்பகுதி மக்களும் செங்கொடியை நெஞ்சோடு சேர்த்தணைத்து மாபெரும் மாநாட்டுச் செய்தியை உள்வாங்கினர். ஜனவரி 17ஆம் தேதி வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது முதல் முடுக்கிவிடப்பட்ட இயந்திரம்போல் கட்சி முழுவதும் ஒரே அணியாக முழு மனதுடன் செயல்பட்டதன் பலனாகும் இது. முக்கிய தலைவர்கள் முதல் சாதாரண கட்சி அனுதாபி வரை கட்சி காங்கிரஸ் செயல்பாடுகளில் பங்கெடுத்தார்கள். கருத்தரங்குகளும் சொற்பொழிவுகளும் மாநிலம் முழுவதும் பாய்ந்தோடியது. கட்சிக் கிளைகள் மட்டத்தில் நடைபெற்ற குடும்ப சங்கமங்கள் கவனத்தை ஈர்த்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நாட்டின், மக்களின் திருவிழாவாக மாறுகின்ற அதிசயமான காட்சிகளை எங்கும் காண முடிந்தது. இப்போது அனைத்துப் பாதைகளும் கண்ணூரை நோக்கித் திரும்பியுள்ளன. மாநாடு நடைபெறும் நாட்களில் மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும். மாநாடு துவங்கியவுடன் கண்ணூ ர் ஒரு மினி இந்தியாவாக மாறும்.
கேன்வாஸ்கள் சிவந்தபோது...
கேன்வாஸில் சிவப்பு வண்ணம் தீட்டி ஓவியர்கள் கட்சி காங்கிரஸின் பிரச்சாரத்திற்குத் துவக்கமிட்டனர். கண்ணூரின் போராட்ட வரலாறை ‘கேன்வாஸில்’ தீட்டிய ‘ஸ்கார்லெட் ஓவியர்கள் சங்கமம்’ நிகழ்ச்சி பிரபல ஓவியர்களின் கைவண்ணத்தால் நிரம்பியது. பய்யாம்பலத்தில் ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் முகாம்களிலும் போராட்டத்தின் சிவப்பு ஓவியங்கள் நிரம்பியிருந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட சித்திரச் சுவர்கள் மற்றும் சித்திரத் தெருக்கள் கலைஞர்களின் படைப்பாற்றலை பறைசாற்றின. கலைஞர்களின் பெரும் ஆதரவு அகில இந்திய மாநாட்டுப் பிரச்சாரத்திற்குக் கிடைத்தது. அனைத்துப் பகுதிகளிலும் ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சில பகுதிக்குழு அலுவலகங்களில் உருவாக்கப்பட்ட போராட்டச் சுவர் சித்திரங்கள் மினி கண்காட்சியாக மாறியது. அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு ’வரலாற்றுச் சுவர்’ என்ற பேரில் கண்ணூர் பிரதேசத்தின் வரலாற்று ஆவணங்களை முழுமையாக டிஜிட்டல் ஆர்கைவ் வடிவத்தில் நாம் தயார் செய்தோம். கண்ணூர் மாவட்டத்தின் நேற்றைய நாட்கள் அடையாளப்படுத்திய வரலாற்றுத் தேடல்களும் சேகரிப்புகளும் ஆர்கைவில் தொகுக்கப்பட்டன. தேசிய இயக்கம், சுதந்திரப் போராட்டங்கள், விவசாயிகள்-கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம், இதிகாசங்களுக்கான மக்கள் எழுச்சி முதலியவற்றின் மையமாக இருந்த கண்ணூரின் அறிந்த மற்றும் அறியப்படாத வட்டார சரித்திரத்திற்கான பயணமாகும் வரலாற்று ஆர்கைவ். பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் துவக்கிவைத்ததுடன் ‘வரலாற்றுச் சுவர்’ தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக மிக அதிகமான தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவட்டமாகும் கண்ணூர். நாட்டிற்காக 171 அன்புத்தோழர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். கையூர், கரிவெள்ளூர், காவும்பாய், பாடிக்குன்னு, தில்லங்கேரி, முனயன்குன்னு, கூத்துபறம்பு எனக்கூறுவதற்கு அவ்வளவு வீரச் சரித்திரம் உள்ளது. தலசேரி கடற்கரையில் பிரிட்டிஷ் காவலாளிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான அபுமாஸ்டர், சாத்துக்குட்டி ஆகியோர்தான் கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் இரத்த சாட்சிகள். முதல் கல்விநிலைய இரத்த சாட்சி அஷரப் வாழ்ந்த மண்ணும் கண்ணூர்தான். கே.வி.சுதீஷ் முதல் தீரஜ் வரையிலான மாணவ தலைவர்கள் உள்பட பல்வேறு போராளிகளை கண்ணூர் மாவட்டம் இழந்துள்ளது. கடைசியாக கோடியேறி புன்னேலில் மீனவத் தொழிலாளி ஹரிதாஸை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொலை செய்தது அகில இந்திய மாநாட்டுப் பணிகளுக்கிடையேதான். இந்த தியாகிகளின் நினைவுகள்தான் சிவப்பு நினைவுகளாக பங்கு வைக்கப்பட்டது. வரலாறாக மாறிய செங்கொடி தினம் ஏப்ரல் 1 அன்று மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட செங்கொடி தினத்தின் மூலம் கண்ணூர் படைத்த வரலாறு உலகின் கவனத்தை ஈர்த்தது. மக்கள் கடல் தங்கள் கைகளில் ஏந்திய செங்கொடிகளால் கண்ணூ ரின் புரட்சிகர இயக்கம் படைத்த சாதனையை இனி யாராலும் அவ்வளவு சீக்கிரம் முறியடிக்க முடியாது. கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் இரத்த சாட்சிகளான அபு மற்றும் சாத்துக்குட்டி ஆகியோர் பிரிட்டிஷ் காவலர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தலசேரி ஜவஹர்கட் முதல் கண்ணூர் கால்டெக்ஸில் அமைந்துள்ள ஏகேஜி சிலை வரை மனிதக்கடல் செங்கொடியை மார்போடு சேர்த்தணைத்து நின்றது. தொடர்ந்து செங்கொடி உயர்த்தி 23 கி.மீட்டர் நீண்ட கொடி நிகழ்ச்சி வரலாற்றில் முதல் நிகழ்வு என்ற வகையில் உலக சாதனைப் புத்தகத்தில் (Universal record forum) இடம் பெறுவதற்கான தகுதியைப் பெற்றது. மேலும் கரிவெள்ளூர் தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாஹி பூழித்தலையில் சிறப்பாக அமைக்கப்பட்ட செறுகல்லாயி தியாகிகள் நுழைவுவாயில் வரை இடைவெளிவிட்டு 53 முக்கிய மையங்களில் 150 மீட்டர் நீளமான செங்கொடியை ஏந்தி மக்கள் அணிவகுத்தார்கள்.
நாடு தழுவிய ஆன்லைன் திரைப்பட மேளா, நாடகப் போட்டி, சர்வதேச வினாடி வினா, பெண்களுக்கான இசைப்பட்டறை, மாரத்தான் மற்றும் மினி மாரத்தான், புரட்சி கீதங்களின் தொகுப்பான ‘சிவப்புப் பூக்கள்’ வெளியீடு, டிஜிட்டல் போஸ்டர், ஸ்டாட்டஸ் வீடியோ போட்டி, முழப்பிலங்காடு கடற்கரையில் பட்டம் விடுதல், பய்யாம்பலம் கடற்கரையில் காரல் மார்க்சின் மணல் சிற்பம், அறிவியல் கண்காட்சி, பெண்களுக்கான இருசக்கர பேரணி, விளம்பரப் பேரணி முதலிய பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்தோம். அகில இந்திய மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் படைப்பாற்றல் மற்றும் கலைகளின் திருவிழாவாக அமைந்தது. கலை இலக்கிய, விளையாட்டுப் போட்டிகளில் பெரும் பங்கேற்பு இருந்தது. பாரம்பரிய உள்ளூர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
அன்பு வீடுகள்
தலைசாய்க்க ஒரு இடம் என்பது அனைவரது விருப்பமாகும். சொந்தமாக வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து மக்களின் ஒத்துழைப்போடு கட்சி அன்பு வீடுகள் கட்டித் தந்தது. ஒவ்வொரு பகுதியிலும் பெருமளவிலான மக்கள் பங்களிப்பாக அன்பு வீடு நிர்மாணப் பணிகள் மாறின. மாநாட்டையொட்டி கண்ணூர் மாவட்டத்தில் 23 அன்புவீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
இ.கே.நாயனார் அருங்காட்சியம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது
கையூர் போராட்ட வீரரும் இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தவருமான இ.கே.நாயனாரின் நினைவாக நாயனார் அகாதமி துவக்கப்பட்டுள்ளது. ஒலி ஒளி அமைப்புடன் டிஜிட்டல் வசதிகளுடன் அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ.கே.நாயனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், கட்சி வரலாறு, போராட்டங்கள் ஆகியவை குறித்த அனைத்து விபரங்களையும் அருங்காட்சியகத்தில் அறிந்து கொள்ளலாம். நாயனார் தன் கூடவே வைத்திருந்த பாக்கெட் ரேடியோ, கடைசியாக அணிந்திருந்த ஆடைகள், பேனா, மூக்குக் கண்ணாடி, இடுப்பு பெல்ட், கைக்கடிகாரம், காலணி, சாய்வு நாற்காலி ஆகியவையும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இ.கே.நாயனார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அகில இந்திய மாநாட்டு இலச்சினையை வெளியிட்டு வரவேற்புக்குழு தனது பணிகளைத் துவக்கியது. மத்தியக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன் இலச்சினையை வெளியிட நாடக இயக்குனர் இப்ராஹிம் வெங்கர் பெற்றுக் கொண்டார். மலப்புறத்தைச் சேர்ந்த மனு கள்ளிக்காடு இலச்சினையை வடிவமைத்திருந்தார். மாநாட்டுச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து நவீன ஊடகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ‘கட்சி காங்கிரஸ் செய்திகள்’ என்ற பெயரில் தினசரி நியூஸ் புல்லட்டின் வெளியிடப்படுகிறது.
மாநாட்டு நிதி வசூல் மக்கள் வரவேற்பைப் பெற்ற பெரும் நிகழ்வாக அமைந்தது. வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் உண்டியல் குலுக்கி மாநாட்டு நிதி வசூல் செய்யப்பட்டது. 4452 குழுக்களில் ஆயிரக்கணக்கான தோழர்கள் நிதி வசூலில் ஈடுபட்டனர். மதப்பண்டிதர்கள், புரோகிதர்கள் உள்பட சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் நிதி வழங்கி உதவினார்கள். மொத்தம் 4.18 கோடி ரூபாய் மாநாட்டு நிதியாக வசூலானது. கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் மே 23 முதல் ஜூன் 1 வரை மும்பையில் நடைபெற்ற முதலாவது அகில இந்திய மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தததாகும். தீரமிகு கய்யூர் போராட்டத் தோழர்களை கண்ணூ ர் மத்திய சிறைச்சாலையில் தூக்கிலிட்டதற்குப் பின்னால் நடைபெற்ற மாநாடாகும் அது. அந்த மாநாட்டில் மொத்தம் 139 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தியாகம் சகிப்புத்தன்மையில் புடம் போட்டவர்களாயிருந்தனர். இவர்கள் அனைவரது மொத்த சிறைவாசக் காலம் 511 ஆண்டுகளாகும். இவர்களில் அதிகக் காலம் சிறையிலிருந்தவர் ஜோஹன்சிங்-27 ஆண்டுகள். கய்யூர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி இரத்த சாட்சி குஞ்சப்பன் நாயரின் சகோதரர் கேளு நாயர் அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தபோது கய்யூர் தியாகிகளுக்கு பிரதிநிதிகள் அனைவரும் செவ்வணக்கம் செலுத்தி வாழ்த்திய நிகழ்வென்பது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
ஏகாதிபாத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிராக கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்திய போராட்டங்களின் பலனாகத்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள் இன்று நாட்டை ஆளுகிறார்கள். தொழிலாளர்கள் விவசாயிகள் வேலையில்லாதவர்கள் என அனைத்துப் பகுதி மக்களுக்காகவும் நாம் போராடுகிறோம். ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தொலைக்கிறது. எரிபொருள் விலை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. மதத்தின் பெயரால் மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். பிஜேபிக்கும் மோடி அரசின் கொள்கைகளுக்கும் மங்களம் பாடும் காங்கிரஸ் கட்சியால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. இடதுபக்கம் தான் சரி என்று கேரளம் தெளிவுபடுத்துகிறது. வராற்றைத் திருத்தி இரண்டாவது முறையாக மக்கள் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு அதிகாரத்தை வழங்கியதென்பது அதன் முந்தைய ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதற்கான அங்கீகாரமாகும். இடதுசாரி அரசு வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்கிறது. இடதுசாரி அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் பட்சத்தில் மூன்றாவது முறையாகவும் ஆட்சியை அமைக்கும் என்பது உறுதி. வயலாரில் இருந்து வரும் கொடிப்பயணமும் கய்யூரில் இருந்த வரும் கொடிமரப் பயணமும் செவ்வாய்க்கிழமை கண்ணூரை வந்தடைந்தது. மாலை 5 மணிக்கு ஏகேஜி நகரில் வரவேற்புக்குழு தலைவர் பினராயி விஜயன் செங்கொடியேற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார். 7,8,9 தேதிகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் நிறைவாக ஏப்ரல் 10 அன்று செந்தொண்டர் பேரணியும் ஏகேஜி நகரில் மாபெரும் பேரணியும் நடைபெறும். மக்கள் முன்னேற்றத்திற்கான புது சரித்திரம் எழுதி மாநாடு நிறைவுபெறும். முதல் முறையாக அகில இந்திய மாநாடு நடைபெறும் கண்ணூர் நகருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் தலைவர்களையும் பிரதிநிதித் தோழர்களையும் மற்றும் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழாக்கம்: மு.சங்கரநயினார்