தீபாவளி அன்று படத்திற்கு டிக்கெட் வாங்குவது பெரும்பாடாக இருக்கும். முண்டியடித்து விழுந்து புரண்டு டிக்கெட் வாங்கி விட்டு பார்த்தால், புதிதாக போட்ட சட்டை கிழிந்திருக்கும். கூட்டத்தில், வேட்டியை இழந்த மானஸ்தர்களும் உண்டு. படத்திற்கு டிக்கெட் வாங்குவதுதான் முக்கியமே தவிர, படம் பார்ப்பது அல்ல. எண்ணெய் தேய்த்து குளித்த மயக்கத்தில், பலர் நிம்மதியாக தூங்கிவிடுவார்கள். என்னதான் புதுப்படமாக இருந்தாலும், அந்த மயக்கத்தில் மங்கலாகத்தான் தெரியும்.
பண்டிகை கொண்டாடுவதை விட அதற்கான தயாரிப்புகள்தான் சுவையானது. ஆனால், இப்போது அனைத்துமே ரெடிமேடாக மாறிவிட்டது. புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட ‘பொங்கலோ பொங்கல் ’என மகிழ்ச்சியாக குரல் கொடுத்த காலம் போய், இப்போது குக்கர் விசிலடிக்க, ரேசன் அரிசியில் பொங்கல் வைக்கும் காலம் வந்துவிட்டது. தீபாவளிகூட ஒருநாள் கூத்தாக மாறிவிட்டது. ஆயத்த ஆடை வாங்கி அதன் அளவுக்கு ஏற்ப பொருத்திக் கொண்டு, இனிப்பகத்தில் ஒரு பாக்கெட் ஸ்வீட் வாங்கி அதற்குச் சமமாக கொஞ்சம் மிக்சரும் வாங்கி, ஒரு கிஃப்ட் பாக்கெட் வெடி வாங்கி, ஷாம்பூ போட்டு குளித்து, பிராய்லர் கோழியும், ஒரு பாக்கெட் இட்லி மாவும் வாங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்தால் தீபாவளி பல கிலோ மீட்டர் தாண்டி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பலருக்கு பிழைக்கப் போன இடத்திலிருந்து சொந்த ஊருக்கு பேருந்து அல்லது ரயிலில் இடம் கிடைத்தால் அதுதான் தீபாவளி போனஸ். அப்படி இல்லாமல், நின்று கொண்டும் தூங்கிக் கொண்டும் ஊருக்கு வந்த அலுப்பு தீருவதற்குள், அடுத்த நாள் ஊருக்குப் போக அலைக்கழியும் போது அந்த நரகா சுரனை கண்ணன் மன்னித்து விட்டிருந்தால், இந்த இம்சை இல்லை என அலுத்துக் கொள்பவர்களும் உண்டு.
முன்பெல்லாம் பெரும்பாலும், அனைவரும் அவரவர் ஊரில்தான் இருப்பார்கள். ரெடிமேட் சட்டை இல்லாத காலம் அது. ஒரு மாதத்திற்கு முன்பே துணி வாங்கி அதைக் கொண்டு போய் தையல்காரரிடம் கொடுத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் அவர் தைத்து விட்டாரா என்று பார்த்துக் கொண்டே இருப்போம். அவரும் நம்மைப் பார்த்தவுடன் நம்முடைய துணியை மேலே எடுத்துப் போட்டு, உங்களுடைய சட்டையைத் தான் தயார் செய்து கொண்டிருக்கிறேன் என்பார். பார்த்தால், அந்த துணியை கிழித்திருக்கக்கூட மாட்டார். இழுத்து இழுத்து தீபாவளிக்கு முதல் நாள், அவருடைய கடையிலேயே தவம் கிடந்து குளிப்பதற்கு முன்னால் சட்டை கிடைத்துவிட்டால், பெரும் புண்ணி யம் செய்தவர் ஆவோம். அவர் பல சமயங்களில் எல்லாம் முடிந்துவிட்டது. பொத்தான் வைப்பது மட்டும் தான் பாக்கி. அனுசரித்துக் கொண்டு போயிருங்கள். தீபாவளி அன்று கட்டாயம் பட்டன் வைத்துவிடலாம் என்பார். சின்ன குழந்தைகளை அளவு கொடுக்க அழைத்துச் செல்லும் பெற்றோர், வளருகிற பிள்ளை நன்றாக விட்டுத் தையுங்கள் என்பார்கள். அவர் தாராளமாக விட்டுத் தைத்ததில், டவுசர் பாவாடை போன்று இருக்கும். அதைப் போட்டுக் கொண்டு போனால், தெருநாய்கள் கோபமாக விரட்டிக் கொண்டு வரும். தீபாவளியை ஒட்டி, முடி வெட்டுகிற வழக்கமும் உண்டு. ஆலமரத்தடிதான் சலூன் கடை. அங்கும் ஒரு கூட்டம் காத்திருக்கும். நம்முடைய முறை வந்த வுடன் வளர்கிற பிள்ளை நன்றாக ஒட்ட வெட்டுங்கள் என்று அசரிரீ கேட்கும். முடிதிருத்துகிற கலைஞர் முடிந்தவரை ஒட்ட வெட்டினாலும், திருப்தி அடையா மல் இன்னும் கொஞ்சம் ஒட்ட வெட்டுங்கள் என்பார்கள். இதற்கு மொட்டையே அடித்து விட்டிருக்கலாம். இந்தக் கோலத்துடன் பள்ளிக்குச் சென்றால், உளி வைத்து தலையை செதுக்கியது யார் என்று கேட்பார்கள்.
பலகாரம் சுடும் படலம் 15 நாட்களுக்கு முன்பே துவங்கிவிடும். ஒரு ஆண்டுக்கு தேவையானதை செய்வதைப் போல, முறுக்கை சுட்டு அடுக்கு வார்கள். அது தீபாவளி முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும் காலியாகாமல் இருக்கும். காரிப்போனாலும் விடமாட்டார்கள். பழைய முறுக்குத்தான் சுவை என்று சமாளிப்பார்கள். அடுத்த அதிசயம் அதிரசம் சுடுவது. அதிரச மாவை பிசைந்து வைப்பார்கள். அது புளிக்க வேண்டும் என்பார்கள். சாராயம் காய்ச்சும் கலை இதிலிருந்து உருவாகி இருக்க வேண்டும். கெட்டி உருண்டை என்று ஒரு விசேஷமான பல காரம் உண்டு. பொரிவிளங்காய் உருண்டை என்றும் சொல்வார்கள். பாசிப்பயறு, புழுங்கல் அரிசியை உள்ளீடாக கொண்டு வெல்லப்பாகில் தயாரிக்கப்படும் பஷ்ணம் இது. கொஞ்சம் கெட்டி அதிகமாகிவிட்டால், பல் உடைந்துவிடும். எடுத்து அடித்தால், மண்டை யை உடைக்கிற அளவுக்கு வலுவானது இது. இப்போது இருப்பது போல, இட்லி அவிப்பது அவ்வளவு எளிதான ஒன்றாக அப்போது இருந்த தில்லை. எல்லோர் வீட்டிலும் ஆட்டுக்கல் இருக்கும். அதில், ஒரு இரண்டு, மூன்று நாட்களுக்கு உட்கார்ந்து ஆட்டினால்தான் தீபாவளி அன்று வீட்டில் உள்ள அனைவருக்கும் இட்லி கிடைக்கும். பெரிய வெண்கலப் பானையில் வைத்து அவிக்கும் இட்லி சைஸ் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். அதிலும்கூட ஐந்தாறு சாப்பிட்டுவிட்டு மலைப்பாம்பு போல நெளிபவர்கள் உண்டு. ஆண்டுக்கு இரண்டு முறைதான் இட்லி எனும் போது விட்டு விட முடியுமா?
விதவிதமான ஸ்நாக்ஸ் இல்லாத காலம் அது. எனவே, இட்லியை ஐந்தாறு துண்டுகளாக உடைத்து, கால்சட்டை பையில் போட்டுக் கொண்டு நான்கு பேருக்கு காட்டிவிட்டு சாப்பிடுபவர்கள் உண்டு. அவர்கள் வீட்டில் இட்லி அவித்தது ஊருக்குத் தெரிய வேண்டுமாம். கொஞ்சம் காலம் கழித்து சிறு நகரங்களில், கிரைண்டர் மிஷின்கள் வந்தன. ஒவ்வொன்றும் ராட்சத சைசில் இருக்கும். அங்கு சென்று மாவு அரைத்து வருவதும் எளிதான ஒன்றல்ல. பெரும் கூட்டம் கூடிக் கிடக்கும். ஐந்தாறு பேர் சேர்ந்து மாட்டு வண்டி யில் மாவு அரைப்பதற்கான அரிசி, உளுந்துடன் முதல் நாளே போய் விடுவார்கள். அங்கு திருவிழாக் கூட்டமாக கிடக்கும். நான் முந்து, நீ முந்து என்று கைகலப்பில் முடிவதும் உண்டு. தீபாவளி முடிவ தற்குள் மாவு அரைத்துக் கொண்டு வந்து விட்டால், ஊரில் அவருக்கு தனி மரியாதை. ஒருமுறை இட்லி மாவு அரைத்துக் கொண்டு வரும்போது, மிரண்டு ஓடிய மாடுகளால் வண்டி கவிழ்ந்துவிட்டது. மாவு அனைத்தும் சாலையில் கொட்டிவிட, மாவை இழந்தவர் வீட்டில் ஊரே கூடி துக்கம்விசாரித்தார்கள். அவருக்கு மாவு போனதைவிட உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு ஆறுதல் சொல்பவர்களின் அவஸ்தையைத் தான் தாங்க முடியவில்லை.
இப்போதெல்லாம் ஹீட்டரைப் போட்டால் வெந்நீர் ரெடி. ஆனால், பெரிய பெரிய குண்டாவில் வைத்து வெந்நீர் சுட வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். வரு டத்தில் ஒருமுறைதான் இந்த வெந்நீர் குளியல். உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் பூசிக் கொண்டு வருவோரைப் பார்த்தால், எண்ணெய்ச் செக்கிற்குள் தவறி விழுந்தவர் போல இருப்பார். இந்த எண்ணெய்யை அரப்பு போட்டு எடுப்பதற்கே அரைநாள் ஆகும். ஆடு வாங்கி வெட்டிப் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் ஆடம்பரம்தான். பெரும்பாலும் வீட்டில் உள்ள நாட்டுக் கோழிகள் மோட்சம் பெரும் நாளாக தீபாவளி இருக்கும். ஒரே ஒரு நாள் விடிகாலையில், இட்லியுடன் சேர்த்து கோழிக் குழம்பு சாப்பிட்ட ருசியை அடுத்த தீபாவளி வரை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இட்லிக்கு ஜோடியாக வடையும் வாய்க்குமானால், அது ஒரு வரம்.
அடுத்து, வெடி போடும் படலம். இப்போதிருக்கிற நவீன வெடிகள் அந்தளவுக்கு இல்லை. ஓலை வெடி தான் பிரதானம். இதெல்லாம் அந்தந்த ஊர் சுதேசி தயாரிப்பு. ஓலையில் கட்டப்பட்ட கருமருந்து வெடியின் சத்தம் சற்று பலமாகவே இருக்கும். இதுதவிர, சுருள் கேப்பை சொருகி வெடிக்க வைக்கும் துப்பாக்கி வாங்கியவர்கள் சிஐடி சங்கருக்கு நிகராக பந்தா காட்டு வார்கள். மற்றவர்கள் பெரும்பாலும், சைக்கிளுக்கு பயன்படும் போல்ட் நெட்டுக்குள் உதிரி கேப் வெடி களை வைத்து வெடிப்பார்கள். இப்படி ஒரு பயன்பாடு எதிர்காலத்தில் வரப்போவதை சைக்கிள் கண்டுபிடித்த பிரான்சின் கோம்ப்டி மீடி டி ஸிவ்ராக்கே எதிர்பார்த்திருக்க மாட்டார். அடுத்து, சினிமா பார்க்கும் காண்டம். சென்னை யில் வெளியாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் தீபாவளிக்கு புத்தம் புதிய திரைப்படம் என்ற பெயரில், படங்கள் வெளியிடப் படும். ஒத்தை மாட்டு வண்டியில் அந்தப் படத்தின் பெருமையை ஒருவர் கூறிக்கொண்டு வருவதைப் பார்த்தால், படத்தின் இயக்குநரே ஆனந்தக் கண்ணீர் வடிப்பார். அந்த வண்டியிலிருந்து தரப்படும் சாணித் தாளில் வடித்த நோட்டீசுக்கு பெரும் கிராக்கியாக இருக்கும். அதிகபட்ச நோட்டீஸ்களை வாங்கியவர் பெரிய சாம்பியனாக கருதப்படுவார். சில பொடிசுகள் தனக்கு ஒன்று வாங்கிக் கொண்டு, வீட்டில் என் தம்பி இருக்கிறான் அவனுக்கு ஒன்று தாருங்கள் என ஊர் எல்லை வரை ஓடுவார்கள்.
தீபாவளி அன்று படத்திற்கு டிக்கெட் வாங்குவது பெரும்பாடாக இருக்கும். முண்டியடித்து விழுந்து புரண்டு டிக்கெட் வாங்கி விட்டு பார்த்தால், புதிதாக போட்ட சட்டை கிழிந்திருக்கும். கூட்டத்தில், வேட்டியை இழந்த மானஸ்தர்களும் உண்டு. படத்திற்கு டிக்கெட் வாங்குவதுதான் முக்கியமே தவிர, படம் பார்ப்பது அல்ல. எண்ணெய் தேய்த்து குளித்த மயக்கத்தில், பலர் நிம்மதியாக தூங்கிவிடுவார்கள். என்னதான் புதுப்படமாக இருந்தாலும், அந்த மயக்கத்தில் மங்கலாகத்தான் தெரியும். அதிலும்கூட, ஒரே நாளில் இரண்டு படம் அடுத்த டுத்து பார்த்துவிட்டு வருபவர்களின் அலப்பறை தாங்காது. எப்படி டிக்கெட் எடுத்தேன் என்பதை ஏதோ படத்தை இவரே தயாரித்தது போல சொல்லிக் கொண்டி ருப்பார். தூக்கக் கலக்கத்தில் இரண்டு படத்தை பார்த்துவிட்டு, கதை சொல்கிறேன் பேர்வழி என இரண்டு கதையையும் போட்டு குழப்புவார்கள். இப்படி ஒருவழியாக தீபாவளியை கூத்தாடி கொண்டாடி முடித்த அடுத்த நாளே, அடுத்த தீபா வளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று பேசத் துவங்குவார்கள். நடந்ததை நினைத்து மகிழ்வ திலும் வருவதை எதிர்பார்த்து காத்திருப்பதற்குமான இடைவெளியில் தான் பயணம் செய்கிறது வாழ்க்கை.