articles

img

உழவு மழை ப.முருகன்

     யமுனையில் வெள்ளம், தாஜ்மகாலின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர். குஜ ராத்தில் கனமழை, சேதம். தெலுங்கானாவில் வெள்ளம். இப்படிப் பல தகவல்கள் மழை பற்றி அவ்வப்போது ஊடகங்களின் மூலம் அறிகிறோம்.

    இது தவிர வானிலை ஆய்வு மையம் மழை பற்றி முன் னெச்சரிக்கை செய்கிறது. லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றோ கனமழை என்றோ மிக அதிக கனமழை என்றோ அறிவிப்புச் செய்கிறது. அது மட்டுமின்றி காற்றழுத்தத்தாழ்வு, புயல் ஏற்படும் அபாயம், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறது. இவையாவும் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் பயன்கள்.  

    ஆனால் மனிதகுலம் அந்தந்தப் பகுதியின் தன்மைக்கு ஏற்ப, தங்களது முன்னோர்களின் அனுபவங்களினால் கிடைத்த அறிவினால் காலநிலை பற்றியும் மழை பற்றியும் ஒரு விதமான அனுபவ அறிவைப்பெற்றிருந்தனர். மேகம் கருக்கு தடி மின்னிக்கிட்டு கம்முதடி இன்னும் கருக்குதே ஈசானி மூலையிலே....என்று மழைக்கான அறிகுறி பற்றி கூறியுள்ளனர்.

   ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலையாள மின்னல் ஈழ மின்னல்சூழ மின்னுதே என்கிறது முக்கூடற்பள்ளு இலக்கியம்.  

   ஆடிக்காத்து அம்மிக்கல்லையும் தூக்கும், ஆடியிலே காத்தடிக்கும் ஐப்பசியில் மழை பெய்யும், கார்த்திகை மாதம் கருத்த இடத்திலே மழை பெய்யும், ஐப்பசியில் அடைமழை பெய்யும், கோடைமழை பெய்யும் என்றெல்லாம் கிராமப்புற மக்களும் விவசாயிகளும் கூறுவது அவர்களின் முன்னோர்களின் பாரம்பரிய அறிவுச்செல்வம் ஆகும்.

   தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது சாரல் என்கிற திரைப்பாடல் நம் முன்னோர்களின் கணிப்பும் பட்டறிவும்தானே! நம் நாட்டுக்கு தென்மேற்குப் பருவமழையும் வட கிழக்குப் பருவமழையும்தான் நீராதாரம், வேளாண் குடி மக்களுக்கு விவசாயத்துக்கு ஆதாரம். அடிப்படை.

   இவை அளவோடு பெய்தால் வெள்ளாமை (வேளாண்மை) செழிக்கும். அளவுக்கு மீறினால் வெள்ளாமையை அழிக்கும். இதைத்தான், மழை பேஞ்சும் (பெய்ந்தும்) கெடுக்கும்; காஞ்சும் (காய்ந்தும்) கெடுக்கும் என்பது முதுமொழி, அனுபவ மொழி குறிக்கிறது. மழைப்பொழிவின் தன்மையை அளவை உழவர் பெருமக்கள் தங்களது அனுபவத்திலிருந்து பல மாதிரியாகக் குறிப்பிடுவார்கள்.

   காற்று வீசு வதைக் கொண்டு இது மழைக்காற்றா, வெறும் அனல்காற்றா என்று சொல்லி விடுவார்கள். ஒரு மாதிரி வெயில் மூடி மூடி (விட்டுவிட்டு) அடிக்கிறது. மேகமும் கருக்கிறது என்பதை வைத்து இன்று மழை வரும் என்று கூறிவிடுவார்கள்.

    வெகு தூரத்தில் பெருமழை பெய்யும்போது அதன் சிதறல் போல் காற்றில் ஓரிரு மழைத்துளிகள் விழுவதைச்சாரல் என்பார்கள். கொஞ்சம் தரை, பூமி நனைகிற மாதிரி மழை லேசாகப் பெய்தால், வாசல் தெளித்துவிட்டு போயிருச்சு என்பார்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாக பெய்தால் நிலம் நல்லா நனையுற மாதிரி பெய்தது என்பார்கள். இன்னும் சிறிது அதிகமாகப் பெய்தால் தெருவில் தண்ணீ புரண்டு ஓடியது என்பார்கள் கிராமமக்கள். 

    விவசாயிகளின் அளவு கணக்கிடல் வேறு மாதிரி இருக்கும். புஞ்சை (புன்செய், நிலமோ, நஞ்சை (நன் செய்) நில மோமழையால் நனைந்ததையொட்டியே அவர்கள் மழையின் தன்மையைக் குறிப்பிடு வார்கள், வயல் அல்லது காடு நனையக் கூட இல்லை என்பார்கள். கொஞ்சம் பெரிதாகப் பெய்தால் ரெண்டு மூனு நாள் ஈரம்தாங்கும் மழை என்பார்கள்.

    இன்னும் கொஞ்சம் பெரிதாக வலு வாகப் பெய்தால், புஞ்சை என்றால் புழுதி எடுக்க லாம். அதாவது உழவு செய்யலாம் என்பார்கள். தஞ்சை என்றாலும் நல்ல மழை தான் புழுதி எடுத்துப் போடலாம் என்பார்கள்.அதன் பிறகு பெரிதாக மழை பெய்தால் உழவடிக்கலாம். தொழியடிக்க லாம் என்பார்கள். அதாவது வயலில் தண்ணீர் நின்றால்தான் பெருமழை என்பார்கள். சாரல் மழைக்கும் மண்ணில் ஈரம் காக்கும் (இருக்கும்) மழைக்கும் இடையிலான மழைக்கு தூறல் என்பார்கள். தரையோ நிலமோ நன்கு, நனைந்து தண்ணீர் புரண்டு ஓடினால்தான் பெரு மழை என்பார்கள். அதுவே விட்டுவிட்டோ, விடாமலோ தொடர்ந்து பெய்தால் அடைமழை என்பார்கள்.

    அந்த அடைமழையின் தன்மையை அடைமழை விட்டாலும் செடி மழை விடாது என்பார்கள். இந்த மனழயினால் வெளியில் செல்லமுடியாது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் இருக்கலாம். ஆடுமாடுகள் வெளியே போனால்தானே மேய்ச்சலுக்கு செல்ல முடியும். அதனால் அவை மிகவும் சிரமப்படும். இதைத்தான், ஆடு மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா. பெண்டு பின்ளை இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா என்பார்கள். தொடர்ந்து மழை பெய்வதும் சிரமம். தொடந்து நீண்டகாலம் மழை பெய்யாததும் சிரமம். விண்ணின் துளி வீழல் அல்லால் மண்ணில் பசும்புல் காண்ப தரிது என்றார் திருவள்ளுவர். அதனால்தான் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்றார் இளங்கோவடிகள். மழையை வரவேற் போம். மழைநீரைப் பாதுகாப்போம்.