articles

img

“அமித் ஷாவிற்கு விலைவாசி பற்றி பேச அருகதையில்லை!” கம்பத்தில் கே.பாலபாரதி விளாசல்

“அமித் ஷாவிற்கு விலைவாசி பற்றி பேச அருகதையில்லை!” கம்பத்தில் கே.பாலபாரதி விளாசல்

கார்ப்பரேட்டுகளுக்கு  ஆட்சி செய்யும் மோடி! “உணவுப் பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி செய்யும் பிரதமர் மோடி, அவரது அமைச்சரவையில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டதாக அமித் ஷா பேசுவதற்கு தகுதியில்லை; அருகதை இல்லை!”. அரிசி, பருப்பு, பயறு வகைகளை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மோடிக்கு நெருங்கிய நண்பர்கள்,  விலையை ஆன்லைன் மூலம் அவர்களே தீர்மானித்து வர்த்தக சூதாட்டம் நடத்துகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு டீசல்-பெட்ரோல் விலை உயர்வே காரணம். கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் நாட்டில் பெட்ரோல் விலையை உயர்த்துவது யார்? நாடு முழுவதும் சுங்கச் சாவடி அமைத்து கட்டணக் கொள்ளை அடிப்பது மத்திய அரசுதானே. இட்லி அரிசி, பொங்கல் அரிசி என விதவிதமான ஜிஎஸ்டி வரிகள் விதிப்பதும் ஒன்றிய அரசுதான்.” மணிப்பூரில் முதல்வரே ஓடிப்போனார்! “இந்த அமித் ஷாதான் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறேன் என்கிறார். இவர்கள் ஆட்சி செய்த மணிப்பூர் மாநிலம் எப்படி உள்ளது?” இரு பிரிவினர்களுக்கிடையே சண்டையை மூட்டி அந்த மாநில முதல்வரே ஆட்சி செய்ய முடியாமல் ஓடிவிட்டார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான போர், தான் சொல்லித்தான் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார். பிரதமர் மோடியோ வாய் திறக்கவில்லை. தமிழகத்தின் பிரச்சனைகள் படித்துவிட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகிறார்கள். 63 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி தேர்வு எழுதி 20 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். மருத்துவ திட்ட ஊழியர்களுக்கு 3 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. மாங்காய் விவசாயிகள் நிலை பரிதாபம். கிலோவிற்கு ரூ.2, ரூ.3 என வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் மாங்காயை பறிக்காமல் மரத்திலேயே பழுத்து தொங்குகிறது. பட்டா கேட்டும், வீட்டுமனை கேட்டும் காலம் காலமாக மக்கள் காத்திருக்கிறார்கள். கம்பம் அரசு மருத்துவமனையில் இருதய சிறப்பு மருத்துவர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு கலை, அறிவியல் கல்லூரி துவக்க வேண்டும். சொத்து வரி உயர்வைக் கைவிட வேண்டும்.