articles

img

ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் தோழர் எல்.ஜி.க்கு இன்று வயது 98....

எல்.ஜி. என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படும் தோழர் எல்.கோபாலகிருஷ்ணனுக்கு 15.12.2020 அன்று 98 தொடங்குகிறது. ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் முதல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடங்கி மாஸ்டர் வ.ராமுண்ணி மேனன், ஒய்.வி.சுப்பாராவ் முதலான மூத்த தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் எல்.ஜி.ஜில்லா போர்டு காலத்தில் ஆசிரியர் நலன்களுக்காகப் போராடிய போது வெகு தூரத்தில் உள்ள கொடைக்கானல் மலை கடைக்கோடி கிராமமான கவுஞ்சிக்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் மனந்தளராமல் சங்கப்பணிகளைத் தொடர்ந்தார். சட்டமன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்கள் ஏ.பாலசுப்பிரமணியன், என்.வரதராஜன், கே.பி. ஜானகியம்மாள், ஏ.நல்லசிவன், கோ.வீரையன் முதலானவர்களின் உதவியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அமைப்பதிலும், வளர்ப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.மதுரை மேற்கு வட்டாரச் செயலாளராக இருந்த போது மதுரையிலிருந்து சென்னை வரை சைக்கிள் பயணப் போராட்டத்தில் பங்கேற்றார். கான்பூரில் நடந்தசிஐடியு அகில இந்திய மாநாட்டில் ஒரு பார்வையாளராக கலந்துகொண்டார். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது மதுரை,கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார்.

சங்க ஜனநாயகத்திற்கான போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதயமானபோது அதில் முன்நின்றார். மாநில அலுவலகச் செயலாளராகவும் பணியாற்றினார்.தமிழகத்தில் ஜாக்டா, ஜாக்சாட்டோ, ஜாக்டீ, ஜாக்டீ - ஜியோ முதலான கூட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அகில இந்திய அளவில் சிசிஎஸ்டிஓ (CCSTO), இந்திய பள்ளி ஆசிரியர் சம்மேளனம் (STFI) ஆகிய வலிமையானஅமைப்புகளை உருவாக்குவதிலும் முன்நின்றார். பல தலைவர்களை உருவாக்கிய தலைவராக விளங்கினார்.தான் பணியாற்றிய மதுரை மேற்கு ஒன்றிய ஆசிரியர்களின் குடியிருப்பு ஒன்றிற்கு ‘ராமுண்ணிநகர்’ என்று பெயரிட்டு இயக்க நிறுவனருக்கு மரியாதை செய்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக வெளிவந்துகொண்டிருக்கும் புதிய ஆசிரியன் என்னும் இடதுசாரி, முற்போக்கு பல்சுவை மாத இதழ் மதுரையில் இயங்கியபோது அதன் தொடக்ககால ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் எல்.ஜி.பணியாற்றினார். செழுமையான அனுபவங்களைக்கொண்ட தோழர் எல்.ஜி, நல்ல உடல்நலம் மனநலத்துடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ‘நீடூழி வாழ வாழ்த்துவோம்’.

;