சென்னை,டிச.7- மிக்ஜம் புயல் வெள்ள சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலாளர் நா.முருகானந்தம், டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி, உள்துறை செயலாளர் பி.அமுதா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் தா.கார்த்திகேயன், பால்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீர்நிலைகளை பொறுத்தவரை கட்டுப்பாட்டில் உள்ளது. புழல் ஏரியில் இருந்து காலை முதல் 100 கன அடி மட்டும் வெளியேற்றப்படுகிறது. அடையாறு ஆற்றில், ஆதனூர், கீழ்கட்டளை, தாம்பரம் பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இதனால், அடையாறு ஆற்றில் நந்தம்பாக்கம் தடுப்பணை பகுதியில், 37 ஆயிரம் கனஅடி வருகிறது. இதில் 2500 கன அடி மட்டும் செம்பரம்பாக்கத்தில் இருந்து வருகிறது.
அடையாறு, கூவம் முகத்துவாரங்கள் சரியாக உள்ளன. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் ஒக்கியம் மடுவு வழியாக பக்கிங்காம் கால்வாயில் சேர்கிறது. இந்த பகுதிகளில் இயந்திரங்கள் மூலமும் நீர்போக்கு சரி செய்யப்படுகிறது.
பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக ஷிப்ட் அடிப்படையில் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், மின்துறை, தீயணைப்பு, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் என 75,000 பேர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண முகாம்களில் இருப்பவர்கள், வீடுகளில் இருப்பவர்கள் 37 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தண்ணீர் இருக்கும் 806 இடங்களில் இருந்து, 19,806 பேர் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் 4 நான்கு நடைகள் பெரும்பாக்கம், மடிப்பாக்கம் மற்றும் வடசென்னை பகுதிகளில் 25,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, 234 படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இழப்பு மற்றும் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இருப்பினும் உறுதியானவை அடிப்படையில், சென்னையில் 4 பேர் உட்பட 9 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 311 கால்நடைகள் இறந்துள்ளன. 378 குடிசைகள் முழுமையாகவும், 335 குடிசைகள், 88 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
மேலும், படிப்படியாக தற்போது மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக சென்னையில் புதனன்று 14 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டது. 8 மாவட்டங்களில் இருந்து 6650 கிலோ பால் பவுடர் விநியோகிக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 ஆயிரம் 20 லிட்டர் கேன் தயாரித்து, விநியோகிக்கப்படுகிறது.
சாலைகளில் தண்ணீர் வடிந்ததும், சுத்தப்படுத்தப்பட்டு, புதிய சாலைகள் போடப்படும். பெட்ரோல் பங்குகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். வெள்ளிக்கிழமை முழுமையாக சரியாகும்.போக்குவரத்து பெரும்பாலும் சீராகிவிட்டது. தென் சென்னை, வட சென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை. விரைவில் நிலைமை சீரடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.
வியாபாரிகள் தண்ணீர் கேன்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை பதுக்க வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
மாணவர்களின் சான்றிதழ்கள் தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் நிலைமை இயல்பாகும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.