மழலைச் செல்வமே பொன்னம்மா-நீ
மாற்றினாய் எங்களின் கவலையம்மா!
குழலாகும் யாழாகும் உன்மொழியே-அது
கொடுத்திடும் இன்பத் தேன்பிழியை!
பளிங்குக் கண்களால் கண்ணம்மா-நீ
பார்த்திடும் பார்வை காந்தமம்மா!
களிக்கும் உன்முகம் செல்லம்மா-அதைக்
காணும் இன்பமோ வெல்லமம்மா!
கூந்தலில் மேகம் தெரியுதம்மா -உன்
கூரிய அறிவு ஆயுதமம்மா!
சந்தன மல்லிகை வாசமம்மா-உன்
சரீரம் முல்லைக் கொடியம்மா!
மாந்தளிர் மேனியே செல்லம்மா-நீ
மாபெரும் அழகுச் சிலையம்மா!
தீந்தமிழ்ச் சொற்களை உதிர்க்கின்ற-உன்
தேன்குரல் காதில் இனிக்குதம்மா!
வாழ்வின் முழுமையை நீதந்தாய்-உன்
வரவினால் எங்களுக் குயிர்தந்தாய்!
வாழ்விலும் தாழ்விலும் நீயானாய்-எங்கள்
வாழ்க்கைக்கு ஆலம் விழுதானாய்!