articles

img

ஆலம் விழுதானாய்! - கோவி.பால.முருகு

மழலைச் செல்வமே பொன்னம்மா-நீ
    மாற்றினாய் எங்களின் கவலையம்மா!
குழலாகும் யாழாகும்  உன்மொழியே-அது
    கொடுத்திடும் இன்பத் தேன்பிழியை!

பளிங்குக் கண்களால் கண்ணம்மா-நீ
     பார்த்திடும் பார்வை காந்தமம்மா!
களிக்கும் உன்முகம்  செல்லம்மா-அதைக்
     காணும் இன்பமோ வெல்லமம்மா!
       
கூந்தலில்  மேகம் தெரியுதம்மா -உன்
       கூரிய  அறிவு ஆயுதமம்மா!
சந்தன மல்லிகை வாசமம்மா-உன்
      சரீரம்  முல்லைக் கொடியம்மா!

மாந்தளிர்  மேனியே செல்லம்மா-நீ
      மாபெரும் அழகுச் சிலையம்மா!
தீந்தமிழ்ச் சொற்களை உதிர்க்கின்ற-உன்
    தேன்குரல்  காதில் இனிக்குதம்மா!

வாழ்வின் முழுமையை நீதந்தாய்-உன்
     வரவினால்  எங்களுக் குயிர்தந்தாய்!
வாழ்விலும் தாழ்விலும் நீயானாய்-எங்கள்
     வாழ்க்கைக்கு ஆலம் விழுதானாய்!