articles

img

பாஜக அரசின் கொள்கைகள் குறித்து அதிமுக நிலை என்ன? - ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

கடலூர், அக். 7- கடந்த பல ஆண்டுகளாக பாஜக அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்த அதிமுக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர் அந்த கொள்கைகளை ஆதரிக்கிறதா?  எதிர்க்கிறதா என்பது குறித்து  விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். கடலூர் மாவட்டம் பாதிரிக் குப்பத்தில் நடைபெற்ற சிபிஎம் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; மோடி அரசை எதிர்க்கிற, விமர்சிக்கின்ற, அம்பலப்படுத்துகிற யாராக இருந்தாலும் பழிவாங்கப்படு கிறார்கள்.  நியூஸ் கிளிக் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா களத்தில் பிஎம்கேஸ் நிறுவனத்தின் நிதி முறைகேடு அம்பலப்படுத்தியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவை அப்புறப்படுத்த கட்சிகளை ஒருங்கி ணைத்து மகத்தான கூட்டணியை உருவாக்கி உள்ளோம். அண்ணாவை விமர்சித்ததாகவும் பெரியாரை விமர்சித்ததாகவும் கூறி கூட்டணி வேண்டாம் என்று பாஜகவில் இருந்து அதிமுக வெளியே வந்து விட்டது. ஆனால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களை கேட்டுக் கொள்கின்றேன் கூட்டணி முறிந்தது என்று அறிவித்தால் மட்டும் போதுமா, கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய அரசின் எல்லா கொள்கைகளையும் அதிமுக ஆதரித்ததே!  மத்திய அரசின் அனைத்து சட்டங்களையும், காஷ்மீர் பிரச்சினை, குடியுரிமை சட்டம், பாஜக வின் ஒரே நாடு ஒரே தேர்தல்,  விலை வாசி உயர்வு என ஒன்று விடாமல் இதுவரை பாஜக அரசின் கொள்கை களை அதிமுக ஆதரித்து வந்துள்ளது.  இந்த கொள்கைகள் குறித்து அதிமுக தலைமை பதில் சொல்ல வேண்டாமா? பாஜகவை வீழ்த்தாமல் இந்தியாவை பாதுகாக்க முடியாது. அந்த மகத்தான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னணி பாத்திரம் வகிக்கும் என்றார். பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத் தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். கிளைச் செயலாளர்கள், தயாளன் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார், எஸ்.கே.பக்கீரான் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.