திருப்பூர், பிப். 15 - பெரும் கார்ப்பரேட் ஆதரவு தாராள மயப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்களும், தொழில் முனைவோரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போராட்டத்திற்கு திருப்பூர் வழிகாட்டுகிறது என்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். திருப்பூரில் செவ்வாயன்று நடை பெற்ற திருப்பூர் மாவட்ட தொழில் பாது காப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டில் சு.வெங்கடேசன் பேசிய தாவது:
பெருமை மிக்க திருப்பூர்
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வரலாற்றில் 1950 களில் தொடங்கி, தொழிற்சார்ந்த வளர்ச்சியை அரசு முன்னெடுத்துச் சென்றது பற்றிப் பார்த்தால், எந்தெந்த ஊரில், என்னென்ன தொழில்களை உருவாக்க லாம் என்று திட்டமிட்டதில் சேலம், திருச்சி, கோவை என வளர்ந்ததைக் காண முடியும். ஆனால் 50, 60, 70களில் அரசின் இத்தகைய திட்டமிட்ட ஏற்பாடுகள் எதிலுமே இடம் பெறாத, தானாக வளர்ந்து உருவான இடமாக திருப்பூர் உள்ளது. இங்குள்ள மக்கள், தொழி லாளர்கள், புதிய முயற்சிகள், கற்பனை வளத்தோடு தன்னைத் தானே உரு வாக்கிக் கொண்ட இடமாக திருப்பூர் உள்ளது. இதன் முழு பெருமையும் திருப்பூர் மக்களுக்கு மட்டுமே சேரும். திருப்பூர் மாவட்ட தொழிலை பாதுகாப்போம்; தொழிலாளர் வாழ்வுரிமையை பாதுகாப்போம் என்று தொழில் அமைப்புகளும் தொழிற்சங்க மும் இணைந்து இத்தகைய மாநாட்டை நடத்துகிறோம். இந்த திருப்பூர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது.
140 கோடியின் குரல்
தொழில்துறையினர் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசை வலியுறுத்துவது, மாநில அரசை கவனப்படுத்துவது என நாங்கள் என்ன பங்களிப்பு செய்ய வேண்டுமோ, அதை கட்டா யம் செய்வோம். நாங்கள் நாடாளு மன்றத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூன்று எம்பிக்கள் மட்டுமே இருக்க லாம். ஆனால் 140 கோடி இந்திய மக்களின் குரலாக எங்கள் குரல் அங்கே ஒலிக்கும். குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் முன் பகுதி முடிந்துள்ளது. குடியரசுத் தலைவர் உரையில் 87 பத்திகள் இடம்பெற்று இருந்தன. அதில் ஒரு இடத்தில் கூட ‘தொழிலாளர்’ என்ற சொல் கிடையாது. இந்தக் கூட்டத் தொடரில் மிகப்பெரும் போராட்டம், விவாதம் நடந்தது. பிரதமர் இரு அவைகளிலும் இரண்டரை மணி நேரம் பதில் அளித்து பேசினார். இந்தியா யாருக்கானது என்பது அந்தப் பதிலில் அடங்கியிருக்கிறது. இங்கே திருப்பூரில் நேரடியாக வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 5000 நிறுவனங்களும் அதைச் சார்ந்து 3000 நிறுவனங்களும் என எட்டாயிரம் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் நடுத்தர, சிறு, குறு தொழில் பிரிவில் ஆறரை லட்சம் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களைச் சார்ந்து பல கோடி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆனால் இந்த இந்தியா, இவர்களுக்கான இந்தியா இல்லை; வெறும் 100 பேருக்கான இந்தியா என்பதுதான் மோடி அரசின் நிலை யாக உள்ளது. அதைத்தான் அதானி பிரச்சனை உணர்த்துகிறது.
அதானிக்கு 1600 மடங்கு
17 சதவீதம் நடுத்தர, சிறு, குறு நிறுவனங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல், அவற்றின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள் ளன. அந்த நிறுவனங்களின் வட்டி களையாவது தள்ளுபடி செய்யுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து கேட்டாலும் அதைச் செய்ய மறுக்கிறார்கள். கொ ரோனா பொது முடக்க காலத்தில் இரண்டு ஆண்டுகள் கடனைச் செலுத்த முடியாமல் வருமானம் பெற முடியாமல் சிறு நிறுவனங்கள் தத்த ளித்தன. ஆனால் இதே காலத்தில், நாக்பூர் தலைமை இடத்தை மட்டுமே சுற்றி வந்த அதானிக்கு நாள் ஒன்றுக்கு 1612 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இரண்டு ஆண்டு காலத்தில் அவ ருடைய வருமானம் 1600 மடங்கு உயர்ந்திருக்கிறது! நாடாளுமன்றத்தில் பிரதமரின் இரண்டரை மணி நேர உரையில் ஒரே ஒரு இடத்தில் கூட அதானி என்ற சொல்லே உச்சரிக்கப்பட வில்லை. எதை ஒழிக்க வேண்டுமோ அதை குடியரசுத் தலைவர் உரையில் கவனமாக ஒழித்து, எதைக் காப்பாற்ற வேண்டுமோ அதை சொல்லாமல் கவனமாக தவிர்த்து இந்த மோடி அரசு செயல்படுகிறது.
வரி பயங்கரவாதம்
ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு தெரி வித்திருந்தனர். அவர்களிடம் என்னென்ன கோரிக்கையில் வைக்க லாம் என மதுரையில் தொழில் துறை யினரிடம் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அங்கு வராமல், சத்தமே இல்லாமல் தில்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி வரி பிரச்சனையை பற்றி பேசினால் அது ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு என்று நிதி யமைச்சர் சொல்கிறார். ஆனால் அதில் யார் பெரும்பான்மையாக இருக் கிறார்கள்? அவர்கள் தான் பெரும் பான்மையாக உள்ளனர். வரி பயங்கர வாதம் என இங்கே ஒரு தொழில்துறை நிர்வாகி கூறியதைப் போல், ஜிஎஸ்டி வரிப் பிரச்சனையில், சிறு, குறு தொழில் பிரிவினருக்கு 100 முடிச்சுகள் போடப் பட்டுள்ளன. ஆனால் நூறு பெரு முத லாளிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இன்றி அவிழ்த்து விடப்பட்டு ராஜபாதை அமைக்கப்படுகிறது. இது நடைமுறை சார்ந்த பிரச்சனை அல்ல, கொள்கை பிரச்சனை.
வெறும் 80 பைசா
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஒரு நாள் காய்கறிக்கு 80 பைசா தான் கொடுக்கப்படுகிறது. அதை ஒரு ரூபாயாகவாவது ஆக்கிக் கொடுங்கள் எனக் கூக்குரல் எழுப்புகிறோம். அரசு இதைச் செய்ய மறுக்கிறது. பெரு முதலாளிகளுக்கு வரா கடன் எவ்வளவு தள்ளுபடி செய்யப்படுகிறது, ஆனால் குழந்தைகளுக்கு ஒரு ரூபாய் தர முடிய வில்லை இந்த அரசால்! நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால், உங்கள் கழுத்தை எப்படி நெரிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று ஒரு அமைச்சர் பேசுகிறார். இது தமிழ்நாட்டு 7 கோடி மக்களின் குரல் வளையை நெரிப்பதாகும். ஆனால் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற துணிவு இருக்கிறது. மக்களவை யில், மாநிலங்களவையில், சட்டமன்றத் தில் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும். இது சமூகத்திற்கான குரல். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார். (ந.நி.)
ஜாப் ஒர்க்- ஜிஎஸ்டி ரத்து செய்க!
ஜாப் ஒர்க்- ஜிஎஸ்டி ரத்து செய்க! தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் நிதியமைச்சரின் காதுகளுக்கு பிரச்சனைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் ஒன்றிய அரசுக்கு இங்கு இருப்போரின் குரல் கேட்காது. ஜாப் ஒர்க் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும் என்று 2019 ஆம் ஆண்டு முதலே குரல் கொடுத்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இந்த அரசு கேட்பதில்லை. தென்னை விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனைகள் உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலை கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற அடிப்படையான பல பிரச்சனைகளை மக்கள் கவனிக்கக் கூடாது என்பதற்காகத் தான் பசுவை கட்டிப் பிடிக்க வேண்டும் என்று திசை திருப்புகிறார்கள். மக்கள் பிரச்சனைகளில் குரல் கொடுக்க வேண்டும், அதற்காக போராட வேண்டும் என்று தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாக மக்கள் எங்களை அனுப்பினீர்கள். அதற்கேற்ப தொழில்துறையினரின் பிரச்சனைகளை அரசிடம் கொண்டு செல்வோம், போராடுவோம்! கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆற்றிய உரையிலிருந்து...
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆற்றிய உரையிலிருந்து...
இது தொழில்முனைவோர் பிரச்சனை மட்டுமல்ல..!
பாஜக அரசின் கொள்கைகள் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு முதல் நெருக்கடி மிகவும் கடுமையாக உள்ளது. ஆனால் மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. திருப்பூர் நடுத்தர, சிறு, குறு தொழிற்சாலைகள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இங்கு மட்டும் இல்லை, சிவகாசி பட்டாசு, தூத்துக்குடி தீப்பெட்டி தொழிற்சாலை, குமரி மாவட்டம் முந்திரி தொழில் என எல்லா சிறு, குறு தொழில்களும் இதே போன்ற நிலையில்தான் உள்ளன. இந்தத் தொழிலை முடக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கான ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும். இந்திய தொழில் வளர்ச்சிக்கு அடிநாதமாக இருப்பவை பொதுத்துறை நிறுவனங்கள். ஆனால் அவற்றை ஒட்டுமொத்தமாக முடக்கி, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஒன்றிய மோடி அரசு இறங்கி இருக்கிறது. இதற்கு எதிராக தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மட்டும் போராடினால் போதாது. அனைத்து பகுதி மக்களும் இணைந்து போராடினால் தான் அரசு பின்வாங்கும்.
சேலம் இரும்பாலை பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களையும் திரட்டி போராடினர். இதனால் சேலம் பொதுத்துறை நிறுவனத்தின் ஒரு சதவிகித பங்குகளை கூட அரசால் விற்க முடியவில்லை. அதுபோல திருப்பூர் பின்னலாடை ஜவுளி தொழிலை பாதுகாப்பதற்கு திருப்பூர் மாவட்ட மக்கள் அனைவரையும் திரட்டும் வேலையை நாம் செய்ய வேண்டும். கொள்கை மாற்றம் ஏற்படாமல் நமக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. இதற்கு மக்களை திரட்டுவதை தவிர வேறு வழி இல்லை. சிறு, குறு தொழில் துறையை பாதுகாப்பது என்பது தொழில் முனைவோர் பிரச்சனை மட்டுமல்ல; வேலைவாய்ப்பு, சமூக பொருளாதாரப் பிரச்சனை. ஆகவே மக்களை திரட்டுவோம், ஒன்றுபட்டு போராடுவோம்.
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆற்றிய உரையிலிருந்து...