articles

img

உலகமே தொழிலாளரால் இயங்குகிறது - ம.சிங்காரவேலர் - ம.சிங்காரவேலர்

தோழர்களே! உங்களைப் போலவே நானும் ஒரு தொழிலாளியாவேன். நான் வயல்களில் வேலை செய்கிறேன். நிலத்தை உழுகிறேன். செடிகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுகிறேன். என் மூதாதைகள் செம்படவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நான் உங்களுக்குப் புதியவனல்ல... சில வருட காலமாக நான் தொழிலாளிகளின் விஷயங்களைப் பற்றி படித்துவருகிறேன். நீங்கள் உங்களை முன்னேற்றிக்கொள்வதற்காகச் செய்யும் போராட்டங்களையும் நான் கவனித்துவருகிறேன். அவ்விடங்களிலுள்ள தொழிலாளர்களும் உங்களைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளிலுள்ள தொழிலாளர்களும் உங்களைப்போலவே கஷ்டங்கள் அனுபவித்து வருகின்றனர். அது பற்றி நீங்கள் உலகத்திலுள்ள தொழிலாளர்களுடன் நேசபாவம் பாராட்டுவது அவசியமென்று எனக்குத் தோன்றுகிறது... உலகத்திலுள்ள தொழிலாளர்களும் உங்களுக்கிருக்கின்ற நோக்கங்களையே கொள்கிறார்கள். உங்களுக்கு இருக்கப்பட்ட துக்கங்கள் அவர்களுக்கும் இருக்கின்றன. நீங்கள் கொண்டுள்ள எண்ணங்களைத்தான் அவர்களும் கொண்டுள்ளார்கள். உலகத்திலுள்ள தொழிலாளர்களும் நம்மைச் சேர்ந்தவர்கள் தான் என்று கருதவேண்டும். அதுதான் உங்கள் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

உலகத்துக்குத் தொழிலாளர் எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் உணரவில்லையெனத் தெரிகிறது. தொழிலாளர் எவ்வளவு முக்கியம் என்பதை நம் நாட்டில் பரவிக்கிடக்கும் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு உணரவில்லை போலிருக்கிறது. நிலத்திலிருந்து கிடைக்கும் நெல்லும் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோக வகைகளும் தொழிலாளரைப் பொறுத்ததே. ரயில்வேக்களும் நீராவிக் கப்பல்களும் தொழிலாளர் முயற்சியாலேயே ஓடுகின்றன. உலகத்தில் உற்பத்தியாகும் எல்லாப் பொருட்களும் தொழிலாளர்களையே பொறுத்திருக்கின்றன. உலகத்தாருக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் தொழிலாளர்களே செய்கிறார்கள். சுருங்கக் கூறுமிடத்து உலகமே தொழிலாளர்களால் நடைபெறுகிறதென்று கூறலாம்.  நீங்கள் எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்றுமே சொந்தமில்லை. உலகத்தில் செல்வம் பெருகிக்கிடக்கின்றது. ஆனாலும் உங்களுக்குப் போதுமான உணவும், உடையும், இருப்பிடமும் கிடையா. ஏராளமான விளைபொருட்கள் இருந்தும் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள், ஏன்? தொழிலாளர்கள் பொருளை அபரிமிதமாய் உற்பத்தி செய்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்குப் போதுமான அளவு பொருட்கள் கிடைப்பதில்லை. பொருட்களை உற்பத்தியாக்குவோனுக்கும், அதை வாங்கி அனுபவிப்பவனுக்கும் இடையில் மூன்றாவது மனிதன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரனாகப் பாவிக்கப்படுகிறான். இவன் நிலத்தில் விளையும் பொருட்களையும் சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் உலோக வகைகளையும், ரயில்வேக்களையும், கப்பல்களையும், தொழிற்சாலைகளையும் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டு தன்னிஷ்டம்போல் விலை ஏற்படுத்துகிறான். இதனால்தான் பஞ்சம், நோய், கஷ்டங்கள், அமைதியின்மை, வேலை நிறுத்தங்கள், ராஜியப் புரட்சிகள் ஆகிய இவைகள், உலகம் முழுமையிலும் ஏற்படுகின்றன.... இவன்தான் முதலாளி...!

1921 மே மாதத்தில் சென்னை சூளை மில் தொழிலாளர் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் ம.சிங்காரவேலர் ஆற்றிய உரையிலிருந்து....