articles

img

நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளி... - அறிவுக்கடல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று ‘அழைக்கப்படுகிற’ இந்தியாவில் நாடாளுமன்றம் என்பதுதான் உச்சபட்ச சட்டமியற்றும் அவை. பெரும்பான்மை கொண்டிருக்கிற ஆளும் கட்சி (அல்லது அணி) விரும்பிய முடிவுகளை எடுக்க முடியும் என்றாலும் கூட, எதிர்க்கட்சிகளின் குரலுக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிற விதிகளுடன் உருவாக்கப்பட்டது இந்திய நாடாளுமன்ற அமைப்பு. அசுர பலம் என்று அழைக்கப்படுகிற பலத்துடன் அமைந்த ஆட்சி கள்கூட, நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கிய நிகழ்வுகள் சுதந்திர இந்தியாவில் முதல் 40-45 ஆண்டுகள்வரை அரிதாகவே இருந்திருக் கின்றன. ஆனால், பாபர் மசூதி பிரச்சனையின் காலம்தொட்டு, அவையின் நடவடிக்கைகளை முடக்கு வது என்ற நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிற கட்சி பாரதிய ஜனதா. எதிர்க்கட்சியாகத்தான் அவை நடவடிக்கைகளை முடக்கியது என்பதால், ஆளும் கட்சியாக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனால், ஆட்சியில் இருந்தா லும், இல்லாவிட்டாலும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை ஏதோ ஒரு வழியில் முடக்குவது என்பதை அக்கட்சி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.  அக்கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிற 16ஆம், 17ஆம் நாடாளுமன்றங்க ளின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிபரங்கள் அதைத்தான் அய்யம் திரிபு அற நிரூபித்துக்கொண்டி ருக்கின்றன. அந்த வரிசையில் கடைசியாக நடந்த நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய சில தகவல்கள், நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கி வைத்துக்கொண்டு, தங்கள் விருப்பத்திற்கு ஆட்சியை நடத்துவதில் பாஜக எவ்வளவு தொலைவு சென்றுள்ளது என்பதை விளக்குகின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் திட்டமிடப்பட்ட நேரத்தில் மக்களவை 33 சதவீதமும், மாநிலங்களவை 24 சதவீதமும் மட்டும்தான் செயல்பட்டிருக்கின்றன. அதிலும் இரண்டாவது அமர்வின் 15 நாட்களில் மக்களவை 5 சதவீதமும், மாநிலங்களவை 6 சதவீதமும் மட்டுமே செயல்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தொடர் முழுவதிலும் நிதி மசோ தாக்களை தவிர நிறைவேற்றப்பட்டது ஒரே ஒரு மசோதா மட்டுமே. அறிமுகப்படுத்தப்பட்டவை 3 மசோ தாக்கள். இதில் எதற்கும் விவாதம் இல்லை என்பது, சடங்குப் பூர்வமாக நாடாளுமன்றத்தைக் கூட்டினா லும், எதிர்ப்புக் குரல்களை மறைமுகமாக ஒடுக்கிற செயல்தான்.

மோடியின் 9 ஆண்டுகள் ஆட்சியில், கடந்த 7 ஆண்டு களில் பட்ஜெட் தொடர்பான 79 சதவீத மசோதாக்கள் விவாதமின்றியே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத் தொடரிலும் அனைத்து அமைச்சகங்க ளின் 42 லட்சம் கோடி ரூபாய் செலவுகளை முடிவு செய்கிற மசோதாக்கள் விவாதமின்றித்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் ஏழு அமைச்சகங்களின் செயல் பாடு குறித்து இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதுவுமே விவாதிக் கப்படவில்லை. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப் பட்ட ஒரே விஷயம் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கிற தீர்மானம் மட்டும்தான்.

வழிமுறைகளில் ஒத்திவைப்புத் தீர்மானம் என்பது திட்டமிடப்பட்ட பணியை ஒத்திவைத்து  அவசர மான பிரச்சனையை விவாதிப்பதற்கான வழி ஆகும். குறுகிய கால விவாதம் என்பது பொது முக்கியத்து வம் வாய்ந்த ஒரு விஷயத்தை விவாதிப்பதற்காக இருக்கிற நடைமுறையாகும். அரை மணி நேர விவா தம் என்பது மக்களவையில் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்து கூடுதல் விபரம் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையாகும். இந்தக் கூட்டத்தொடரில் இவை எதுவுமே அனு மதிக்கப்படவில்லை. இந்த மக்களவை மொத்தத்தி லும், அதாவது 4 ஆண்டுகளிலும், 11 குறுகிய கால விவா தங்களும், ஒரே ஒரு அரை மணி நேர விவாதமும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்பது, நாடாளுமன்றம் என்பது முடிவெடுக்கிற இடமாக இல்லாமல், வேறெங்கோ (நாக்பூரில்?) எடுக்கப்பட்ட முடிவுகளைச் சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்கிற இடமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையே விளக்குகிறது.

இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு இணை யாக, மாநிலங்களவையில் திட்டமிடப்பட்ட நடவ டிக்கைகளுக்கு இடையில் முக்கிய பிரச்சனைகளை விதி எண் 267இன்படி அவைத்தலைவர் அனுமதி யுடன் விவாதிக்கலாம். இந்தக் கூட்டத்தொடரில் மட்டும் அவ்வாறான 150க்கும் அதிகமான கோரிக்கை கள் எழுப்பப்பட்டாலும் ஒன்றுகூட அனுமதிக்கப்பட வில்லை.

கேள்வி நேரத்திற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்களவை 19 சதவீதமும், மாநிலங்களவை வெறும் 9 சதவீதமும்தான் பயன்படுத்தியிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளில், வாய்மொழியாக பதிலளிக்கப்படக்கூடியவை நட்சத்தி ரக் குறியிடப்பட்ட கேள்விகள். நட்சத்திரக் குறியிடப் படாத கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதில் மட்டும்தான் அளிக்கப்படும். ஆனால், நட்சத்திரக் குறி யிடப்பட்ட கேள்விகளுக்கு வாய்மொழி பதில் அளிக்கப்படுவதுடன், அதில் மேற்கொண்டு விளக் கங்களைக் கேட்கவும் அனுமதி உண்டு. அவற்றுக்கும் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். அப்படி யான கேள்விகளில் 7 சதவீதத்திற்கு மட்டுமே இந்தக் கூட்டத் தொடரில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பது, உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க அரசு அஞ்சுகிற நிலையிலிருக்கிறது என்பதையே வெளிப் படுத்துகிறது.

இவை தவிர, மாற்றுக் கட்சிகளுக்கு பதவிகள் அளிக்கப்படுகிற மரபுகளையும் முடிந்தவரை பின்பற்ற மறுக்கிறது இந்த ஆட்சி. மக்களவையின் துணைத்தலைவராக ஆளுங்கட்சியைச் சாராத (பொதுவாக எதிர்க்கட்சியைச் சார்ந்த) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த மக்கள வையின் 5 ஆண்டுகால ஆயுளில் நான்காண்டுகள் நிறைவுற இருக்கிற நிலையிலும் இன்றுவரை துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது குறித்த பொதுநல வழக்கை இவ்வாண்டு பிப்ரவரி யில்  ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்திய அரசி டம் விளக்கம் கேட்டு இரண்டு வார அவகாசம் அளித்தது. ஆனால் இன்றுவரை அது நிலுவையி லேயே உள்ளது. இதற்கு முன்பு மக்களவை துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பது நீண்ட காலம் தவிர்க்கப்பட்டது 12ஆவது மக்களவையில். அதுவும் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியில்தான். மார்ச் 10, 1998இலிருந்து ஏப்ரல் 26, 1999 வரை, ஏறத்தாழ பதின்மூன்றரை மாதங்கள் செயல்பட்ட அந்த மக்களவையின் துணைத்தலைவராக, காங்கிர சின் பி.எம்.சயீத், ஒன்பது மாதங்கள் கடந்தபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முழுமையாக 5 ஆண்டுகளும் செயல்பட்ட மக்கள வைகளில் இந்திய வரலாற்றிலேயே மிகக்குறைந்த நாட்கள் கூடியது மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தின் மக்களவையான 16ஆவது மக்க ளவை. 5 ஆண்டுகளில் அது கூடியது வெறும் 331 நாட் கள்தான். ஆனால், நடப்பு 17ஆவது மக்களவை 4 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்ய விருக்கிற நிலையில், இதுவரை 230 நாட்கள் மட்டுமே கூடியுள்ளது. இது சராசரியாக ஆண்டுக்கு 58 நாட்கள் என்பதால், எஞ்சியிருக்கிற ஓராண்டிலும் அதே அளவு  கூடினாலும் 290 நாட்களைக்கூட கடப்பது சிரமம். அதனால், இந்திய வரலாற்றிலேயே குறைந்த நாட்கள் கூடிய மக்களவை என்ற அவப்பெயரை இந்த மக்களவை பெறவிருக்கிறது. அதாவது, நாடாளு மன்றம் கூடினால்தானே, அங்கு எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிப்பது என்பதெல்லாம்? மோடி செய்தியாளர்களைச் சந்திப்பதையே தவிர்ப்பதைப் போன்ற நடவடிக்கையே, நாடாளுமன்றம் கூடுகிற நாட்களையே குறைத்து, உறுப்பினர்களின் - அதாவது மக்களின் ஜனநாயக உரிமையை மறை முகமாகப் பறிப்பது!

எதிர்க்கட்சியாக இருந்த போது, மக்களின் நலனுக்குத் தொடர்பில்லாத பாபர் மசூதி போன்ற செய்திகளை விவாதிக்க வேண்டும் என்று கேட்டு, அவையை முடக்கிய பாஜக, ஆட்சிக்கு வந்தபின், மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை ஏற்க மறுத்து, அதற்காகக் குரல் எழுப்புபவர்களை ‘அவையை முடக்குகிறார்கள்’ என்று கூறிக்கொள்கிறது. ஆனால், இரண்டு வழியி லுமே மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்து வதைத் தவிர்ப்பதையும், அவையை முடக்குவதன் மூலம் தங்கள் அல்லது சில தனியார் முதலாளி களின் நலனுக்கான நடவடிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதையும் நரித்தந்திரத்துடன் செய்கிறது பாஜக என்றால் மிகையல்ல. மீண்டும் ஒருமுறை பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய ஜனநாயகத்தின் அதிகபட்ச நம்பிக்கையான நாடாளுமன்றம் என்பது இல்லாமலே ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியது அவசியம்.