2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சிகளால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் துவக்க நிகழ்வு மதுரை மாநகர் வில்லாபுரம் லீலாவதி அரங்கில் நடைபெற்றது. அப்போதைய சிபிஐ(எம்) மாநில செயலாளர் என்.வரதராஜன் இந்த நிகழ்வில் பங்கேற்று அதன் நோக்கத்தை எடுத்துரைத்தார். இந்த அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பாக 15 ஆண்டுகளாக சிபிஐ(எம்) சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தொடர்ச்சியான இயக்கங்களிலும், தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் தீவிர அக்கறை செலுத்தி வந்தது. நாலுமூலைக்கிணறு, கொடியன்குளம், சங்கரலிங்கபுரம், மாஞ்சோலை போராட்டம், 95-97 தென்மாவட்ட கலவரங்கள், கடலூர் - விழுப்புரம் உள்ளடங்கிய வட மாவட்ட கலவரங்கள் போன்றவை இக்காலத்தில் சிபிஐ(எம்) செய்த முக்கிய தலையீடுகள் ஆகும். அதற்கும் முன்னதாக தலித் உழைப்பாளி மக்களின் வர்க்க மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டங்களில் - குறிப்பாக, கீழத்தஞ்சையில் நடைபெற்ற போராட்டங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாத்திரம் ஒரு வீர வரலாறாகும்.
இந்த அமைப்பின் கன்வீனராக பி.சம்பத் செயல்பட்டார். இதன் உருவாக்கமும், செயல்பாடுகளும் தமிழகத்தில் நடைபெற்று வரும் சமூக நீதிக்கான போராட்டத்தில் முக்கிய நிகழ்வுகளாகும். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விரிவான தலையீடுகளுக்கு முன்னதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008 ஆம் ஆண்டு ஒரு பரவலான கள ஆய்வை நடத்தியது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த கள ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த கள ஆய்வின்போது தமிழகத்தின் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் ஏராளமான தீண்டாமை மற்றும் வன்கொடுமை வடிவங்கள் வெளிப்பட்டன. 78 வகையான தீண்டாமைக் கொடுமைகளும், 28 வகையான வன்கொடுமை வடிவங்களும் இந்த ஆய்வின் மூலம் அக்காலத்தில் அம்பலப்படுத்தப்பட்டதானது தமிழக ஜனநாயக சக்திகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறு அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட தீண்டாமை வடிவங்களில் உத்தபுரம் சுவரும் ஒன்று. இந்த கள ஆய்வுகள் நடத்துவதில் இன்சூரன்ஸ் அரங்க தோழர்கள் மிக முக்கிய பங்கு வகித்தார்கள். அக்காலத்தில் கள ஆய்வுக்காக உத்தபுரம் சென்றவர்களும் அவர்களே. உத்தபுரம் தலித் குடியிருப்புகளுக்கு சென்று அம்மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொண்ட தீண்டாமைக் கொடுமைகள் குறித்த விபரங்களை சேகரித்தார்கள். இவர்கள் அம்மக்களிடம் ஆய்வின் ஒரு பகுதியாக எழுப்பிய கேள்விகளும், அதற்கு அம்மக்கள் அளித்த பதில்களும் அப்போது பல தீண்டாமைக் கொடுமைகள் நிலவுவதை வெளிக்கொணர்ந்தன. அவை முத்தாரம்மன் கோவிலுக்குள் நுழைய முடியாமை, பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க முடியாமை, தலித் மக்கள் தெருவிற்குள் ஓடிய சாக்கடைக்கு மூடி போட முடியாமை என ஏராளம்.
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆய்வை நடத்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் சென்ற இடமெல்லாம் ஒரு தடுப்புச் சுவர் கூடவே தொடர்ந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த அவர்கள் தலித் மக்களிடம் “நாம் செல்லும் இடமெல்லாம் இந்தச் சுவர் கூடவே வருகிறதே, இது என்ன சுவர்” என கேள்வி எழுப்பியபோது, அவர்கள் அளித்த பதில் வியப்பை அளித்தது. “அதுவா! இந்த நீண்ட சுவர் 1989இல் கட்டப்பட்டது. நாங்கள் உயர்சாதி மக்கள் வாழும் தெருக்களில் நுழைவதை தடுக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது” என விவரித்தனர். இவ்வளவு நேரமும் இந்த சுவரைப் பற்றி ஏன் சொல்லவில்லை எனக் கேட்டதற்கு, “நீங்க கேட்கவில்லையே” என பதில் அளித்தனர். இந்த பதில் ஆய்வு செய்த ஊழியர்களை மேலும் வியப்புக்குள்ளாக்கியது.
ஆண்டுக் கணக்கில் அனுபவித்து பழகிப் போன ஒரு கொடுமை அவர்கள் நெஞ்சில் ஒரு வடுவாக மாறிப்போனதால்தான் தாங்களாகவே இதை சொல்ல வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. இதன் பிறகு இந்த சுவர் பற்றிய முழு விபரங்களை கேட்டு குறித்துக் கொண்டார்கள். 1989இல் நடைபெற்ற ஒரு சாதிய மோதலை தொடர்ந்து தலித் மக்கள் உயர்சாதி தெருக்களில் நுழைவதை தடுக்கும் நோக்கத்துடன் இச்சுவர் கட்டப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்த ஊழியர்கள் புரிந்து கொண்டார்கள். 2008இல் நடந்த மொத்த ஆய்வு விபரங்களில் இந்தச் சுவர் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வடிவமாக இருந்தது. இந்த ஊரில் நடந்த ஆய்வில் மட்டுமல்ல, 5000 கிராமங்களில் நடந்த ஆய்வில் பெரும் வியப்பை ஏற்படுத்தியதாக அச்சுவர் இருந்தது. இதற்கு முன்பு சுவர் வடிவலான தீண்டாமை அநேகமாக கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. 600 மீட்டர் நீளமும், 30 அடி உயரமும் கொண்ட கம்பீரமான சுவராக அச்சுவர் காட்சியளித்தது. எனவே, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த சுவருக்கு தீண்டாமைச் சுவர் என பெயரிட்டு குறிப்பிட்டது. தலித் மக்களை பொதுப் பாதையில் நுழைய விடாமல் தடுக்கும் இச்சுவரை அப்புறப்படுத்துமாறு தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு விபரங்கள் பத்திரிகைகளுக்கு அறிக்கையாக வெளியிடப்பட்டபோது, இத்தீண்டாமைச் சுவர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் இடம் பெற்றிருந்தது. தீண்டாமையின் சுவர் வடிவத்தால் வியப்படைந்த பல பத்திரிகைகள் இச்சுவரை சாதிச் சுவர் (Caste Wall) என்றும், மக்களை பிரிக்கும்
சுவர் (Divided wall) என்றும் பெயரிட்டு பிரபலமாக பிரசுரித்தன. இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு பரவலான ஜனநாயக, மனிதநேய சக்திகளின் ஆதரவு கிடைத்தது. உத்தபுரம் தலித் மக்கள் இக்கோரிக்கைகளின் பின்னால் ஓரணியாக ஒன்று திரண்டனர். இக்கோரிக்கையை முன்வைத்து அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அதன் சட்டப்பூர்வ நியாயத்தையும் விளக்கிச் சொன்னோம். அவர் “பார்க்கலாம்” என்று பதிலளித்தார். அதன் பிறகு சில முறை சந்தித்தபோதும், பார்க்கலாம் என்ற பதிலையே அவர் திரும்பத் திரும்பக் கூறினார். இந்தச் சுவர் சட்டத்திற்கு புறம்பானது என்றும், பொதுவெளியில் கட்டப்பட்டுள்ளது என்றும், இச்சுவர் நீடித்திருப்பதை அனுமதிக்கவே முடியாது என்றும் மாவட்ட ஆட்சித் தலை வரிடம் உறுதிபடத் தெரிவித்தோம். மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட நிர்வாகமும் அச்சுவரை அப்புறப்படுத்த உறுதியான நிலை எடுக்காமல் தொடரவே போராட்டங்களுக்கு திட்டமிடுவது என முடிவு செய்தோம்.
போராட்டத்திற்கு செல்வதற்கு முன்னால் பிற சாதி மக்களின் பிரதிநிதிகளை நேரடி யாக சந்தித்து நியாயத்தை எடுத்துச் சொல்ல லாம் என முடிவுக்கு வந்தோம். அவர்களும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் கள் தான். நாட்டின் இன்றைய பொதுவான அரசியல், பொருளாதாரச் சூழலில் இரு தரப்பினருக்கும் பொதுவான கோரிக்கைகள் ஏராளம் உண்டு. இரு தரப்பினரும் மோது வதற்கான காரணங்களை விட ஒன்றுபடுவதற் கான காரணங்களே அதிகம் இருந்தன. உள்ளூர் மட்டத்திலும் கூட இரு தரப்பினருக் கும் பொதுவான பல பிரச்சனைகளும், கோரிக்கைகளும் உண்டு. இப்பின்னணியில் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்ற தகவலை தெரி வித்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர். பேச்சுவார்த்தைக்காக அவர்க ளில் முக்கியமான சிலரை தேர்வும் செய்தார் கள். பேச்சுவார்த்தைக்கு பி.சம்பத், ஏ.லாசர், சு.வெங்கடேசன், க.சுவாமிநாதன், தங்கராஜ், பொன்னுத்தாய் உள்ளிட்ட தோழர்களும், வேறு சில நண்பர்களும் சென்றோம். பேச்சு வார்த்தை இணக்கமானதாகவே இருந்தது. நாம் சொல்வதை அவர்கள் பொறுமையாக கேட்டார்கள். அவர்கள் கருத்துக்களையும் முழுமையாக நாம் கேட்டறிந்தோம். அவர்கள் இந்தச் சுவரை பாதுகாப்புச் சுவர் எனக் கூறி நியாயப்படுத்தினார்கள். சுவரின் இப்பக்கம் முழுமையாக தலித் மக்கள் மட்டுமே இருக்கும்போது - சுவர் கட்டப்பட்டுள்ள இடம் இரு பிரிவினருக்கும் பொதுவான இடமாக இருக்கும்போது அந்த மக்களை அப்பொதுவான இடத்தில் அனுமதிக்காதபடி தடுக்கும் சுவர் எவ்வாறு பாதுகாப்பு சுவராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினோம். எனவே, சுவரை அப்புறப்படுத்துமாறும் இரு தரப்பும் சுமூக மாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழிவகை காணுமாறும் வேண்டி கேட்டுக் கொண்டோம்.
நம்முடைய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யு மாறும் மாற்றம் இருந்தால் மீண்டும் தகவல் தெரிவிக்குமாறும் கூறிவிட்டு நாம் திரும்பி விட்டோம். பேச்சுவார்த்தை பலனளிக்கா விட்டாலும் இரு தரப்பினரும் பரஸ்பரம் புரிந்து கொள்ளத்தக்க வகையில் மரியாதையான முறையிலும் இப்பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு எங்கள் அனைவருக்கும் தலித் தலைவர் ஒருவர் வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு தரப்பினர் இடையேயும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் என்ற முறையில் நாம் பொதுவானவர்கள் அல்லவா - இந்நிலையில் ஒரு தரப்பாக தலித் மக்களின் இல்லத்தில் உணவருந்த லாமா என நமது இயக்கத்திற்கு அப்பாற்பட்ட நண்பர்கள் சிலர் சர்ச்சையை எழுப்பினர். அப்போது நான் தலையிட்டு “நாம் பொதுவான வர்கள் அல்ல, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள தலித் மக்கள் பால் சார்பு நிலை எடுத்துள்ள வர்கள். அவர்களுக்காகவே பிற சாதி மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினோம். எனவே, நாம் திட்டமிட்டபடி தலித் மக்களின் இல்லத்தில் உணவருந்த வேண்டும். தவறான கருத்து ஏற்பட நாம் இடம் தரக்கூடாது” என கூறினோம். இதனை அந்த நண்பர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த அடிப்படையில் தலித் சமூக தலைவர் பொன்னையா இல்லத்தில் உணவருந்தினோம். எங்களுக்கு உணவளித்ததில் தலித் மக்களுக்கும், பொன்னையா அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சிதான்.
பிற சாதி மக்களின் பிரதிநிதிகளிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்த தகவலும் வராத நிலையில் தீண்டாமைச் சுவரை அப்புறப் படுத்த மாவட்ட அரசு நிர்வாகத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்தோம். முதல் கட்டமாக பேரையூரில் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறை கூவல் விடுத்தோம். மிக எழுச்சியான ஆர்ப் பாட்டமாக அது அமைந்தது. சிபிஐ(எம்) மும்- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்கள் மட்டுமல்ல, தலித் அல்லாத பிற சாதி மக்களும் கணிசமாக கலந்து கொண் டார்கள். இதனால் இப்போராட்டத்திற்கு ஜன நாயகத் தன்மை கிடைத்ததோடு பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பையும் பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சட்டவிரோதமான இந்த சுவரை அப்புறப் படுத்தும்படி பலமுறை வலியுறுத்தினோம். ஒவ்வொரு தடவையும் பார்க்கலாம், பார்க்க லாம் என்ற பதிலையே மாவட்ட ஆட்சித்தலை வர் கூறுகிறார். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கூற விரும்புகிறோம். “நீங்கள் எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டே இருந்தால் மக்களும் ஜனநாயக சக்திகளும் அணிதிரண்டு அவர்களாகவே இந்த சட்டவிரோத சுவரை அப்புறப்படுத்துவார்கள்” என எச்சரித்தோம்.பெரும்பாலான பத்திரிகைகள் இப்போராட் டத்தின் செய்தியை விரிவாக வெளியிட்டி ருந்தார்கள். இப்பிரச்சனையின் நியாயத்தை விளக்கி மதுரையில் பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றையும் நடத்தினோம். அதிலும் பிரபலமான பத்திரிகைகளிலிருந்து உட்பட பல்வேறு பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கையை மறுநாள் விரி வாக பல பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன.
உத்தபுரம் சுவர் குறித்த பிரச்சனை தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. இச்சுவர் பற்றிய விவாதம் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப் பினர் என்.நன்மாறன் இந்த சுவர் பற்றிய பிரச்சனையை கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் தமிழக முதல்வர் கலைஞரின் கவனத் திற்கு கொண்டு சென்றார். பத்திரிகையில் வெளிவந்த அந்த சுவரின் படத்தை நன்மாறன் தமிழக முதல்வரிடம் காண்பித்தார். அப்படத்தை பார்த்த கலைஞர் அவர்கள், “இது என்ன, பெர்லின் சுவர் போல இருக்கிறது” என வியப்பை வெளியிட்டார். இச்சுவரை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டுமென சிபிஐ(எம்) உள்பட பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தினர். இந்நிலையில், உத்தபுரம் சுவரை பார்வை யிட சிபிஐ(எம்) அப்போதைய அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் வருகை தருகிறார் என்ற செய்தி வெளியாயிற்று. இச்செய்தி தமிழகத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. உத்தபுரம் தலித் மக்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள பரவலான ஜனநாயக சக்திகள் இதனால் மிகுந்த உத்வேகமடைந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு உத்தபுரம் சுவரை உடைத்து தலித் மக்களுக்கு பொதுச் சாலையில் நடந்து செல்ல பாதை ஏற்படுத்தித் தருமாறும், பிரகாஷ்காரத் வரும்போது சுவர் அதன் பழைய வடிவத்தில் இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி, 06.05.2008 அன்று நள்ளிரவில் ஏராளமான காவலர்கள் உத்தபுரத்தில் குவிக்கப்பட்டனர். பல வருவாய்த்துறை அதிகாரிகளும் உத்தபுரம் வருகை தந்தனர். உத்தபுரம் சுவரின் ஒரு பகுதி இடித்துத் தள்ளப்பட்டது. அச்சுவரின் நடுவே தலித் மக்கள் நடந்து செல்ல பாதை உருவாக்கித் தரப்பட்டது. சுவர் உடைக்கப்பட்டு பாதை கிடைத்தது மட்டுமல்ல, தலித் மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து ஒரு சாலை அமைக்கப்பட்டு அது பொதுப் பாதையில் இணைக்கப்பட்டது.
இரவோடு இரவாக இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. தங்களது நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து தலித் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மறுநாள் காலை தமிழகத் தின் பிரதான பத்திரிகைகள் அனைத்திலும் தலைப்பு செய்தியே உத்தபுரம் சுவர் உடைப்பு தான். சுவர் உடைக்கப்பட்டு தலித் மக்களுக்கு சாலையும், பொது பாதையும் உருவாக்கப்பட்ட மறுநாள் காலை 11 மணி அளவில் பிரகாஷ்காரத் செங்கொடி இயக்க தலைவர்கள் புடைசூழ உத்தபுரம் வருகை தந்தார். உத்தபுரம் மக்கள் அலைகடல் என அணிதிரண்டு அவர்களை வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு முனைகளிலிருந்தும் இக்காட்சியை காண ஏராளமான தோழர்கள் உத்தபுரம் வந்திருந்தனர். என்.வரதராஜன், கே.வரதராசன், உ.ரா. வரதராஜன், பி.சம்பத், பி.மோகன் எம்.பி., என்.நன்மாறன் எம்.எல்.ஏ., சு.வெங்கடே சன், கே.சாமுவேல்ராஜ், பி.சுகந்தி, கே.சுவாமி நாதன் உட்பட பல தலைவர்களை அன்றைய தினம் உத்தபுரத்தில் காண முடிந்தது. சி.ராம கிருஷ்ணன், கே.ராஜேந்திரன், தங்கராஜ், எஸ்.கே.பொன்னுத்தாய், த.செல்லக் கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். உத்தபுரம் ஊர்த் தலைவர்கள் பொன்னையா, சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பெரு மகிழ்ச்சியுடன் பிரகாஷ்காரத் உள்ளிட்ட தலைவர்களை வரவேற்றனர். ஏராளமான பெண்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிரகாஷ்காரத் ஆற்றிய உரை உத்தபுரம் மக்களின் உத்வேகத்தை தட்டி எழுப்பியது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக சமூக சீர்திருத்த இயக்கத்தை செங்கொடி இயக்கம் எதிர்காலத்திலும் உறுதிபட முன்னெடுத்துச் செல்லும் என அவர் பிரகடனப்படுத்தியபோது விண்ணதிர கரவொலி எழுந்தது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.