articles

img

பல்கிப் பெருகும் ‘பட்டாளம்’ நிச்சயம் பதிலடி கொடுக்கும்! - எஸ்.பாலா

தொடர்ந்து தீவிரமடைந்து வரும் வேலை யின்மை குறித்து இந்திய பொருளா தார ஆய்வு மையம் பல்வேறு புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. 2021 நவம்பர் மாதம் 6.97 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2021 டிசம்பர் மாதத்தில் 7.9 சதவீதமாக அதிகரித்துள் ளது. இது தமிழகத்தில் 6.9 சதவீதமாக உள்ளது. இதே காலகட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 6.3 சதவீதமாகவும், 2017- 2018 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்தது. வேலையின்மையின் விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. மாதமாக, வருடமாக, குடும்பமாக எந்த முறையில் அளவிட்டாலும்  தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்நிலைக்கு ஒன்றிய பாஜக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே காரணம் ஆகும். 

 வேலைவாய்ப்புகளை  உருவாக்குவதற்கு மோடி அரசாங்கம் உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையும் கடந்த ஏழாண்டுகளில் எடுக்கவில்லை. மாறாக, தேசிய பணமாக்கல், திட்டம் என்ற பெயரால் அரசின் பொ துத்துறை நிறுவனங்களைச் சூறையாடி, இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் காரியத்தை மேற்கொண்டு வருகிறது. 

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 

கோவிட்-19 பேரிடர் காலத்திற்கு முன்பாக 2019- 2020 ஆம் ஆண்டில்  தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 40 கோடியே 89 லட்சம் ஆக இருந்தது. ஒவ்வொரு  ஆண்டும் வேலைவாய்ப்புச் சந்தையில் உழைப்பதற்கு தயாராக உள்ள கோடிக்கணக்கான பேர் இணைந்து வருகின்றனர். ஆனால் 2021 டிசம்பர் மாதத்தில் தொழி லாளர் பங்கேற்பு 40.6கோடி பேர் மட்டுமே ஆகும். 29 லட்சம் பேரின் வேலை பறிபோயுள்ளது என்பதுதான் இதன் பொருள். கடந்த சில ஆண்டுகளில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2016 இல் 46 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்து 2021 இல் 40 சதவிகிதத்திற்கும் அதிக மாகக் குறைந்துள்ளது. உலகிலேயே தொழிலாளர் பங்கேற்பு விகிதமானது இந்தியாவில் மிக மோசமான வீழ்ச்சியில்  இருக்கிறது. புதிதாக வேலை வாய்ப்பு சந்தையில் இணைந்தவர்களை சேர்க்காமல் பார்க்கும் போதே இவ்வளவு மோசமான நிலைமை உள்ளது. 

மாதாந்திர சம்பளதாரர்கள் 

வேலைவாய்ப்பில் மிகப்பெரிய சரிவு என்பது மாதாந் திர சம்பளம் பெறக்கூடிய பிரிவினர்கள் ஆவர். கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் மாதாந்திர சம்பளம் பெறக்கூடிய பிரிவினராக இருந்து தற்சமயம் தினசரி மற்றும் சம்பள பிரிவினராக மாறியுள்ளனர். அதேபோல தொழில் முனைவோர் 10 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்து அன்றாடம் சம்பளம் பெறக் கூடியவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து மாதாந்திர சம்பளதாரர்களின் வீழ்ச்சி நிகழ்ந்து வருகிறது. தினசரி சம்பளம் பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அன்றாடக் கூலி பெறுபவர்களாக பெரும் பகுதி இந்திய தொழிலாளி வர்க்கம் மிகத் தீவிரமாக மாற்றமடைந்து வருகிறது. மூலதனத்தின் லாப வேட்டை யின் விளைவாக இந்திய தொழிலாளி வர்க்கம் எந்த வித பாதுகாப்பும் இல்லாத தினக் கூலி தொழிலாளி வர்க்கமாக  மாறிவருகின்றது. சமீபத்தில் நாடாளு மன்றத்தில், 5 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன என்று அரசு தெரிவித்தது நினைவு கூரத்தக்கது. 

உற்பத்தி மற்றும்  சேவைத் துறைகளில்...

உற்பத்தி துறையில் 2019-20 காலகட்டத்திற்கும், தற்சமயம் 2021 டிசம்பர் மாதத்திற்கும் உள்ள வித்தி யாசம்- கிட்டத்தட்ட 98 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மற்ற துறைகளைக் காட்டிலும் உற்பத்தி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் தான் தரமான வேலை வாய்ப்புகளாக இருந்து வந்துள்ளன.  சேவைத் துறையும், கல்வித் துறையும் இக்காலத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து தப்பவில்லை. கல்வித்துறையில் 40 லட்சம் பேரும், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகளில் 50 லட்சம் பேரும் வேலை வாய்ப்புகளை இழந்து உள்ளனர்.   விவசாயம் மற்றும் சிறு வணிகம் மட்டுமே ஓரளவு வேலை வாய்ப்பைத் தந்துள்ளது. 

ஒரு குடும்பத்தில்  ஒருவருக்கு மட்டுமே... 

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் வீடுகளின் விகிதம் 2016 இல் 34.7 சதவீதத்தி லிருந்து 2017 இல் 32.3 சதவீதமாக வீழ்ந்தது; 2018 இல் 30.1 சதவீதமாக குறைந்துள்ளது. 2019 இல் அது மேலும் குறைந்து 28.4 சதவீதமாக ஆனது. 2020 ஆம் ஆண்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட வேலை செய்பவர்களு டனான வீட்டின் சராசரி விகிதம் 24.2 சதவீதமாக இன்னும் மோசமானது. ஏப்ரல் 2020 இல், நாடு பொது முடக்கத்தின் கீழ் வந்தபோது, இந்த விகிதம் 17.6 சதவீதமாகக் குறைந்தது.  2021 முதல் 11 மாதங்களில் இந்த விகிதம் 24 சதவீதமாக இருந்தது. 

2016ல் 35 சதவீதமாக இருந்த ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் குடும்பங்களின் எண்ணிக்கை, 2021ல் 24 சதவீதமாக குறைந்துள்ளது.   இது போன்ற மோசமான நிலைமை முன்னெப் போதும் இல்லை. ஒருவர் மட்டுமே பணிபுரியும் குடும்பங்களின் எண்ணிக்கை 2016ல் 59 சதவீதத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில்  தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மறுபக்கம் உற்பத்தித்துறை, மாதாந்திர சம்பளதாரர்கள் எண் ணிக்கை, தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என பல அம்சங்களிலும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. 

வேலையின்மை மிகத் தீவிரம் அடைந்துள்ள அதே வேளையில், இந்தியாவின் பில்லியனர்கள் பட்டியலின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களும் வறுமை, வேலையின்மையால் கடும்  நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நாட்டின் பிரதமர் மோடி 12 கோடி ரூபாய்க்கு புதிய கார் வாங்கி வலம் வரத் துவங்கியிருக்கிறார். 

‘ரிசர்வ் ஆர்மி’

வேலையின்மை என்பது முதலாளித்துவத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று. வேலையில்லா பட்டாளத்தை முதலாளித்துவம் நிரந்தரமாகவே வைத்திருக்கும். எல்லோருக்கும் வேலை தராது. வேலையில் இருப்பவர்களை மிரட்டவும், அவர்களது ஊதியத்தை குறைக்கவும், வேலையில்லாதவர்களை பணிந்து போகச் செய்யவும் இத்தகைய பெரிய பட்டா ளத்தை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டியது முதலா ளித்துவத்திற்கு அவசியமானதாகும். எனவே தான் இதை ‘ரிசர்வ் ஆர்மி ஆப் லேபர்’ (உழைப்பின் இருப்புப் படை) என்று மாமேதை மார்க்ஸ் குறிப்பிட்டார்.  மோடியின் ஆட்சியில் இந்த பட்டாளம் பல்கி பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த பட்டாளமே அவரது ஆட்சிக்கும் வினையாக முடியும். 

கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்